Thursday, April 17, 2014

எம்தாய் பிள்ளை நான்தான்


தலையில் பிறந்ததாய்
தலைக்கனம் கொண்டவன் - என்
தலைமேல் கால் வைத்தான்
வாமனக் காலால் எனைமிதித்தான்

தோள் வழியில் பிறந்ததாய்
திமிர் மொழி கொண்டவன் - எனை
ஏகலைவன் என்றான்- என்
வில் கலையெல்லாம் தன் கலையென்று
என் பெரு விரலைக் கொன்றான்

மாமுடி மணிமுடி தன்முடி சூட - என்
தெருவடி தேடி வந்தான்
தீண்டா எனை தீண்டித் தழுவி - என்
வாக்குகளை வென்றான்

ஓர் முடிவோடு போர்முடியொன்று - நாங்கள்
நேர்முடி சேர்கையிலே
தீமுடி கொண்டு எம் உயர்குடியெல்லாம்
வெண்மணியில் கொன்றாய் - வெறும்
நெல் மணிதான் என்றாய்.


திக்குகள் எட்டும் கொட்டும் மழைக்கு
தீண்டாமை தெரியாது - எனை
தீண்டிப் போகும் காற்றுக்கு வர்ண
பேதங்கள் புரியாது

வெஞ்சினம் கொண்ட உயர் சாதிகளே - எங்கள்
பிறப்பை பழிக்காதே - நாங்கள்
அஞ்சிடுவோமென மனப்பால் குடித்து
அழிவை தேடாதே

ராமனை வணங்கிய ராமானுஜனுக்கு
ராமனின் பிள்ளை நான் - நம்
தேச மகாத்மா காந்தியாருக்கு
ஹரியின் பிள்ளை நான்

யாரோ பிள்ளை நான்தான் என்கிற
கரையே இனி வேண்டாம்
எம்தாய் பிள்ளை நான்தான் என்கிற
நிலையே அது போதும் - அது
நிலைத்தே தான் வேண்டும்!!!!

--- பாரதிதாசன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

1 comment:

  1. // யாரோ பிள்ளை நான்தான் என்கிற
    கரையே இனி வேண்டாம்
    எம்தாய் பிள்ளை நான்தான் என்கிற
    நிலையே அது போதும் - அது
    நிலைத்தே தான் வேண்டும்!!!! //

    வலிமையான வரிகள்

    ReplyDelete