Monday, September 9, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது - பன்னாட்டு இளைஞர் மாநாடு




நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் இரத்தம் தோய்ந்த இலங்கைத் தீவில் “காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா.மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு ‘காமன்வெல்த் தலைவர்’ என்ற மகுடம் சூட்டப் போகின்றது.

2009 இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 1.5 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது சிங்கள இனவெறி அரசு; போருக்கு பின்னாலும், தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் இராணுவ சர்வாதிகார அரசு; தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்த மயமாக்கி வரும் பெளத்த மதவெறி அரசு; தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களர்களைக் குடியேற்றிவரும் இன அழிப்பு அரசு; இந்த இனக்கொலை இலங்கை அரசு மீது படிந்து கிடக்கும் அழிக்க முடியாத இரத்தக் கறையைத் துடைப்பதற்கான ஏற்பாடே அங்கு நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாடு.


சேவ் தமிழ்சு இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு, மாநாடு கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர்.


தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழக கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவத் தலைவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும்
வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மடல் அனுப்பியுள்ளார்.



தில்லிப் பல்கலை கழகத்தை சேர்ந்த மிர்த்யுன் செய் அவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி மடல் அனுப்பியுள்ளார். மேலும் உலகத் தமிழர் அமைப்பு (WTO), USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET),நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் ‘காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது’என்று கோரியும் இம்மாநாட்டை வாழ்த்தியும் மடல் அனுப்பியுள்ளார்கள்.

தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழு அவர்களின் பறை இசையோடு துவங்கிய மாநாட்டின் மதிய நிகழ்வும் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிக்கு பிறகு மதிய அமர்வு தொடங்கியது.

மாலை சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்களான மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா , திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பேராசிரியர் மணிவண்ணன் ,தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொது செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றினர்.தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில், காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடக்குமாயின், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைபதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.


சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரித்து ஈழத் தமிழர்களின் அரசியல் வேட்கையை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசைக் கண்டிக்கும் முகமாகவும், அதைத் தடுத்து நிறுத்த ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ள, உலங்கெங்கும் பரவி வாழும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இம்மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். 2013 மார்ச் மாதம் சுடர்விடத் துவங்கிய மாணவப் போராட்டங்களின் பேரெழுச்சியின் தொடர் நிகழ்வாக இம்மாநாடு அமைந்திருக்கிறது.இந்நிகழ்வோடு அமைந்து விடாமல், இலங்கை புறக்கணிப்பு கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் இப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்டனர்.


பன்னாட்டு இளைஞர் மாநாட்டுத் தீர்மானங்கள் சேவ் தமிழ்சு இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த ’இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது’ என்ற முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் பின்வருமாறு:

இலங்கை அரசு ஒன்றை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இன்வெறி அரசு ; போருக்குப் பின்னாலும்,தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான் சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் இராணுவ சர்வாதிகார அரசு; தமிழர்களின் இந்து , இசுலாமிய,கிருத்துவ
மத அடையாளங்களை அழித்து பெளத்த மதவெறி அரசு; தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களவர்களைக் குடியேற்றிவரும் இன அழிப்பு அரசு; இலங்கை அரசின் இந்த இனக்கொலைக் குற்றங்களை மூடி மறைக்கவே ’காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை’ கொழும்புவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இம்மாநாடு கருதுகின்றது. பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்காக நீதியின் பக்கம் நிற்காமல், இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த முன்னின்று ஏற்பாடு செய்து, இந்திய அரசு மீண்டும் ஒரு முறை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது.1971-ம் ஆண்டின் சிங்கப்பூர் சாற்றுரையில் “இனம், நிறம், மதம் , அரசியல் நம்பிக்கைகள் என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி” என்பது காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவையனைத்தையும் இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது.1961 முதல் 1994 வரை, வெள்ளை நிற வெறி பிடித்த தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டதும், பர்வேஷ் முஷாரப் இராணுவ ஆட்சியின் போது பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டதும், இப்போதும் கூட, இராணுவ ஆட்சியால் ஜனநாயகம் மறுக்கப்படுவதற்காக ஃபிஜி (Fiji) விலக்கிவைக்கப்பட்டிருப்பதுமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன.


1) 1971 சிங்கப்பூர் சாற்றுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களைக் காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாத இலங்கையில் ,காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டினை நடத்தக்கூடாது என காமன்வெல்த் அமைப்பு நாடுகளையும் குறிப்பாக இந்திய அரசையும் இம்மாநாடு கோருகின்றது.

2) மேலும், ஒன்றை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்து , இன்றும் கட்டமைப்புரீதியாகவும் , பண்பாட்டுரீதியாகவும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது

3) ஏழு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களின் சனநாயக கோரிக்கைகளை ஏற்று , இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டினை கொழும்பிலிருந்து வேறொரு காமன்வெல்த் தலை நகரத்திற்கு மாற்றும்படி கேட்க வேண்டும். இடமாற்றம் இல்லையென்றால் கொழும்பில் நடைபெறும்
காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். கனேடிய பிரதமர் இம்மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது. இதைப் போன்று இந்திய பிரதமரும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது“ என இம்மாநாடு கோருகின்றது.

4) 2008-2009ஆம் ஆண்டு இலங்கைப் போரில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் ஆகியன குறித்து ஒரு சுயாதீன பன்னாட்டு விசாரணை ஒன்றை நிறுவ வலியுறுத்தி காமன்வெல்த் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

5) இன்றும் இலங்கையில் இராணுவமயமாக்கலாலும் , சிங்களமயமாக்கலாலும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழர்களைக் காக்கும் பொருட்டு தமிழர்களின் தாயகப்பகுதியான இலங்கைத் தீவின் வடக்கிழக்கில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகத்தினை நிறுவப்பட சர்வதேச நாடுகள் ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

6)கடந்த 60 வருடங்களாக சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசினால் இன அழிப்புக்குள்ளாகப்படும் ஈழத்தமிழர்கள் சனநாயக அடிப்படையில் தங்களுக்கான அரசியல் தீர்வினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் , இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும்
ஈழத்தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

7) இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.மேலும், ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ”இலங்கை மீதான பொருளாதார தடை கோரும் தீர்மானத்தினை தமிழகத்திலும் இந்தியாவிலும் அமல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

இம்மாநாட்டில், உலகத் தமிழர் பேரவை (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) , USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET) ஆகிய அமைப்புகளைச சார்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ள இருந்தனர். பல்வேறு காரணங்களால்
கலந்துகொள்ள இயலவில்லை. இம்மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தியினை அனுப்பி இம்மாநாட்டின் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்துள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு

சேவ் தமிழ்சு இயக்கம்

சென்னை

7- செப்டம்பர் , 2013



No comments:

Post a Comment