Wednesday, May 15, 2013

முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்


முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்

ஆறாத நெருப்புத் தழும்பாய் இனப்படுகொலையின் காயம்
ஓயாத அலையாய் தமிழரின் நீதிக்கான போராட்டம்


நினைவெழுச்சிக் கூட்டம்
பேச்சாளர்கள்: இளங்கோவன் – மகேந்திராசிட்டி | செந்தில் – சோழிங்கநல்லூர்
மேரி – டி.எல்.எப் | ஜெகன் – சிறீராம் டெக்பார்க் | சேரன் – அசண்டாஸ்
விக்ரமன் – வேளச்சேரி | செய்யது – ஒலிம்பியா டெக்பார்க் | சசிக்குமார் - டைடல் பார்க்
பரிமளா | நாசர் | கண்ணதாசன்


மே 17, வெள்ளிகிழமை | மாலை 6 மணி | சோழிங்கநல்லூர் போக்குவரத்து சந்திப்பு
மே 17, 2009 ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொண்டுள்ள இனவெறியின் உச்சமாய் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த நாள். ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் கொன்றழித்து விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு உலகநாடுகளுக்கு அறிவித்தது. போருக்குப் பின் 3 இலட்சம் ஈழத் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்து சிங்களவர்களோடு ஈழத் தமிழர்கள் இனி என்றும் சேர்ந்து வாழ முடியாது என்பதை உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு உணர்த்திய நாள்.


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. ஈழத்தில் இன்றைய நிலை என்ன?. 80,000 பெண்கள் போர் விதைவைகளாக, பல்லாயிரம் குழந்தைகள் அனாதைகளாக, வீட்டுக்கொருவர் ஊனமுற்றவராக என சிங்கள அரசின் இனவெறியின் சின்னங்களாக ஈழத் தமிழர்கள் வன்னிப் பகுதியில் அன்றாட வாழ்க்கைக்கு போராடி வருகின்றனர். போர் முடிந்து தங்கள் நாட்டில் அமைதி திரும்பிவிட்டதாக இலங்கை அரசு உலகுக்கு கூறினாலும் தமிழர் பகுதிகளில் மருத்துவமனை, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் என்று பொது இடங்கள் அனைத்திலும் இராணுவம் நிலைகொண்டு தமிழர்களை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தமிழர் பகுதியில் சிங்கள மக்கள் அதிகமானோரை குடியமர்த்தியும் இலங்கைத் தீவில் ‘தமிழர் நிலம்’ என்ற ஒன்றே இல்லாமல் மாற்றும் விதமாக தன் சிங்களமயமாக்கலை தீவிரப்படுத்தி வருகின்றது இலங்கை அரசு. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசு செய்தது போல் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை நடத்தி வருகிறது இலங்கை அரசு.



நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பயனாய் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு, இலங்கை அரசு மீது பன்னாட்டு இனக்கொலை விசாரணை, இலங்கை மீது பொருளாதார தடைகயை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசு இதை மதிக்கவில்லை. ஈழத் தமிழர்கள் குறித்தும் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்தும் கவலைப்படாமல் சிங்கள அரசோடு நட்பு பாராட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்கின்றது. அதனால் தான் இலங்கை அரசு எந்த சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல் இனவெறியைக் காட்டிக்கொண்டிருக்கின்றது.



நாம் என்ன செய்யப் போகின்றோம்? நம்மைப் போன்ற சாதாரண மக்களால் என்ன செய்ய முடியும்? முடியும். அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளங்களில் இலங்கையைப் புறக்கணிப்பதன் மூலம் இலங்கை அரசின் இனவெறியை அடக்க முடியும். வெள்ளை நிறவெறிப் பிடித்த தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து கருப்பர்கள் விடுதலை அடைந்தது இப்படியான புறக்கணிப்பு போராட்டத்தின் மூலம் தான்.

நான்காம் ஆண்டு நினைவு நாளில் இந்த உறுதி மொழிகளை ஏற்போம்.

• தகவல் தொழில்நுட்பத் துறையினை சேர்ந்த நாம் இலங்கைத் தீவுக்கு யாரும் சுற்றுலா செல்லமாட்டோம்.

• இலங்கையில் உற்பத்தியாகி விற்பனைக்கு வரும் எந்தப் பொருட்களையும் வாங்கமாட்டோம்.

• விளையாட்டுத்துறை, கலை, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் இலங்கையைப் புறக்கணிப்போம்.

• இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்திப் போராடுவோம்.


தகவல் தொழில்நுட்பத் துறை நண்பர்களே!

வாருங்கள் நாம் அனைவரும் நீதியின் நெருப்பை நெஞ்சில் ஏந்துவோம்! சோழிங்கநல்லூரில் திரள்வோம்!

ஒருங்கிணைப்பு:
சேவ் தமிழ்சு இயக்கம்(தகவல் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள்)


தொடர்புக்கு:
இளங்கோவன் 98844 68039

No comments:

Post a Comment