Thursday, March 13, 2014

மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு

மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு - திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை


03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் நடந்ததாக சொல்லப்படும் சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ள புலனாய்வு பொறியமைவு ஒன்றை ஐ.நா.மனித உரிமை மன்றம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவி பிள்ளை அவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி முன் வைத்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்கின்றோம்.

இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தீர்மான வரைவு இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்றுவிட்டு அத்தகையதோர் பொறியமைவை ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. மாறாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமரிப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.

இப்படியாக, ஒருபுறம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று சீன சார்பு கொண்ட இராசபக்சே தலைமையிலான சிங்கள அரசை ஒரு கயிற்றிலும், மறுபுறம் ஈழத் தமிழர்கரின் விடுதலை அரசியலை மாகாணசபைக்குக் கூடுதல் அதிகாரம் என்ற வகையில் முடக்கி ஈழத் தமிழரை இன்னொரு கயிற்றிலும் கட்டிப் போட முயல்கின்றது. இதன் மூலம், சிங்கள அரசு, தமிழர் ஆகிய இரண்டு தரப்பையும் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலக அரசுகளும் இந்திய அரசும் இணைந்த கூட்டணியின் பிடிக்குள் வைக்கும் நோக்கம் கொண்டதாய் இருக்கின்றது. இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் இத்தீர்மான வரைவு ஏற்கத்தக்கதன்று..

இம்முறையும் உள்நாட்டு விசாரணையா? அல்லது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வா? என்ற புள்ளியிலேயே சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் நடந்து வருகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை தீர்மானத்தின் வரைவில் வருவதன் மூலம் இந்தியாவின் கோரக்கரங்கள் இருப்பது அம்பலமாகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தை சர்வதேச அரங்கிற்கு இந்தியா கொண்டு சென்றுவிட்டது. இதன் மூலம், தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க அதிகாரப்பகிர்வை பேரப் பொருளாக இலங்கை அரசு பயன்படுத்தி இருப்பதும் புலப்படுகின்றது. ஆயினும், 13 ஆவது சட்டத்திருத்ததைச் சிங்களப் பேரினவாதமும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையும் முறியடித்த வரலாறு இருப்பதால் நாம் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வையே குறிவைக்க வேண்டியுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வடக்கில் நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு துணை செய்யும்.


கடந்த இரண்டு முறையும் தீர்மானத்தை ஆதரிப்பது போல் ஆதரித்து அதை நீர்த்து போகச் செய்தது இந்தியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இம்முறையும் தீர்மானத்தின் வரைவில் இந்தியாவின் பங்கு மறைமுகமாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரசுத் தலைமயிலான இந்திய அரசு கடந்த முறை போலவே இம்முறையும்தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. காங்கிரசுக்காரர்கள் ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று தொலைக்காட்சிப் பேட்டிகளில் பொத்தாம் பொதுவாக பேசத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.வினரோதங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவது போல் நடித்து காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கின்றனர். இந்நிலையில் நமது கோரிக்கை என்ன என்பதையும் தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்க வேண்டும் எனபதையும் நாம் தெளிவாக முன்வைக்க வேண்டியுள்ளது.

எட்டாவது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நர மனித உரிமை ஆணையர் அலுவலகம் புலனாய்வு செய்ய வேண்டும் என்ற வரிகள் நீக்கப்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் இத்தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேறவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது இந்தியஅரசு தான். இந்திய அரசின் துணையுடன் தான் இலங்கை அரசு மேற்குலக அரசுகளை எதிர்கொண்டு வருகின்றது. எனவே, இந்திய அரசை நம் மக்களிடம் அம்பலப்படுத்தி தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்த வேண்டியதே நமது உடனடிக் கடமை.

அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பது, எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் கோருவது போன்ற தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும், அல்லது அமெரிக்கத் தீர்மானத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நமது போராட்டத்தை இந்திய அரசை நோக்கிக் குவிமையப்படுத்த வேண்டும். இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசு இருப்பதையும் கெடுத்து நீர்த்துப் போகச் செய்யுமானால் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து மேலும் அயன்மைப்பட நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.


தா.செ மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

செல்வி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி

தி. செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்


No comments:

Post a Comment