Monday, February 3, 2014

மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?

மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர்

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?

கருத்தரங்கம்

வருகின்ற மார்ச் 2014ல் கூடும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசுகளும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் தங்களது செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழக மக்களாகிய நாம் என்னென்ன கோரிக்கைகளை யாரை நோக்கி முன்வைக்க போகின்றோம் என்ற விவாதங்கள் ஈழ விடுதலை ஆதரவு இயக்கங்கள் / கட்சிகள் இடையே எழத்தொடங்கியுள்ளது


ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை குறித்து மே 2009 இனப்படுகொலை போருக்குப் பின் முன்மொழியப்பட்ட / விவாதிக்கப்பட்ட / நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.






மே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், இந்திய அரசின் ஆதரவுடன் ,இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன அழிப்புப் போர் பேரழிவுடன் முடிந்த நிலையில் தமிழகத்திலோ, புலம்பெயர் நாடுகளிலோ ஐ.நா மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு எந்தவிதப் போராட்டங்களும் கோரிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் இந்திய அரசும் மற்ற நாடுகளும் இலங்கைக்குப் பகிரங்கமாக ஆதரவளித்தன.

மார்ச் 2012 மனித உரிமை மன்ற கூட்டத்தில் இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலை குற்றங்கள், சர்வதேச விசாரணை என எதையும் வலியுறுத்தாமல் இலங்கையின் ஒப்புதலுடன் ஐநா அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று தீர்மானத்தை மேலும் வலுவிழக்கச் செய்து இந்திய அரசு வாக்களித்தது. தமிழகத்திலோ, அமெரிக்கா ஐ.நா வில் கொண்டு வந்த தீர்மானத்தில் என்ன உள்ளது? என்பது தெரியாமலேயே இந்திய அரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு போராட்டங்கள் நடந்தன. அதாவது , ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? எதிர்க்குமா? என்று விவாதிக்கப்பட்டதே அன்றி, எவ்வகையான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றல்ல. முதலில் முரண்டு பிடிப்பது போல பாவனை செய்த இந்திய அரசோ பிறகு தமிழர்களை ஆதரிப்பதைப் போல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. அப்போது இந்திய அரசின் இலங்கை ஆதரவு நிலையை மக்களிடையே அம்பலபடுத்த முடியவில்லை.


மார்ச் 2013 ஐ.நா. மனித உரிமை மன்ற கூட்டத்தொடரிலும் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை குறித்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. இம்முறை வரைவு தீர்மானத்தில் தமிழர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக இல்லாத காரணத்தினால் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற விவாதத்திற்குள் கோரிக்கை சுருங்கிவிட்டது. அமெரிக்கா முன்மொழிந்த முதல் வரைவு தீர்மானத்திற்கும் நீர்த்துபோன நிலையில் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இலங்கை அரசிற்கு சாதகமாக இந்திய அரசு செய்த துரோக செயல்கள் அம்பலப்படவில்லை.

ஐ.நா மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை சென்றது, வட மாகாணத் தேர்தல், பொதுநலவாய மாநாடு, பிரித்தானிய பிரதமர் கமரூன் தமிழர் தாயகம் சென்றது, மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், இனப்படுகொலை என்றும் ஈழத் தமிழர் தனித்த தேசிய இனம் என்றும் அங்கீகாரம் அளித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு, உள்ளிட்ட பல அரசியல் நிகழ்வுகள் கடந்த ஒராண்டில் நடைபெற்றுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலையும் அளவிட்டு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் மார்ச் 2014ல் வரும் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து தமிழ்நாட்டின் பார்வை, கோரிக்கைகள், முழக்கங்கள் முதலியவற்றில் ஓர்மை வந்தடையவேண்டிய தேவை உள்ளது.

இதனை முன்னிட்டு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக வரும் பிப்ரவரி 8 ஆம் நாள், சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் சென்னை தியாகராயர் நகர், பனகல் பூங்கா அருகில் உள்ள வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம்.

- சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment