Sunday, July 6, 2014

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை


                                              
சேவ் தமிழ்ஸ் இயக்கம்  2008 -09 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது; ”குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடங்களுக்குள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் சமூகத்தைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாதவர்கள்;  போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை  உரிமையைப் பறிகொடுத்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவர்கள்; அரசியலை சாக்கடை என்று சொல்லி ஒதுங்கி நிற்பவர்கள்; நுகர்வியல் பண்பாட்டிற்குள் சிக்கி தனி மனிதர்களாக மாற்றப்பட்டவர்கள்; தனி மனித உழைப்பு, தனி மனித வெற்றி, தனி மனித உணர்வு, தனி மனித சிந்தனை, தனி மனிதப் பிரச்சனை என்று சமூகத்தை விட்டுப் பெருமளவில் அந்நியப்பட்டு போனவர்கள்.” இப்படியெல்லாம் அறியப்படுகின்ற நகர்ப்புறத்தில் உள்ள புதிய நடுத்தர வர்க்கப் பிரிவினரில் இருந்து வந்த சிலரால் தோற்றுவிக்கப்பட்டதே இவ்வியக்கம்.


 அன்றைய  நிலைமையில் ‘போரை நிறுத்துங்கள்; தமிழர்களைக் காப்பாற்றுங்கள்’ (Stop War; Save Tamils ) என்ற முழக்கத்தோடு செயல்படத் தொடங்கியதால் இவ்வியக்கத்தின் பெயரே ’சேவ் தமிழ்சு’ (Save Tamils) என்று மாறிப் போனது. போர் நின்றுவிடும் என்று நம்பினோம். ஆனால் அது பேரழிவோடு முடிவுக்கு வந்தது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று வகைதொகையின்றி நடந்த படுகொலைகள், உலகின் மிகப் பெரிய ’ சனநாயக’ நாடென்று சொல்லப்படும் இந்தியா போருக்கு துணை நின்றமை, மெளனத்தோடு வேடிக்கை பார்த்த சர்வதேச  சமூகம், தமிழ்நாட்டில் நடந்த தீக்குளிப்புகள், போரை நிறுத்த முடியாமல் கையறு நிலையில் நின்ற  தமிழ்நாடு – இவை அனைத்தும் வாழ்நாள் அர்ப்பணிப்புக்கும் நீண்ட போராட்டத்திற்கும் கட்டளையிட்டன. தொடர்ந்து செயல்பட்டோம். ஒன்றன் பின் ஒன்றாக தமிழ்நாட்டில் நிலவும் சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்துவகை  முரண்பாடுகளிலும் ஒடுக்கப்பட்டோர்  பக்கம் நிற்கத் தொடங்கினோம். வளங்களையும், வாழ்வாதாரங்களையும் காக்கும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆதரவாக நடுத்தர வர்க்கத்தினரிடையே கருத்தை உருவாக்க முயன்றோம். ’வளர்ச்சி’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் உலகமய பொருளாதார கொள்கைகளை அம்பலப்படுத்தத் தொடங்கினோம். சமூகத்தில் இருந்து பிரித்து தனி மனிதர்கள் ஆக்கப்பட்ட  நகர்ப்புற நடுத்தர வர்கத்தினரிடம் கூட்டு உணர்வும், கூட்டு சிந்தனையும், கூட்டு உரிமை பற்றி விழிப்பும் வளர்க்கப் பாடுபடுகின்றோம்.

சமூகத்தின் உழைப்பால் விளைந்த நாங்கள் எங்களுக்கு வாய்க்கப்பெற்றுள்ள தொழில்நுட்ப ஆற்றல்களை இச்சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கும் நேர்வகை மாற்றத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.   இந்தப் பயணத்தில் சமூக மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கங்களும், அமைப்புகளும், பல ஆண்டுகள் போராட்டக் களத்தில் நின்றதால் பட்டறிவு பெற்ற தோழர்களும் எமக்கு தோள் கொடுத்து இச்சமூகத்திற்கு பயனுறும் வகையில் எம்மை வளர்த்தெடுத்தார்கள்.
இப்போது  எமக்கு அகவை ஐந்து நிறைந்து  ஆறாம் ஆண்டில் நடை போட்டுக் கொண்டிருக்கின்றோம். இயக்கத்தின் பெயர் தமிழில் இல்லை என்பதும் பாதிக்கப்பட்ட கையறு நிலையினராக தமிழர்களைக் காட்டுவதும் பெயர் மாற்றத்தைக் கோரி நிற்கும் முதன்மைக் காரணங்கள். வரலாற்றின் இந்தக் கட்டத்திற்கும்  எமது செயற்பாட்டுக்கும் பொருத்தமான  ஒரு பெயரைத்  தேடி கண்டடைந்துள்ளோம். அப்பெயர் தான் இளந்தமிழகம்!

கடந்த காலத்தை உள்வாங்கி நிகழ்காலத்தில் ஊன்றி நின்று எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து, பழையன கழித்து புதியன புகுத்தும் மரபினை ஏற்று, புதுமையை உட்செரித்து மாறவும் மாற்றவும் துணிவு கொண்டு, புதிய சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணாய் திகழும் இளம்பருவத்தின் பண்புகளோடு மிளிரும் இளந்தமிழகத்தின் ஓர் அமைப்பு வடிவமே இந்த இளந்தமிழகம். இது இளந்தமிழகம்! சமூக நீதிக்காகவும், சனநாயகத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் உள்ளாற்றலுடன் எழும் தமிழகம்!
21 ஆம் நூற்றாண்டில் தமிழகம் என்ற தலைப்பிட்ட இந்நிகழ்வினூடாக புதிய பெயரை அறிவித்து எமது கொள்கை அறிக்கையை வெளியிடுகின்றோம். தமிழகத்தின் இன்றைய நிலை, தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால தேவை ஆகியவைக் குறித்து பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த தோழர்களும், ஆன்றோர் அறிஞர் பெருமக்களும் உரையாற்ற இருக்கின்றார்கள். இதை படித்துக்  கொண்டிருக்கும் உங்களையும் இந்நிகழ்வுக்கு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
                                    
தலைப்பு: 21 ஆம் நூற்றாண்டில் தமிழகம்

நாள்: 13-ஜூலை-2014, நேரம்: மாலை 3 மணி முதல் 8 மணி வரை

இடம்: செ.தெ. நாயகம் பள்ளி, வெங்கட்நாராயணா சாலை,(திருப்பதி கோயில்) எதிரில்), தியாகராய நகர், சென்னை.

சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் பெயர் மாற்றம், கொள்கை அறிக்கை வெளியீடு
இளந்தமிழகம் இயக்கம்
Young Tamil Nadu Movement
www.ilanthamizhagam.com
iianthamizhagam@gmail.com  , 98844 68039, 99419 06390
முகநூல், ட்விட்டர்: இளந்தமிழகம்
அலுவலக முகவரி: 42/21, மேட்டுத் தெரு, வேளச்சேரி, சென்னை 600 042.

                                                
முதலாம் அமர்வு:

தலைமை: தோழர். சமந்தா, பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

வரவேற்புரை:  தோழர். சரவணக்குமார், பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

சிறப்புரை:

கவிஞர் இன்குலாப்

பேராசிரியர் மணிவண்ணன், அரசியல் துறை தலைவர், சென்னை பல்கலைகழகம்
தோழர் சுந்தரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

தோழர் சீதாராம், மாணவ செயற்பாட்டாளர், தெலங்கானா

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை – தோழர் செய்யது, பொதுக் குழு உறுப்பினர், இளந்தமிழகம்
நன்றியுரை: தோழர் சஃபானா, இளந்தமிழகம்
கலை நிகழ்ச்சிகள்  - பறை இசை, நடன நிகழ்ச்சிகள், நாடகம், கவிதை , பாடல்.

தோழமைகள் மதிப்பியல் நிகழ்வு

இரண்டாம் அமர்வு:

தலைமை: ஜார்ஜ், பொருளாளர், இளந்தமிழகம்

வரவேற்புரை: தோழர் நற்றமிழன், பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

சிறப்புரை:

தோழர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி

தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் மீ.த. பாண்டியன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட கட்சி(மா.லெ), மக்கள் விடுதலை, தமிழ்நாடு

தோழர் வ.கீதா, அரசியல் செயற்பாட்டாளர்.

ஈழ விடுதலை – எமது பார்வை: தோழர் இளங்கோ, செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்

தமிழகத்தின் சமூக வளர்ச்சி நிலை – எமது பார்வை தோழர் பரிமளா, செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி நிலை – எமது பார்வை தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

இளந்தமிழகம் இயக்கத்தின் நோக்கமும், தேவையும்  - தோழர் கதிரவன், செயற் குழு உறுப்பினர், இளந்தமிழகம்
நன்றியுரை: தோழர் பிரவீன் ராஜ், செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம்.

No comments:

Post a Comment