Tuesday, March 25, 2014

ஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்..



ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அம்மன்றத்தில் உள்ள 45 நாடுகளின் பிரதிநிதிகளிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீர்மானத்தின் முதல் வரைவைவிட (முதல் வரைவை குறித்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு http://save-tamils.blogspot.in/2014/03/blog-post_3351.html ) இரண்டாம் வரைவு வலுகுறைந்துள்ளது, குறிப்பாக சரத்து 9ல் "இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஐநா மனித உரிமை மன்ற ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டும்" என்று தீர்மானத்தை இன்னும் நீர்த்து போகச் செய்ததில் இந்தியா அரசின் பங்கு அதிகம்.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டங்களாலும், சர்வதேச மனித உரிமை அறிக்கைகளாலும், அதோடு தங்களது நலன்கள் அடிப்படையிலும் பல மேற்குல நாடுகள் நடந்துகொண்டிருக்கும் ஐநா மனித உரிமை மன்ற விவாதங்களில் "இலங்கை அரசு மீது ஒரு பன்னாட்டு புலனாய்வு உடனடியாக தேவை" என்ற கருத்தை வெளிப்படையாக முன்வைக்கின்றன. ஆனால் இந்தியாவோ தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக காட்டிக்கொண்டு எப்படியாவது பன்னாட்டு புலனாய்வை தடுத்து இலங்கையை காக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது. சீனா-ரஷ்யா ஆதிக்கத்தைத் தகர்த்து தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள‌ இலங்கையில் தனக்கான இடத்தை பிடிக்கத் துடிக்கும் அமெரிக்க-இங்கிலாந்து கூட இலங்கை மீது தீர்மானத்தை கொண்டுவரும் இவ்வேளையில் இலங்கை-இந்தியா கூட்டணி மட்டும் உடையாமல் அப்படியே இருக்கிறது.

இந்தியா-இலங்கை கூட்டை உடைக்க ஏழரை கோடி மக்கள் கொண்ட தமிழகத்தால் தான் முடியும். இந்தியாவின் தீர்மானத் தலையீட்டைத் தடுத்து வலுவாக்க வேண்டிய அல்லது திருத்தி நம்முடைய கோரிக்கைகள் உள்ளடக்கிய தீர்மானம் கொண்டுவர வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு உண்டு. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இன்னமும் நம் குழப்பங்கள் தீரவில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்பதில் மெத்தனமாக இருக்கிறோம்.

தீர்மானத்தை ஒட்டி ஈழத்தமிழர்களின் முதன்மை எதிரியான சிங்கள இனவெறி அரசை தனிமைபடுத்த கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துகின்றோமா? நிலைப்பாடுகள் எடுக்கும் போது யதார்த்த அரசியல் நிலையிலிருந்து எடுக்காமல், கற்பனையில் ஆகாயத்தில் கோட்டை கட்டுவது எவ்விதத்திலும் இன்றும் இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ்ர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. போருக்கு பிந்தைய புலம்பெயர்ந், தமிழ்க‌ தமிழர்களின் ஐந்தாண்டுகால போராட்டங்களின் தொடர்ச்சியாக சர்வதேச சூழல் இப்போது சிங்கள அரசிற்கு எதிராக மாறியுள்ளது. சிங்கள அரசு மீது பன்னாட்டு பொறியமைவை ஏற்படுத்துவதன் மூலம் அதனை சர்வதேச சமுதாயத்தில் இருந்து தனிமைபடுத்தி ஈழத் தமிழர்கள் மீது தொடரும் கட்டமைப்பு ரீதியிலான இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும். ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்தில் சுதந்திரமான(தற்சார்புள்ள) பன்னாட்டு புலனாய்வை கொண்டுவருவதே நம் உடனடி இலக்காக இருக்க வேண்டும்.

அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கலாமா? எதிர்க்கலாமா?

அமெரிக்கத் தீர்மானம் `ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இலங்கை அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை வெளிப்படையாக கோரவில்லை. ஈழம், தமிழர் என்ற வார்த்தைகள் இல்லை, அதேவேளை 13வது சட்ட திருத்தம் எனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வை கோருகிறது. (இதன் மூலம் இந்தியாவின் பங்கு இருப்பது வெளிப்படையாக தெரிகின்றது). ஆனால் இந்த தீர்மானத்தில் குறைந்த பட்சமாக நாம் கோருவது ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை, போர்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்த இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த புலனாய்வு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு குறைவாக கோரும் எதையும் நாம் ஏற்கப்போவதில்லை.


ஆனால் 13வது சட்டத் திருத்தத்தோடு ஈழத்தமிழர், இனப்படுகொலை என்ற வார்த்தைகளும் இல்லாமல் நமக்கு சாதகமான ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு மட்டும் வந்தால் அது ஈழ விடுதலை போராட்டத்தை இடை மறிக்கும் என்று எண்ணுவ‌வதே நம்மில் சிலருக்கு இருக்கும் சிக்கல். ஈழத் தமிழர்களின் இன்றைய ய‌தார்த்த நிலையைத் தெரியாதவர்கள் பன்னாட்டு புலனாய்வே இருந்தாலும் தீர்மானம் நிறைவேறினால் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டதாகிவிடும், என்றும்,போற்குற்றங்களை மட்டும் புலனாய்வு கொண்டுவரும் சர்வதேச சமூகம் புலிகளையும் விசாரித்து, அவர்களை முடக்கிவிடுவார்கள் என்றெல்லாம் தேவையற்ற குழப்பங்கள் எழுப்பப்ப‌டுகின்றன. என்ன நேர்ந்தாலும் ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழக் கோரிக்கையை கைவிடப்போவதில்லை, புலிகளின் மீது வைத்த குற்றங்களுக்கு எந்த சான்றும் இல்லை, அதே நேரம் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான எல்லா சான்றுகளும் இவ்விசாரணையில் மீண்டும் வைக்கப்பட்டு, தமிழர்களுக்கு ஈடு செய் நீதி கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையும், தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வும்!

போருக்கு பின்னால் 90 ஆயிரம் துணையை இழந்த‌ பெண்கள் ஈழத்தில் தங்கள்குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பல கிராமங்களில் 80 விழுக்காடு பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

மீன்பிடித்தல், விவசாயம் போன்ற தொழில்களை செய்வதை தடுக்கிறது சிங்கள அரசு.

விவசாய விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு ராணுவத்திற்கும் சிங்கள குடியமர்வுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

5 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ராணுவம் வடக்குப் பகுதியில் இன்றும் குவிக்கப்பட்டுள்ளது.

பல இந்து, முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் புத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதோடு பண்பாட்டு சிதைவு திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

சொந்த தொழில் தொடங்க அனுமதி மறுக்கும் அரசு, திட்டமிட்டு வடக்கு கிழக்கின் தற்சார்பு பொருளாதாரத்தை அழித்து, அதை தெற்கை சார்ந்த பொருளாதாரமாக மாற்றுகின்றது.

போரினால் கை கால் இழந்து நகர முடியாத அளவிற்கு ஊனமான நிலையில் பலர் உள்ளனர்.

போரின் போது சரணடைந்த பல போராளிகளை பற்றி இன்னமும் தகவல் இல்லை. காணமல் போனதாக கூறப்படும் பல்லாயிரக்கானக்கானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

இன்றளவும் வெள்ளை வேன் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அப்பாவி மக்கள், ஆண்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவது தொடர்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள் உள்ளே நுழைவதில் இன்றும் சிக்கல் இருக்கிறது.

இனப்படுகொலை இலங்கை மீது ஏற்பட்டுக்கொண்டிருந்த சர்வதேச அழுத்தங்களைத் தடுக்க நினைத்த இந்தியா, ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு சிங்கள அரசால் கிடப்பில் கிடந்த இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டதிருத்தத்தை அமுல்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தி, இலங்கை விடுதலைப்புலிகளின் மீதான பயங்கரவாத போரை முடித்து (இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலான‌ 'தி இந்து' இன்றளவும் இப்படித்தான் எழுதிவருகிறது) சனநாயகத்தை அங்கு மலரச்செய்து உலகிற்கு காட்ட முயற்சித்தது இந்திய-இலங்கைக் கூட்டணி.


வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு நிராகரிப்பு, காணி(நில) உரிமை-போலிஸ் உரிமை கூட இல்லாத நகராட்சி அந்தஸ்த்துள்ள மாகாண சபை, ஒன்றுபட்டு இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற 13வது சட்டதிருத்தம் தங்களது ஈழ தேசிய விடுதலைக்கு எதிரானது என்று தெரிந்தும் தங்களின் இலட்சியமான தனித் தமிழீழ கோரிக்கையை தூர இலக்காக கொண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஈழத்தமிழர்கள் இடை நிவாரணமாக பயன்படுத்திக்கொண்டார்கள். ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சமாவது மீண்டு சிவில் நிர்வாகம் கிடைக்க 70% அதிகமான மக்கள் தேர்தலில் வாக்களித்தனர், தாங்கள் ஈழக் கோரிக்கையை கைவிடவில்லை என்பதற்கு சிங்கள ஆளும் வர்க்க கூட்டணிக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தனர். தாயக நில அபகரிப்பு, வாழ்வாதார நெருக்கடி, வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் மரண வேதனை என்ற கோரப்பிடியில் இருக்கும் மக்களால் அப்படித்தான் செயல்பட முடியும். அதுதான் சரியும் கூட.

தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் ஈழ ஆதரவு போராட்டங்களே ஈழ மக்களுக்கு நம்பிக்கை. சிறுசிறு வழிகளில் சனநாயக போராட்டங்களை அவ்வப்போது எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சனநாயக வெளி கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. உதாரணம் காமன்வெல்த் மாநாட்டின் போது காணாமல் போனவர்களை மீட்டுக் கொடுக்கும்படி காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகளை நோக்கி வீதிக்கு வந்து போராடினார்கள்.

ஏன் வேண்டும் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு?

கடந்த ஆண்டு ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளை இலங்கைக்கு விசாரிக்க வரும்போது சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புகள் பல ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். பன்னாட்டு புலனாய்வு வரும்போது சர்வதேச இடையூறு வரும், அப்படியொரு சர்வதேச பொறியமைவு வந்தால் ஈழத்தின் மீதான ராணுவபிடியை விலக்க வேண்டிருக்கும் என்பது சிங்கள அரசு தரப்பிற்கு நன்றாக தெரிகிறது.

அதனால்தான் சிங்கள இனவெறி அரசை உலகிற்கு அம்பலபடுத்தவும், சிங்கள அரசை உலக அரங்கில் இருந்து தனிமைபடுத்தவும், நிலங்கள் அபகரிப்பு, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு, மக்களின் வாழ்வாதார நெருக்கடி, பண்பாட்டு சிதைப்பு என 2009 இனஅழிப்பு போருக்கு பின்னும் தொடரும் கட்டமைப்பு ரீதியான இனஅழிப்பு செய்வதை உடனே தடுக்கவும், ஈழத்தில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தை வெளியேற்றவும், மிகப்பெரிய மரண நெருக்கடியில் இருக்கும் ஈழ மக்களுக்கு போராட ஒரு சனநாயக வெளியை ஏற்படவும் இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலானாய்வு நடத்தக் ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கோருகிறார்கள். நாமும் அந்தக் கோரிக்கையை வலியிறுத்தி போராடிவருகிறோம்.

பன்னாட்டு புலனாய்வே தீர்வை கொடுத்துவிடுமா?

தற்சார்புள்ள பன்னாட்டு புலானாய்வு நடத்துவதாலே, அதுவும் குறிப்பாக இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு நடத்தினால் தான் சர்வதேச நாடுகளும் ஐநாவும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தும் என்று சிலர் கருதி வருகிறார்கள். அது தவறான கருத்து. ஈழ விடுதலை பாதையில் இன்று மிக முக்கிய பகுதி தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை நடத்த கோருவது. அவ்வளவே, அதுவே தீர்வை எழுதிவிடாது.


சர்வதேச சட்டங்களின் படி, ஈழ மக்களின் சாட்சியங்களை வைத்து புலனாய்வு முடிந்து கிடைக்கும் தீர்ப்பை வைத்து மீண்டும் சர்வதேச நீதிமன்றங்களை அணுகி சர்வதேச அமைப்புகள் மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோர வேண்டும், அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வின் ஊடாக கிடைக்கும் சனநாயக வெளியைப் பயன்படுத்தி ஈழ மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினாலும், சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினாலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி ஈழத்தை வென்றெடுக்க முடியும்.

இவையெல்லாம் ஐநா அமைக்கும் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை இலங்கை அனுமதித்தால் தான் நடக்கும், ஒருவேளை இலங்கை அதை புறக்கணித்தால் உலக‌ நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டுவரும், ஒரு அழுத்தமான பொழ்றியமைவு இலங்கை மீது ஏற்படும். அவ்வாறாக படிப்படியான பன்னாட்டுசர்வதேச பொருளாதாரத் தடை, தொடர்ச்சியான பண்பாட்டு, விளையாட்டு புறக்கணிப்பின் மூலம், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக ஈழத்தின் மீதான இலங்கையின் பிடியை தளர்த்தி ஈழ விடுதலையை அங்கீகரிக்க முடியும். ஆகவே தான் இன்றைய சூழலில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு முதன்மையானது என அதனை முன்னெடுக்கிறோம்.

எப்படி சாதிக்கப் போகிறோம்?

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐநா உலக அரசுகளின் சபை. ஐநாவில் பாதுகாப்பு அவையே அதிக அதிகாரம் பெற்றது. பாதுகாப்பு அவையில் இருக்கும் 5 வல்லரசு நாடுகளில் எதுவொன்றும் தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலம் அதில் வரும் எந்த தீர்மானத்தையும் தோற்கடிக்க முடியும். ஐநா மனித உரிமை மன்றத்தில் தான் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் இல்லை, இது ஓரளவிற்கு சனநாயகமுள்ள மன்றம். எந்த ஒரு தேசிய இனப்போராட்டமும் சர்வதேச களத்தில் தான் முடிவுபெறுகிறது. எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடைமுறையில் இருக்கும் இந்த சர்வதேச அமைப்பை, சிங்கள அரசை தனிமைபடுத்த பயன்படுத்துவது அவசியமானது. அதன் மூலம் தமிழீழத் தேசிய இனத்தின் மீது இன்றளவும் நடைபெற்று வரும் மிகப்பெரிய ஒடுக்குமுறைகளை, இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியும்.


ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழகத் தமிழர்களின் ஐந்தாண்டு போராட்டங்கள், சர்வதேச மனித உரிமைமன்றங்களின் அறிக்கைகள், வெளிவந்த சாட்சிகள், ஆவணங்களின் காரணமாகத்தான் உலக நாடுகள் இன்று இலங்கை மீது ”தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு உடனடியாகத் தேவை” என்று பேசிவருகின்றன. ஆசியாவின் வல்லரசான சீனாவின் ஆதிக்கத்தை உடைத்து
தெற்காசிய பிராந்தியத்தில் தனது நலனுக்காக, கடந்த இரண்டு தீர்மானங்களாக இலங்கை மீது உள்நாட்டு விசாரனையை மட்டும் கோரிய அமெரிக்கா 2014 தீர்மானத்தில், 8வது சரத்தில், பன்னாட்டு புலனாய்வு நடத்த ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகத்தைக் கோருகிறது. நமது உடனடி இலக்கான “தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை” அமெரிக்காவோ, கியூபாவோ, தென்னாப்பிரிக்காவோ எந்த அரசு கொண்டுவந்தால் என்ன, அதன் விளைவு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவப்போகிறது. அதனால் அதனை வரவேற்பது நமது கடமையாகும்.


2009க்கு முன்புவரை தனது ராஜதந்திரம் மூலம் அனைத்து அரசுகளையும் ஓரணியில் சேர்த்து ஈழத்தமிழர் தரப்பை தனிமைபடுத்தி பெரும் இனப்படுகொலையை செய்துமுடித்தது இலங்கை அரசு. வல்லரசு நாடுகளுக்குள் இருக்கும் போட்டியால், மேற்குலக நாடுகள் இன்று “இலங்கை மீது பன்னாட்டு புலனாய்வு உடனே வேண்டும்” என்று திரும்பியுள்ள நிலையில் உலக அரங்கில் சிங்கள அரசை
தனிமைபடுத்த கிடைத்த நல்ல தருணம் இது. போருக்குப்பின் ஐந்தாண்டுகளாக தொடரும் இன அழிப்பில் இருந்து தாயத்தை காப்பதற்கு இது மிக அவசியமானதாகும்.


இந்த பன்னாட்டு புலனாய்வு எனும் சர்வதேச பொறியமைவை சரியாக பயன்படுத்தாமல், ”அமெரிக்கா இலங்கையை இன்றும் காக்க நினைக்கிறது, அமெரிக்கா-இங்கிலாந்து-இந்தியா-இலங்கை-ஐநா அனைவரும் கூட்டு இனப்படுகொலையாளிகள், அன்றும் கூட்டாளிகள் இன்றும் கூட்டாளிகள், அனைவரும் இனப்படுகொலைக்காக உடனே தண்டிக்கப்பட வேண்டும்” என்பது யாரிடமும் கோரிக்கை வைக்க முடியாததகவும், சிங்கள அரசை தனிமைப்படுவதைத் தடுப்பதாகவும், சிங்கள அரசு விரும்பிய வேலையைச் செய்வதாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை செய்யாததாகவும் அமைந்து விடும். இந்த தருணத்தில் அனைவரையும்
தண்டிப்பது முக்கியமா? அல்லது இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அரசியல் நீதியாக தமிழீழம் அமைய இலங்கை அரசு மீது சர்வதேச பொறியமைவு ஏற்படுத்துவது முக்கியமா? இந்த நேரத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை தவறவிடுவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாய் முடியும்.


இந்தியாவை நோக்கி...


ஏழரை கோடித் தமிழர்களை தன் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்திய அரசைத்தான், ஐநா மனித உரிமை மன்றத்தில், தீர்மானத்தை திருத்தம் செய்யவோ அல்லது எதிர்த்து வாக்களிக்கவோ அல்லது வேறு தீர்மானம் கொண்டுவரவோ நாம்
கோரமுடியும். தன் குடிமக்களின் கோரிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை அதற்குண்டு. 2009 இனப்படுகொலையில் கூட்டுக்குற்றவாளி என்பது மட்டுமல்ல, இன்றளவும் உலக அரங்கில் சிங்கள அரசை காக்கும் வேலையை செய்கிறது இந்தியா.
அந்த நட்பை முறித்து ஈழ விடுதலைக்கு பாதை அமைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்குண்டு. இந்தத் தருணத்தில் மாற்றுத் தீர்மானம் கொண்டுவர அரசேதும் இல்லாத நாம், அமெரிக்கத் தீர்மானத்தை எரிப்பதாலோ, எதிர்ப்பதாலோ, ஐநாவை
புறக்கணிப்பதாலோ எந்த பயனும் இல்லை. அது தமிழக போராட்டங்களை நீர்த்துப்போகவே செய்யும்.

அதனால் தான் நமது உடனடி இலக்கான, இலங்கை மீது "தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு" நடத்த "புலனாய்வு ஆணையம்" அமைத்திட ஐநா மனித உரிமை மன்றத்தில் உடனடியாக வகை செய்! என்று இந்தியாவை நோக்கி, குவிமையப்படுத்தி கோரிக்கை
வைக்கிறோம். இது இந்தியாவை பணிந்து கேட்கும் கோரிக்கை அல்ல, இது தமிழ்த் தேசிய கோரிக்கை, தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் குரலாக தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட கோரிக்கை. இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்கி நமது இலக்கை அடைய ஒன்றிணைவோம், போராடுவோம்,வெற்றிபெறுவோம்.

ஸ்நாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment