Sunday, March 23, 2014

ஆளுநர் மாளிகை முற்றுகை


ஆளுநர் மாளிகை முற்றுகை - நாள்: மார்ச் 24, திங்கள் கிழமை காலை 10 மணி


அன்று வன்னியில்…. இன்று ஜெனிவாவில்…


அன்று:

ஐந்தாண்டுகளுக்கு முன் 2009 இல் இதே நேரத்தில் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலோ நாடாளுமன்ற தேர்தல். இங்குள்ள கட்சிகள் வாக்கு சேகரித்துக் கொண்டிந்தன. அங்கு மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்தது; போரும் முடிந்தது. 1.5 இலட்சம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டிருந்தார்கள்.


ஈழத்தில் இன்று வரை :

போர் முடிந்தாலும் சிங்கள அரசின் கட்டமைப்புரீதியான தமிழின அழிப்பு தொடர்கின்றது. தமிழர் தாயகப் பகுதியில் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. தமிழர் நிலங்களைப் பறிக்கின்றது. சிங்களர்களைக் குடியேற்றி வருகின்றது. தமிழர்தம் மத அடையாளங்களை அழித்து பெளத்த அடையாளங்களை நிறுவி வருகின்றது. ஆள் கடத்தல், சட்ட விரோதக் கைதுகள், கொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த யதார்த்தம் தான் எந்த ஒரு சிறு வாய்ப்பையும் தவற விட்டுவிடக் கூடாதென்று நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இது வரை:

2008-09 ஆம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் நடந்த சர்வதேச விதிமீறல்கள் குறித்த காணொளிகள், புகைப்பட ஆதாரங்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாய அறிக்கைகள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் வெளிவந்தன. ஐ.நா. மூன்று நிபுணர் குழு தனது விசாரணையின் முடிவாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இந்தப் பின்னணியில் இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது புரிந்த இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம். அதன் மூலம்,


• சிங்கள இனவெறியை உலகத்திற்கு அம்பலப்படுத்த முடியும்.

• சிங்கள அரசை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியும்.

• சிங்கள இராணுவத்தைத் தமிழீழப் பகுதியில் நிறுத்தி வைக்க முடியாதபடி அழுத்தம் கொடுக்க முடியும்.

• தமி்ழர் நிலங்களைப் பறிப்பதை கேள்விக்குள்ளாக்க முடியும்.

இதன் விளைவாய் ஈழத்தில் போராட்ட வெளி விரிவாகும். மக்கள் மீண்டெழுவர்!

இன்று:

உள்நாட்டு விசாரணை என்று சிங்கள அரசு உலகின் கண்களில் மண்ணைத் தூவப் பார்க்கும் நிலையில், இலங்கை சென்று வந்த ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கை அரசு புரிந்த சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். நமது கோரிக்கை உலக அரங்கில் இன்று வலுப்பெற்று வருகின்றது.

இந்நிலையில்தான், இன அழிப்புப் போரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களைப் பயன்படுத்தி சீன சார்பு இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவப் பார்க்கின்றன.

ஜெனிவாவில் மார்ச் 3 முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கூட்டத் தொடரில் அமெரிக்கா தலைமையிலான ஐந்து அரசுகள் சேர்ந்து தீர்மான வரைவை முன் வைத்துள்ளன. அந்த வரைவு விவாதிக்கப்பட்டு மார்ச் 26 ஆம் நாள் நிறைவேற இருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகையே தன் பக்கம் அணி திரட்டி வைத்திருந்த சிங்கள அரசு இன்று தடுமாறி நிற்கின்றது.

தீர்மானத்தின் சாரம்:

அந்த வரைவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று வரையறுக்கப்பட வில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்; நம்பத்தகுந்த உள்நாட்டு புலனாய்வு நடத்தப்பட வேண்டும்; இதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் கண்காணிக்க வேண்டும் என்கின்றது தீர்மானம். இத்தனையும் நாம் ஏற்காதவையென்றாலும் நாம் கோரியவற்றில் ஒன்றும் அவ்வரைவில் இருக்கின்றது. அது தான், ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகமே இரு தரப்பும் புரிந்த குற்றங்கள் மீது புலனாய்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை.

இந்தப் பரிந்துரையில் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வுக்கான கரு அடங்கியுள்ளது. இதைத் தான் நாம் பற்றிப் பிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றோம். ஆனால் சிங்கள அரசு இதை கலைத்துவிட வேண்டும்; சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வுக்கான சுவடு கூட தீர்மானத்தில் இருந்துவிடக் கூடாது என்று பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருக்கின்றது.


தடைக்கல்லாய் இந்தியா!

இந்திய அரசு வெளித்தோற்றத்தில் மெளனம் காக்கின்றது. ஆனால் உண்மையில் சிங்கள அரசைக் காக்கின்றது. இந்தியாவின் துணையோடு ஒரு முக்கியத் திருத்தம் நடந்தேறிவிட்டது. ஐ.நா. மனித உரிமை மன்றம் இலங்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்றால் இலங்கையின் உடன்பாடும் ஆலோசித்தலும் முன் நிபந்தனையென்று மாற்றப்பட்டுவிட்டது.

பன்னாட்டுப் புலனாய்வுக்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக சட்டப் பேரவை. ஒரு பக்கம் அத்தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் ஏழு கோடித் தமிழர்களின் அரசியல் உரிமையைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு. மறுபக்கம் காங்கிரசு எதிர்ப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட ஈழ ஆதரவுப் போராட்டத்தின் பயனாய் காங்கிரசோடு எவரும் கூட்டணி சேரவில்லை. அதனாலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிக்கும் சரி அத்தீர்மானத்தை ஆதரித்த கட்சிகளுக்கும் சரி ஈழத்தின் பெயரால் வந்தவர்களுக்கும் சரி காங்கிரசை எதிர்த்தவர்களுக்கும் சரி ஈழப் பிரச்சனை இன்று தேவையற்றதாகிவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்விட்ட பிழையை இப்போதும் விடப் போகின்றோமா?


அன்று வன்னியில் நடந்தது உள்நாட்டுப் போர். இன்று ஜெனிவாவில் நடப்பது சிங்களருக்கு தமிழருக்கும் இடையேயான சர்வதேசப் போர். இந்தக் களத்தில் எப்படியேனும் ஒரு சுதந்திரமானப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தச் சொல்லும் தீர்மானம் வரச் செய்ய வேண்டும். வெளிப்படையான புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதுவே நமது குறி.

பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்கத் துடிக்கும் சிங்களத்திற்கு பக்கபலமாய் நின்று கொண்டிருக்கின்றது இந்திய அரசு. 30 ஆண்டுகாலம் போரைச் சுமந்தவர்களுக்கு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்தவர்களுக்கு, ஐந்தாண்டுகளாக சிங்கள இனவெறி இராணுவப் பிடியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நீதி கிடைக்கத் தடையாய் இருப்பது இந்திய அரசு.

இந்திய அரசின் துரோகப் படலம் தொடர்கின்றது இந்திய அரசை நம் மக்களிடம் தோலுரித்துக் காட்டி வழிக்கு கொண்டுவர வேண்டிய கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு. தமிழீழத் தாயகத்திலுள்ள ஈழத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பும் இதுவே.

இந்திய சிங்களக் கூட்டணியை முறிக்காமல் சர்வதேச மன்றத்தில் ஈழத் தமிழருக்கு அரசியல் நீதி கிடைக்கப் போவதில்லை. இதுவே தருணம், இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்க வாரீர்!

இந்த வரலாற்றுக் கடமைக்கு களம் காண்போம்!

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் – குறள் 466

பங்கேற்கும் அமைப்புகள்:

திராவிடர் விடுதலை கழகம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
எஸ்.டி.பி.ஐ
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
த‌மிழ்த் தேச மக்கள் கட்சி
தமிழர் குடியரசு முன்னணி
கம்யூனிசுட்டு கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு
தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
தமிழர் எழுச்சி இயக்கம்
காஞ்சி மக்கள் மன்றம்
சேவ் தமிழ்சு இயக்கம்


No comments:

Post a Comment