Monday, October 28, 2013

கண்ணாடிக் கட்டிடங்களுக்குள்!




கடந்த சில தினங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு எட்டியிருக்கும் என்ற அறியாமையும், இந்த செய்திகள் பற்றி நாம் கவலைப்பட என்ன இருக்கிறது என்பதை சொல்லவுமே இதனை எழுதுகிறேன்.


சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக (PROJECT MANAGER) பணியாற்றிய கிருஷ்ணகுமார் என்னும் ஊழியர், மனிதவள(HR) அதிகாரிகளால் பணிக்கமர்த்தப்பட்ட குண்டர்களால்(Bouncers) தாக்கப்பட்டு அது தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அத்தோடு கடந்த வாரம் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 10-வது மாடியில் இருந்து ரேஷ்மா என்கிற பெண் ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் வெளியானது. இந்த ஆண்டு (சென்னையில் மட்டும்) தற்கொலை செய்து கொள்ளும் ஐந்தாவது தகவல் தொழில்நுட்ப ஊழியர் இவர் (1)..


நான் என்னுடைய நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்ட போது, அந்த தொழில்நுட்பப் பூங்காவில் இது பற்றி எந்த ஒரு சத்தமோ, சலனமோ இல்லை என்றும், அப்படி ஒரு தற்கொலை நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நிறுவனங்கள் இயங்குவதாகவும் தெரிவித்தார். ஒரு சக ஊழியரின் உயிர் பறிபோவது பற்றிக் கூட சிந்திக்க நமக்கு உண்மையிலேயே நேரமில்லையா? அல்லது மனமில்லையா?.


அலுவலகத்தில் நமக்கு அடுத்த இருக்கையில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலும் நாம் அதுபற்றி எந்த ஒரு கவலையுமின்றி கடந்து செல்கின்றோம். மறுபுறம், தகவல் தொழில்நுட்பத் துறையின் பணிச் சுமையும், அழுத்தமும் காரணம் என்று நாம் பேசும் போது நீங்கள்தான் அதிகம் சம்பாதிக்கறீர்களே என்று சமூகமும் கடந்து செல்கிறது. சமூக நடுநிலையாளர்களோ விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஊடகங்களும், தற்கொலைக்கான காரணங்களை விசாரிக்க வரும் காவல் துறையும் காதல் மற்றும் தனிநபர் பிரச்சனைகளையே காரணம் காட்டி வழக்கை முடிக்கின்றனர்.


நிகழும் தற்கொலைகளுக்கும், சக ஊழியர்களுக்காகக்கூட நாம் குரல் கொடுக்காமல் இருப்பதற்கும், நீங்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறீர்களே என்று நம்மீது ஏனையோர் பாய்வதற்குமான காரணம் நம் சம்பாத்தியம் மட்டும் அல்ல.


குளிரூட்டப்பட்ட பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை என்று வெளியில் இருப்பவர்களின் பார்வையில் நின்று இதனைப் பார்க்காமல் சற்று உள்ளே சென்று பார்த்தோமானால் இதற்கான காரணங்கள் ஒரு பெர்முடா முக்கோணம் போன்ற தளத்தில் அமைந்துள்ளதை அறிய முடியும். முக்கோணத்தின் ஒரு முனையில் ஊழியர்களான நாமும், இரண்டாவது முனையில் அரசு, காவல்துறை மற்றும் பல்வேறு பிரிவினரைக் கொண்ட சமூகமும், உச்ச முனையில் LPG (தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம்) என்று சொல்லப்படும் பொருளாதார மாற்றமும் அதன் வழி வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் நின்று கொண்டு நம் சக ஊழியர்களின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன.



1. தகவல் தொழிநுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களைவிட்டு பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்து பணிபுரிபவர்களே. நம்முடன் பணிபுரிபவர்களுடனோ, நண்பர்களுடனோ அல்லது விடுதிகளிலோ தங்குபவர்கள் ஏராளம். பெரும்பாலான பெண் ஊழியர்கள் விடுதிகளிலேயே தங்கி பணிபுரிகிறார்கள்.


2. நம்முடைய அலுவலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள போட்டி சூழல் காரணமாக சக ஊழியர்களிடத்தில் நட்பு பாராட்டுவதும், அலுவலகப் பணிகள் தாண்டி கலந்துரையாடுவதும் அரிதாக உள்ளது. இவ்வாறு உள்ள பணிச் சூழலில் நாம் ஒவ்வொருவரும் நம்முடன் பேசுவதற்கும், நம்முடைய வெறுமையையும்,ஆற்றாமையையும் போக்குவதற்கும் யாரும் இல்லாமல் தனித்தீவுகளாகி இருக்கிறோம். அதே சமயம் அலுவலக சூழலும், சக ஊழியர்களுக்கான பணிச்சுமையும், நாம் ஒன்றுபடாமல் இருக்க கட்டமைக்கப்பட்ட போட்டி மனப்பான்மையும் நம்மை ஒருங்கிணையவிடாமல் தடுப்பதை நாம் உணராமல் இருக்கின்றோம்.


3. அத்தோடு நம்முடைய பெற்றோர்கள் ஒரு வருடம் உழைத்து பெற்றதற்கு நிகரான பணத்தை ஒரு மாத ஊதியமாக பெரும் நாம் சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நம் தேவைகள் பற்றி சிந்திக்காமல் வாங்கி குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கிறோம். வேலைக்கு சேர்ந்து ஓரிரு வருடங்களில் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்குவதும், பின்னர் மீண்டும் கடன் வாங்கியாவது கார் வாங்குவதும் இங்கு எளிதாக நடக்கின்றன. பின்னர் கடன் கழுத்தை நெரிக்கும் சூழல் வரும்போதோ, வேலை பறிபோகும் நிலையிலோ சில ஊழியர்கள் தற்கொலைகள் பற்றி சிந்திக்கின்றனர்.


நம்முடைய பணிச்சூழல் மற்றும் அழுத்தம் பற்றி பேசும்போதெல்லாம் விவசாயிகள் தற்கொலையைப் பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள், விவசாயிகளுக்காக பேச சங்கங்கள் இருக்கின்றன, பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நமக்காக பேச நாதியில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை என்பதே அதற்காகத்தான் என்று சொல்லும் மனிதவளத் துறை அதிகாரிகள் நம்மைச் சமாளிக்க குண்டர்களை நியமிக்கும் வேலையில் மும்முரமாக உள்ளனர் (2).
இன்றைய சூழலில், நமக்காக பேச யாரும் வரமாட்டார்கள், அதற்குக் காரணமும் நாமே. அதிக சம்பாத்தியமும், நுகர்வும் ஊட்டிய போதையில் நாம் சமூகத்தைவிட்டு மிகவும் விலகி இருக்கிறோம்.


1990-களுக்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றங்களினால் சமூகத் தராசின் ஏற்ற தட்டில் நமக்கே தெரியாமல் வைக்கப்பட்டவர்கள் நாம். ஏற்றத்தின் பக்கம் முன்னர் இருந்தவர்கள் போலவே நாமும், நம்மை வளர்த்த சமூகத்தை மறந்துவிட்டோம் என்பதும் உண்மையே. ஆனால் சம்பாதிக்கிறீர்களே? இறந்தால் என்ன?? என்பது நிச்சயம் நாம் கண்டிக்க வேண்டிய விடயமே. ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை கேள்வி கேட்பதற்கு முன்னர், நாம் பணியிடத்தில் நம்முடைய உரிமைகளை மீட்டாக வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் உள்ளோம்.


வழமைப் போலவே பணியிடங்களில் நடக்கும் பிரச்சனைகளையும், தற்கொலைகளையும் நாம் கடந்து சென்றோம் என்றால், உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இன்றுள்ள நாம், உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி போராடும் நிலையும், காலமும் விரைவில் வரும்.



ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பே சமூகம் என்று பள்ளிப்பருவத்தில் படித்ததாக நினைவு, நாம் நமது அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும், நமக்குள்ளாக இருக்கும் போட்டி என்ற நிலையைத் தாண்டி சக மனிதராக, நட்பாக பணிச்சூழலை மாற்றுவதுமே நம்முடைய தரப்பில் இருந்து நாம் செய்ய வேண்டியது. இவ்வாறு நாம் ஒருங்கிணையும் போதுதான் நம் உரிமைகளைக் கேட்டு பெறுவதற்கான வெளியும், வாய்ப்புகளும் உருவாகும்.


கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

தாது மணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்!

தாதுமணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்


தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் கரையில் சேர்த்துவிட்டுச் செல்கின்றன. இவ்வாறாக அரியவகை கனிம வளங்கள் கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் பரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் உள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. அதிலும் 50%-க்கும் மேல் தமிழகத்தில் உள்ளது.


1910-ம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று தாது மணல் பிரிக்கும் ஆலையை குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தொடங்கியது. தாதுமணலில் இருந்து தாதுக்களை மட்டும் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1947 ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அரசே இப்பகுதியில் ஒரு தாது மணல் ஆலையை நடத்தி வருகிறது. 1980-களுக்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கும் தாது மணல் அள்ளும் உரிமையை வழங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் இந்த அரிய தாது வளங்களை வரைமுறையின்றி தோண்டி எடுக்கும் பணி தொடர்கிறது. இந்தத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களும், முறைகேடுகளும் மிக மிக அதிகம்.


இதைப் போல்இன்னும் பல சட்டவிரோத செயல்களும், விதிமீறல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்து தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களிலும் (அரசின் மணல் அள்ளும் நிறுவனத்தில் கூட) இந்தக் கொள்ளை தொடர்ந்தாலும், இந்தத் தொழிலில் ஏகபோகம் செலுத்திவரும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு இதில் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்டராசனது குடும்பத்தார்க்குச் சொந்தமானதாகும்.


தாது மணல் கொள்ளையை எதிர்க்கும் மக்களைப் பணத்தால் அடிப்பது, மிரட்டிப் பணிய வைப்பது, காவல்துறை மூலம் பொய் வழக்கு போட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அனைத்து ஊர்களிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து அந்தந்த ஊர்களில் எழும் எதிர்ப்புகளை அடக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக சாதி மோதலையும் ஊக்குவிக்கின்றனர். அரசும் காவல்துறையும் இவற்றைக் கண்டும் காணாமலிருக்கின்றன. மேலும், அனைத்துத் தடைகளையும் மீறி போராடும் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை காவல்துறையே முன்னின்று செய்துள்ளது. இதுவரை, வி.வி மினரல்ஸ் நிறுவனம் தமிழகத்தின் வளத்தைச் சுரண்டி லட்சம் கோடிவரை கொள்ளையடித்திருப்பதாக ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். கொள்ளையை எதிர்த்தவர்கள் தான் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, கொள்ளையடித்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


இக்கொள்ளையை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளமல் இருந்த தமிழக அரசு, மக்களின் தொடர் போராட்டங்கள் கொடுத்த நெருக்கடியால் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆகஸ்டு 14, 2013 முதல் தமிழக-கேரள கடற்கரையோரம் முழுவதும் மணல் அள்ளத் தடை விதித்திருந்த பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை செப்.17, 2013 அன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது தாது மணல் கொள்ளைப் பற்றி ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்துள்ளது. முதல் கட்ட ஆய்விலேயே தாதுமணல் தோண்டி எடுப்பதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை அக்குழு கண்டுபிடித்துள்ளது.


ஆட்சியாளர்களின் ஆதரவுடன் கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் பைப்லைன் திட்டம், தாது மணல் கொள்ளை என்று தமிழகம் தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. நமது வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு துணை செய்யும் சட்டங்களும் அவர்களைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் , ஆட்சியாளார்களும் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் நமது போராட்டங்கள் தான் நமது வளங்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி. இது நமது கடமை.


நமது கோரிக்கைகள்:

 தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.

 சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையும் ரத்து செய்யப்பட வேண்டும்

 பல ஆண்டுகளாக மக்கள் வளத்தைக் கொள்ளையடித்த வைகுண்டராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்.


 மணல் கொள்ளைக்குத் துணை போன அரசு அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.


 இத்தனை ஆண்டுகள் நடந்த கொடூரமான சுரண்டலால் பாதிப்படைந்த மக்களுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசு அளிக்க வேண்டும். மணற் கொள்ளையர்கள், துணை போன அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.


 கடற்கரைக்கும், அதைச் சார்ந்த உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய, நீண்டகாலத் திட்டத்தினை வகுத்து உடனடியாக சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

நமது மண்ணைக் காக்க…, நமது வளங்களைக் காக்க..நமது மக்களைக் காக்க…,

தாது மணல் கொள்ளையைத் தடுப்போம்! கொள்ளையர்களைக் கூண்டில் ஏற்றுவோம்!

இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழு
சேவ் தமிழ்சு இயக்கம்

பின் குறிப்பு- நேற்று(27-10-2013) நடைபெற்ற கருத்தரங்கிற்காக தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை...

Tuesday, October 22, 2013

புதினை திருப்தி படுத்தவே கூடங்குளத்தில் நள்ளிரவு மின்சாரம்!


நேற்று நள்ளிரவைக் கடந்து, தமிழக மக்கள் ஆழ்ந்த நித்திரைக்கு மூழ்கிப் போயிருந்த இரண்டாம் சாம வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் தயாரித்து விட்டார்கள். அதாவது அதிகாலை 2.45 மணி அளவில் இந்த அற்புதம் நிகழ்ந்தேறியிருக்கிறது.இந்த நற்செய்தியை கூடங்குள அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர், அறிவித்த போது, படிப்படியாக இந்த உற்பத்தி உயர விருப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்திகழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு உற்பத்தி செய்யப் போவதாகவும் கூடுதல் மகிழ்ச்சி தெரிவித்தார்.சில நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 6, 2013 அன்று மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி தந்தி தொலைக்காட்சியில் பேசும்போது, கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி தமிழகத்துக்குக் கொடுத்தாகி விட்டது என்ற அரிய‌ உண்மையைச்சொன்ன போது, அணுமின் நிலைய அதிகாரிகள் நிச்சயம் புரண்டு படுத்திருப்பர்.

அது என்னவோ இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இது போன்ற அற்புதங்கள் உடனடியாக நடந்து விடுகின்றன. நேற்றைக்கு இந்த அறிவிப்பு வெளியான போது கூட பிரதமர் மாஸ்கோவில் தான் இருக்கிறார். அணு உலை 3 & 4 விரிவாக்க ஒப்பந்தம் பற்றி பேச வேண்டுமானால், 1 & 2 ஆம் அணு உலைகளின் வீர பராக்கிரமங்களைப் பற்றி கதைக்கத் தான் வேண்டுமல்லவா ?
ஏற்கெனவே 2011 டிசம்பரில் கூடங்குளம் அணு உலை ஓரிரு நாளில் இயங்கும் என சூளுரைத்த மன்மோகன்சிங் அவர்கள், இரஷ்ய அதிபர்
புதினை திருப்தி படுத்தவோ என்னவோ இரண்டாம் ஆண்டாகவும் உற்பத்தி ஆகவில்லை என்பதால், மாஸ்கோவில் எடுத்து விட தயாரிக்கப்பட்ட துரித உணவாகத் தான் நேற்றைய அறிவிப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. பொய்ப் பிரச்சாரம், ஊழல், தரமற்ற பொருட்கள், வால்வுகளில் பழுது என முழு முதற்கொண்டு மோசடியான ஒரு அணு உலையிலிருந்து வெளிவரும் சிறு அறிவிப்பைக் கூட‌ எப்படி கேள்வியின்றி நம்ப முடியும் ?

கூடங்குளம் அணு உலையில் நிறுவப் பட்டுள்ள இரண்டாம் அமைப்பு பழுதடைந்திருக்கிறது என்று தென்மண்டல மின்சுமை பகிர்மான மையம் (SOUTHERN REGIONAL LOAD DESPATCH CENTRE) தெரிவித்திருக்கும் நிலையில், நேற்றைய அறிவிப்பின் உண்மை நிலையை இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமாக அறியலாம். கூடங்குளம் அணு மின் நிலையம் VVER தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இத் தொழில்நுட்பத்தில் முதன்மை அமைப்பில் அணுக்கருப் பிளவு நடக்கிறது. இரண்டாம் அமைப்பில் அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் தண்ணீர் கொதிக்க வைக்கப் பட்டு நீராவியாகிறது. இப்படி உருவாகும் நீராவி நேரடியாக சுழலி (Turbines) மின்னாக்கியை இயக்குகிறது. இந்த இரண்டாம் அமைப்பில் தான் கோளாறு என்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் எங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தார்கள் என்று தெரியவில்லை.மேலும் இதே ரஷ்யா வழங்கி, ரஷ்யர்களே இயக்கி கொண்டிருக்கும் இதே கூடங்குளம் VVER தொழில் நுட்பத்தில் இயங்கும் சீன அணு உலை ஒன்றிலும் இதே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் தரம் குறைந்த உதிரி பாகங்கள். ஆக ஒரு சிறு குழு, கொஞ்சம் பொறுப்புணர்வின்றி மக்களின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற மனசாட்சின்றி 120 கோடி இந்திய மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. ( படம் தகவல் உதவி: தோழர் சுந்தராஜன், பூவுலகு )

.


அணு உலையைச் சுற்றி அடர்த்தியாக வாழும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி இல்லை.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. தள ஆய்வறிக்கை தர மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தர மாட்டோம் என்று ரஷ்யா கை விரித்தாலும் தங்கள் பாக்கெட்டுகளுக்கு தரகு பணம் மட்டும் கொடுத்தால் போதும் என்று பல்லிளித்துக் கொள்வார்கள். பழுதுகள் ஏற்பட்டிருக்கின்றன, ரஷ்யாவிலிருந்து உதிரி பாகங்கள் வந்ததும் சரி செய்யப் படும் என்று ஒருஅமைச்சர் பத்திரிக்கையில் பேட்டிக் கொடுக்கும் இரு நாள் முன்பு, 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்தாகி விட்டது என்று மற்றொருஅமைச்சர் புளுகுவார். அல்லது தொடர்ந்து பதினைந்து நாளில் மின்சாரம் கிடைக்கும் என்று வாரா வாரம் ஆரவாரம் செய்வார். வால்வுகள் பழுதாகும். உபகரணங்கள் வழங்கிய ரஷ்ய நிறுவன ஆட்களை அந்நாட்டினராலேயே கைது செய்யப்படுவார்கள்.இப்படி மோசடிகளின்ஒட்டுமொத்த கூடமாக கூடங்குளம் அணு உலை அமைந்திருக்கிறது.

இந்நிலையில் தான் நேற்றைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உண்மையாகவே அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தியானது என்றே வைத்துக் கொண்டால் கூட, இரண்டு வாரத்தில் வருகிறது 15 நாளில் வருகிறது என பூச்சாண்டி காட்டியபிரதமர் முதற்கொண்டு நாராயண சாமி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வரை அனைவருமே பொய்யர்கள் தான் என்றுசந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகிறது. மேலும் உலகமே எதிர்நோக்கியிருக்கும் ஃபுகுஷிமா கதிர்வீச்சு ஆபத்திலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்று ஜப்பான் போன்ற தொழில் நுட்ப ஜாம்பன்வான்களே போராடிக் கொண்டிருக்கும் போது, கழுத்தளவுஊழல் சேற்றில் சிக்கியிருக்கும் இந்தியப் பிரதமர் ரஷ்யாவில் 3 & 4 ஆம் அணு உலைகளுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருப்பது எப்பேற்பட்ட களவாணித் தனமென்று விளக்க வேண்டியதில்லை.

அணு உலை இயங்கத் தொடங்கினால் நிகழப் போகும் பேராபத்தென்ன? 400 மெகாவாட் மின்சாரத்தில் எத்தனை விழுக்காடு அணு உலையின் பயன்பாட்டிற்கே செல்லப் போகிறது? எத்தனை விழுக்காடு மின் கடத்திகளில் வீணாகப் போகிறது? குரங்கின் கையில்கிடைத்த ஆப்பமாக 400 மெகாவாட்டை எத்தனை பங்கு வைத்து, எத்தனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் போகிறார்கள்? 4000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள‌ தமிழகத்துக்கு இதில் எவ்வளவு பங்கு? கூடங்குளம் அணு உலை வந்தால் தமிழக மின்பற்றாக்குறை தீர்ந்து விடும் என குழலூதும் அணு உலை ஆதரவாளர்களின் நிலைப்பாடு என்ன ? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன.


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

Thursday, October 17, 2013

தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது



தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் அறிவிப்பு

வணக்கம். ‘ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கி, கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அம்மாநாடு அங்கு நடைபெறுமானால், இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது‘ என்ற உடனடிக் கோரிக்கை உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கத்தின் சார்பில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ‘வெற்றி அல்லது வீரச் சாவு‘ என்ற முழக்கத்துடன் அக்டோபர் 1 ஆம் நாள் தொடங்கிய தனது பட்டினிப் போராட்டத்தை இன்று 15 ஆம் நாளாகத் தொடர்ந்து நடத்திவருகிறார்.




காலவரையற்ற பட்டினிப் போராட்டம் சட்ட விரோதமானது என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்த போதும், உயர் நீதி மன்றத்தில் வழக்காடி ‘சனநாயக நாட்டில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் என்பது அனைவருக்கும் உரிமையுள்ள போராட்ட வடிவம்‘ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, முன்னுதாரணமான தீர்ப்புடன் களமிறங்கியது இப் போராட்டத்தின் முதல் வெற்றி. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள்/ இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் சனநாயக சக்திகளின் ஆதரவோடு சீரான வேகத்துடன் முன்னேறிய இப்போராட்டம், தமிழகம் தழுவிய எழுச்சியாக பரந்து விரிந்து எழுந்துள்ளது. மேதா பட்கர் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்தியா முழுவதும் போராட்ட இயக்கமாகவும் எடுத்துச் செல்கிறார்கள். நேற்று (14.10.2013) இந்தியத் தலைமை அமைச்சர், தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ‘இலங்கையில் இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்துகொள்வது குறித்த முடிவில், தமிழர்களின் உணர்வையும் கருத்தில்கொண்டு முடிவெடுப்பேன். எனவே அம்மாநாட்டில் நான் கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைக்காக அக்டோபர் 1 ஆம் நாள் முதல் பட்டினிப் போராட்டம் நடத்திவரும் திரு.தியாகு பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்‘ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவையனைத்தும் நமது கோரிக்கைக்கான போராட்டக் களத்தில் நாம் சீராக முன் நகர்ந்து செல்கின்றோம் என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.


இந் நிலையில், இன்று (15.10.2013) 15 ஆம் நாளாக பட்டினிப் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் தோழர் தியாகுவின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும், இக் கோரிக்கை உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகளையும் முழுமையாக வென்றெடுக்கும் போராட்டக் களத்தில் அவரது அறிவும் உழைப்பும் தேவை என்ற விதத்திலும் பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள, தோழமை இயக்கங்கள் / கட்சிகள் தொடர்ந்து வலியுத்திவருவதை இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனடிப்படையில் தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, சூழலுக்கேற்ற பிற போராட்ட வடிவங்களில் தொடர்ந்து போராடுவோம் என்று ‘இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்‘ அறிவிக்கிறது.




மதியவன்
அமைப்பாளர்
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்

Monday, October 14, 2013

14 ஆம் நாளை நோக்கி தோழர் தியாகுவின் உணவு மறுப்பு போராட்டம்


இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1 முதல் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருந்து வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த காவல் துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த போது, அதை காவல் துறை மறுத்தது. எனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அக்.1 அன்று பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை அளித்தது. எனவே, அறிவித்தபடியே, அக்.1 அன்று தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், பொது மக்களும் தோழர் தியாகுவை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.



அக். 7 அன்று மருத்துவர் குழுவோடு போராட்டத் திடலில் காவல் துறையினர் குவிந்தனர். தியாகுவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், அவர் உடல் நிலை சீராகவே இருந்தது. அவர் எழுந்து நடமாடிக் கொண்டிருந்தார். தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தியாகு சொன்னார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்களும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவே சொன்னார்கள்.

ஆனால், அவரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். எனவே, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். மருத்துவர் குழுவின் இந்த செயல்பாட்டுக்குப் பின்னால், காவல்துறையின் அழுத்தம் இருப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

இதனையடுத்து, வள்ளுவர் கோட்டத்திலிருந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டார். அவர் சென்ற அடுத்த சில மணித்துளிகளிலேயே, அந்தப் போராட்டப் பந்தல் பிரிக்கப் பட்டது. அங்கு ஏழு நாட்களாக ஒரு போராட்டம் நடந்தது என்ற சுவடே இல்லாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்கப்பட்டது.

மருத்துவமனையில், குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்ள தியாகு மறுத்துவிட்டார். மேலும்,தனது பட்டினிப் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். மருத்துகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னபோது, அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், தனக்கு சுய நினைவு உள்ளவரை தன்னைக் கட்டாயப்படுத்தி மருந்துகளையோ, வேறு உணவுகளையோ தனக்கு கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது என்று தனது கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டார். தியாகுவின் பட்டினிப் போராட்டம் மருத்துவமனையில் இருந்த படியே தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், அக்.10 அன்று தியாகுவை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் சொன்னார்கள். எதற்காக கூட்டி வந்தார்கள், எதற்காக வெளியேற சொல்கிறார்கள் என்பது முழுதும் புரியாத மர்மமாகவே இருந்தது. வெளியேறுவதற்கு முன் அனைத்து நோயாளிகளுக்கும் கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகளை (Discharge Summary) கொடுங்கள் என்று கேட்டதற்கு, தங்கள் மேலிடத்திலிருந்து அதைத் தர வேண்டாம் என்று சொல்லி விட்டதாக அதை கொடுக்க மறுத்து விட்டார்கள் மருத்துவர்கள். அதைக் கொடுக்காமல் வெளியேறப் போவதில்லை என்று தோழர் தியாகுவும் சொல்லிவிட்டார்.

எனவே, நேற்று (அக். 11) மருத்துவக் குறிப்புகளைக் (Discharge summary) கொடுத்து வெளியேறச் சொன்னார்கள். மீண்டும் வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த போது தான், அங்கு வைத்து தோழர் தியாகுவை கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்ததையடுத்து, புரசைவாக்கத்தில் உள்ள ‘உழைக்கும் மக்கள் மாமன்றத்திற்கு’ தோழர் தியாகு சென்றார். வள்ளுவர் கோட்டத்தில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் திரண்டிருந்ததை பார்த்த எமது தோழர்கள் காவல் துறையின் இந்த வஞ்சக திட்டத்தை உறுதிபடுத்தினர்.

உயர் நீதிமன்ற ஆணையின் படி தோழர் தியாகுவை பட்டினிப் போராட்டம் இருந்ததற்காக வள்ளுவர் கோட்டத்தில் வைத்து கைது செய்ய முடியாது. எனவே, அவரை விதிமுறைகளுக்குப் புறம்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்பு வெளியேற்றியிருக்கின்றனர். அவர் திரும்பவும் வள்ளுவர் கோட்டதிற்கு வந்தால், உயர் நீதிமன்ற ஆணை அவர் மருத்துவமனைக்கு போன போதே முடிவுக்கு வந்து விட்டது, மீண்டும் வருவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி, அவரை கைது செய்வதே காவல் துறையின் வஞ்சக நோக்கம் என்பதாக அறிகிறோம்.

அந்த வஞ்சக திட்டங்களையெல்லாம் முறியடித்து, தற்போது தோழர் தியாகு அவர்கள் தனது பட்டினிப் போராட்டத்தை 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பட்டினிப் போராட்டத்தைத் தொடரும் இடத்தின் முழுமையான முகவரி,

‘உழைக்கும் மக்கள் மாமன்றம்’
#5, டாக்டர் வாசுதேவன் சாலை,
(மில்லர்ஸ் சாலை அருகில், பாதாள பொன்னியம்மன் கோவில் அருகில்),
புரசைவாக்கம்

இச்செய்தியை பார்க்கும் தமிழின உணர்வாளர்கள் யாவரும் தோழர் தியாகுவின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக
திரண்டு உங்களை ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறோம். மேலும் பல்வேறு தளங்களில் இச்செய்தியை பரப்பவும்.


Tuesday, October 8, 2013

வெற்றி அல்லது வீரச்சாவு


இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், எதிர்வரும் நவம்பரில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக் கூடாது.காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு ’இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தின்’ சார்பாக காலவரையற்ற உணவு மறுப்புப் போராட்டத்தில் இருக்கின்றார். ”காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபடுவதே ஒரு குற்றம் ஆகாது என்று சொல்லி இந்தப் போராட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,நேற்று, பட்டினி போராட்டத்தின் 7 ஆம் நாள் அன்று காலை முதல் வழக்கத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கபப்ட்டிருந்தனர். மதியம் 2 மணி அளவில் அரசு மருத்துவர்கள் குழு வந்து தோழர் தியாகுவைப் பரிசோதித்தது.

தோழர் தியாகுவின் உடல் நிலை சரியாக இருந்த போதும், பொது மக்கள் பார்வையில் இருந்து போராட்டத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காரணம் சொல்லி நேற்று (07 அக்டோபர்) மதியம் 2.30 மணி அளவில் அவரை அங்கிருந்து இராயப்பேட்டை மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர். அவருக்கு இந்த நிமிடம் வரை எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையிலும் தன்னுடைய உணவு மறுப்பு போராட்டத்தைத் தோழர் தியாகு தொடர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் இக்கோரிக்கைகளை ஆதரிக்கும் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அக்கூட்டத்தில், “தோழர் தியாகு உயிரைக் காப்போம். இந்திய அரசே! இலங்கையில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!” என்ற முழக்கத்துடன் வருகின்ற 10 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோழர் தியாகு 8 ஆவது நாளாக உணவு மறுப்பு போராட்டத்தில் இருக்கும் நிலையில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரித்து இலங்கையில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் இந்த நேரத்தில் உறுதியோடு போராடி இந்திய அரசை அடி பணியச் செய்வதன் மூலம் தோழர் தியாகுவின் உயிரைப் பாதுகாத்திட வேண்டும்.

இந்த செய்தியை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


சேவ் தமிழ்சு இயக்கத்திற்காக தோழர் தியாகுவின் பிரத்யேக நேர்காணல் காணொளிகள்:






=====================

Thursday, October 3, 2013

தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!





இனப்படுகொலை நாடு இலங்கை மண்ணில் காமன் வெல்த் நாடு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அதை இந்தியப் பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் சேவ் தமிழ்சு ஆங்கில வலைதளத்தில் உங்கள் கையெழுத்தையும் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

கீழே உள்ள ஆங்கில இணைய தள சுட்டியை சொடுக்கி, உங்கள் கையெழுத்தை பதிவு செய்யவும்.


ஆங்கில இணையதள சுட்டி