Sunday, March 31, 2013

"தோழர் ஊகோ சாவேசுக்கு செவ்வணக்கம் - "உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்"



29 மார்ச் 2013 மாலை தேனாம்பேட்டை பெஃபி அர‌ங்கில் "தோழர் ஊகோ சாவேசுக்கு செவ்வணக்கம் - "உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்" என்ற‌ த‌லைப்பில் ஒரு க‌ருத்த‌ர‌ங்க‌த்தை சேவ் தமிழ்சு இயக்கம் ஒருங்கிணைத்திருந்த‌து. சேவ் த‌மிழ்சு இய‌க்க‌த் தோழ‌ர்.ஜார்ஜ் இந்நிக‌ழ்வை தொகுத்து வ‌ழ‌ங்கினார். முத‌லில் பேசிய‌ தோழ‌ர்.ம‌கேந்திர‌ன் பின்வ‌ரும் க‌ருத்துக‌ளை முன்வைத்து பேசினார். "ஒரு புரட்சிக்காரனுடைய வாழ்க்கை ஒரு புதிய வாழ்க்கை முறையை தொடங்கி வைக்கிறது. அவனுடைய வாழ்க்கை, அவன் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து அடுத்த கட்ட மாறுதலை நோக்கி பயணிப்பது தான் புரட்சிக்காரனின் மரபாக இருக்கிறது.



அவ்வகையில் உலகிற்கு இன்று ஒரு வெளிச்சமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் திகழ்கிறதென்றால் அதற்கு அடிப்படையான பங்களிப்பு சாவேசுடையது. அவர் 21 ஆம் நூற்றாண்டின் அடிப்படை தன்மைகளை புரிந்து வைத்திருந்தார். சமூக மனிதர்களாகிய நாம், இன்றைய காலகட்டத்திற்கு மார்க்சியம் எவ்வளவு பொருந்துகிறது என்பதை புரிந்து கொள்வேமேயானால் மார்க்சியம் தொடங்கிய நாள் முதலாக அது சந்தித்த சாதனைகள் என்ன ? நெருக்கடிகள் என்ன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கால மாற்றத்திற்கான மையமே மார்க்சியத்தின் இயங்கியல் அடிப்படையாகும். இந்த உண்மையை, சோசலிசத்தை மக்களின் நம்பிக்கையாக மாற்றியவர் சாவேஸ்.

எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி, அதன் வருவாயை நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் சென்று சேரும் படி ஆக்கினார். இது தான் பொருளாதார அரசியலில் மக்களின் நேரடி பங்கேற்புக்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் இது தான் சாவேசின் சாதனை என தோழர்.மகேந்திரன் அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், சாவேஸை, பிடல் காஸ்ட்ரோவின் சீடர் என்று சிலர் நினைக்கிறார்கள். சாவேஸூக்கு அரசியல் குரு டிராஸ்கி. பிடலுக்கு அரசியல் குரு லெனின். லெனினை பின்பற்றுபவர்கள் நிச்சயம் டிராஸ்கியை ஒதுக்கியே வைப்பார்கள். ரஷ்யாவில் லெனினின் எழுச்சிக்கு பிறகு டிராஸ்கி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தவும் பட்டார். ஆனால் இவ்விருவரையும் பின்பற்றுபது தான் 21 ஆம் நூற்றாண்டின் தேவை என்ற கருத்தை சாவேஸ் முன் வைத்தார். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைத்து, அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளுக்கெதிராக அணி திரட்டினார் சாவேஸ் என்றார் தோழ‌ர். ம‌கேந்திர‌ன்.


அடுத்து பேசிய‌ தோழ‌ர்.சித‌ம்பர‌ நாத‌ன் அவ‌ர்க‌ள் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக, வெனிசுலாவையும் ஊகோ சாவேஸைப் பற்றியும் இணைய தளத்தில் எழும் கடும் விமர்சனங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார், இந்த ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்த வெனிசுலா மக்களின் போராட்டத்தையும் அதை வழிநடத்திய தலைவரையும் கொச்சைப்படுத்துதல் தவறு என்றார். 1922 ரஷ்யாவில் மின்மயமாக்கலின் தேவை இருந்த போது, மின் விளக்குகள் தயாரிப்பதற்கு ரஷ்யாவில் தொழில் நுட்பம் அறவே இல்லாமல் இருந்தது.அதனால் இங்கிலாந்திலிருந்து சில முதலாளிகளை ரஷ்யா அணுகிய போது, அம்முதலாளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர். அம்முதலாளிகளின் சொத்துகளை ரஷ்யா நாட்டுடைமையாக்க கூடாது. லாபத்தை பறிக்கக் கூடாது என்பன போன்றவை. எனவே லெனின் “ அந்நிய நாடுகள் இங்கு தொழில் தொடங்கினால், உள்ளூர் தொழிற்சங்கங்கள் அவர்களை எதிர்த்து எந்த போராட்டத்தையும் நடத்தக் கூடாது” என்று கூறினார். இந்த ஒரு நிகழ்வை வைத்து, லெனின் என்ற பிம்பத்தையே கொச்சைப் படுத்த முடியுமா ?




மேலும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசம் குறித்து பேசிய தோழர் சிதம்பரநாதன், எப்படியெல்லாம் சோசலிசம் நெருக்கடிக்குள்ளாகியது என்பதை விவரித்தார். மின்மயமாக்கலுக்கு எப்படி முதலாளித்துவ நாடுகளை ரஷ்யா அணுகியதோ அது போல, பற்பசை கூட இந்தியாவின் கொல்கத்தா நகரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆக உற்பத்தி சக்திகள் முற்றிலும் வளர்ந்திராத ஒரு வெற்றிடத்தில் வளர வேண்டிய
நிர்பந்தத்தில் சோசலிசம் இருந்தது. சீனாவும் இதே போல சோசலிச அரசை கட்டுமானம் செய்வதில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தது.ரஷ்யா சீனாவை விட, கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து உள்ளிட்ட சோசலிச நாடுகளும் இத்தகைய நெருக்கடிகளை சந்தித்தன. மேலும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் ( Market Economy ) சோசலிச பொருளாதாரத்திற்குமான வேறுபாடுகளை அவர் பின்வருமாறு விவரித்தார்.

ச‌ந்தைப் பொருளாதாரம் - சோசலிச பொருளாதாரம்

1)உற்பத்திச் சக்திகள் அனைத்தும் தனியாரிடம் இருக்க வேண்டும் - உற்பத்திச் சக்திகள் பொதுமக்களிடம் இருத்தல் வேண்டும்

2)உற்பத்தி என்பவை இலாபத்திற்காக மட்டுமே - உற்பத்தி என்பது பொது மக்களின் தேவைக்காக மட்டுமே

3)இலாபத்தின் பெரும்பங்கு முதலாளிகளுக்கு - இலாபத்தின் பெரும்பங்கு உழைக்கும் கரங்களான தொழிலாளிகளுக்கு

4) சந்தை ஏற்ற இறக்கங்களை முதலாளிகளே கவனித்துக் கொள்ளுதல் - மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் வேண்டும்.

மேலே குறிப்பிட்ட சோசலிச பொருளாதாரத்தை இன்று வெனிசுலாவில் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் சாவேஸ் என்று கூறி த‌ன் உரையை நிறைவு செய்தார் தோழ‌ர்.சித‌ம்பர‌ நாத‌ன்.



அடுத்து உரையாற்றிய‌ தோழ‌ர்.செல்வா அவ‌ர்க‌ள் சாவேஸ் அதிபராக பொறுப்பேற்றவுடன் அமெரிக்க எண்ணை நிறுவனங்களை வெனிசுலாவில் இருந்து வெளியேற்றி எண்ணெய் நிறுவ‌ன‌ங்க‌ளை தேசிய‌மய‌மாக்கினார். இதன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை மக்கள் நல திட்டங்களான கல்வி, மருத்துவம், ஏழைக்களுக்கு வீடு கட்சி தருதல் போன்றவற்றிற்கு செலவிட்டார். சனநாயகத்தில் மக்கள் பங்கெடுப்பை அதிகப்படுத்தும் விதமாக கிராம பஞ்சாயத்துக்கு(மக்கள் மன்றங்கள்- சமுதாய கூடங்களுக்கு) நேரடியாக நிதியை கொடுத்து, அதனை செலவிடும் அதிகாரத்தையும் கொடுத்தார். சட்டம் மக்களுக்கானது என கூறிய அவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களை , மக்கள் விரும்பும் பட்சத்தில் திரும்ப பெறலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தார்.அதன் படி தனது ஆட்சி காலத்தில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றார். மிகசிறந்த புத்தக வாசிப்பாளராக இருந்த அவர் தொடர்ச்சியான தனது எழுத்துகளின் மூலம் மக்களிடம் தனது கருத்தியலை கொண்டு சேர்த்தார். அதே சமயம் சிறந்த பெண்ணியவாதியாகவும் , சூழலியல் ஆர்வலராகவும் இருந்தார், மேலும் உல‌க‌ வ‌ங்கியை மைய‌ப்ப‌டுத்தி இருந்த‌ பொருளாதார‌ ஒழுங்க‌மைப்பை மாற்றி இல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌னான‌ வ‌ர்த்த‌ கூட்ட‌மைப்பை உருவாக்கினார்.



இதனை தொடர்ந்து "இப்பொழுது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் - Now the People have Awaken" என்ற வெனிசுவேலா தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இறுதியாக பேசிய சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர்.செந்தில் 19ஆம் நூற்றாண்டிலிருந்து த‌ற்போதைய‌ 21ஆம் நூற்றாண்டு சோச‌லிச‌ம் வ‌ரை, சோச‌லிச‌த்தின் வ‌ள‌ர்ச்சியை ப‌ற்றி பேசினார். 21ஆம் நூற்றாண்டு சோச‌லிசத்தை படைக்க இன்றைய உலக ஒழுங்கு மாற்றப்பட வேண்டும், உருவாக வேண்டிய புதிய உலக ஒழுங்கு என்ப‌து உலகில் ஒடுக்கப்படும் மக்களும், ஒடுக்கப்படும் அரசற்ற தேசங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளும் ஒன்றிணைந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய ஓர் உலக ஒழுங்கைப் படைப்பதில் வெனிசுவேலா, பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள "நமது அமெரிக்க மக்களுக்கான பொலிவாரிய கூட்டமைப்பு" (ALBA - Boloivarian Alliance for our people of America) முன்னோடியாகத் திகழும். இன்றிருக்கும் உலக ஒழுங்கை மாற்றுவதற்காகவும், சோசலிச உலகைப் படைப்பதற்கும் சாவேஸ் செய்த பணிகளை நாம் நினைவுகூர்தல் வேண்டும். சாவேசுக்கு செவ்வ‌ண‌க்க‌ம் கூறுவோம்.


சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்.

Saturday, March 30, 2013

தோழர்கள் மீது காவல்துறை நடத்திய வெறிச்செயலை வன்மையாக கண்டிப்போம்!



இன்று அதிகாலை நம் தோழர்கள் மீது தமிழக காவல் துறை நடத்திய வெறித் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயக்கத்தின் கண்டன அறிக்கை!

இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்திலும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளருமான தோழர் அருண் சோரியும் அரசியல் பணி நிமித்தமான பயணத்திற்காக வட பழனியின் பிரதான சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.அந்நேரம் அவ்வழியே வந்த இரவு ரோந்து காவல்துறையினர் தோழர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து மரியாதை குறைவான சொற்களை பயன்படுத்தி விசாரித்திருக்கின்றனர். விசாரணையின் போது V.ஜெகதீசு என்ற காவல்துறை அதிகாரி, தகாத வார்த்தைகளால் தோழர்களை கடுமையாக திட்டியிருக்கிறார். இதை எதிர்த்து தட்டிக் கேட்ட தோழர் அருண் சோரியையும் தோழர் செந்திலையும் கழுத்தில் அறைந்திருக்கிறனர் காவல் துறையினர். அடி விழுந்த போது, ஜிப்பீல் தலை மோதியதால் தோழர்கள் நிலை குலைந்து, தடுக்க முற்பட்டிருக்கின்றனர். இதனால் இன்னும் வெறி தலைக் கேறிய காவல் துறையினர், தோழர்களை வாகனத்தில் ஏற்றி R3 காவல் நிலையம், அசோக் நகருக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

காவல்நிலையத்தில் தோழர்களை அமர்வதற்கு கூட அனுமதி மறுத்த காவல் துறையினர், அவர்களின் அலைபேசிகளை பறித்ததோடல்லாமல், சட்ட ரீதியாக அவர்கள் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாமல் துன்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் தோழர் செந்திலின் பையும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடக்க விருக்கும் “ஐ.நா தீர்மானமும் ஈழத்தின் திசை வழியும்”கூட்டத்திற்கான துண்டறிக்கைகள் இருந்திருக்கின்றன. அதைப் பார்த்த காவல்துறை அதிகாரி V.ஜெகதீசு, “ஈழமா...இதுக்காகவே உங்களை அடிக்கணும்டா” என்று கூறி மாறி மாறி தோழர் செந்திலின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இன்னும் தகாத வார்த்தைகளால் நா கூசும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தோழர்களை திட்டியும் அடித்தும் இரவு முழுதும் இந்த வன்கொடுமை தொடர்ந்திருக்கிறது.

தோழர்கள் தங்களைப் பற்றி பேசக் கூட அவர்கள் இடமளிக்காமல் இந்த வெறிச்செயல் அரங்கேறியிருக்கிறது. பிறகு விடியற்காலை நான்கு மணிக்கு வந்த காவல் ஆய்வாளர், அவர்கள் விசாரித்த போது தான் தோழர்கள் இருவரும் அரசியல் ஆற்றல் என்பது காவல்துறைக்கு தெரிய வந்திருக்கிறது. “முன்னரே சொல்லியிருக்கலாமே...சரி இதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள்” என்று போலி ஆறுதல் சொல்லி காலையில் தோழர்களை விடுவித்திருக்கின்றனர்.

எந்த வித அடிப்படை காரணங்களோ, முன் விசாரணையோ, தவறு நடப்பதற்கான முகாந்திரமோ இல்லாமல், தோழர்களை வார்த்தைகளாலும் உடல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய காவல்துறையின் இந்த வெறிச்செயல் கண்டிக்கத் தக்கது. ஈழ அரசியல் குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு, வெட்ட வெளிச்சமாக அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியான காவல்துறை மூலமாக அம்பலமாகியிருக்கிறது. தன்னெழுச்சியான மாணவ மக்கள் போராட்டங்களை எப்படி ஒடுக்குவது என்ற வழி தெரியாத தமிழக அரசும் காவல்துறையும், கிடைக்கும் வாய்ப்பில் அரங்கேற்றும் இது போன்ற வெறிச்செயல்களை, அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள மாணவ சமுதாயம் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இச்சம்பவம் நமக்கு அறிவுறுத்துகிறது.

மேலும் தோழர்கள் அரசியல் ஆற்றல்கள் என்ற அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்டு பெரிது படுத்த விரும்பாமல் விடயத்தை முடித்து விட்டனர்.ஒரு வேளை பாதிக்கப்பட்டது பொது மக்களாக இருந்திருந்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு இன்னும் கொடுரமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.இந்த வன்செயலின் மூலம் காவல் துறையினரை எதிர்த்து பொது மக்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற தமிழக காவல் துறையினரின் அதிகார வெறி அப்பட்டமாக அம்பலமாகிறது.

பொது மக்களை மதிக்காமல்,அவர்களிடம் காவல் துறை என்றாலே மக்கள் அடிபணிந்து செல்ல வேண்டும் என்ற உணர்வை ஏறபடுத்த முயலும் காவல் துறையினரின் இந்த அடக்குமுறை வன்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது

தோழர்கள் மீது காவல்துறை ஏவிய இந்த வெறிச்செயலை வன்மையாக கண்டிப்போம் !! அதிகார ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்!

- இளங்கோவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

Thursday, March 28, 2013

தோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் - "உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்"

தோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் - "உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்"

நாள்: 29-03-2013, வெள்ளி கிழமை மாலை 5 மணி

இடம்: பெஃபி அரங்கம், தேனாம்பேட்டை

உரை:

தோழர். சி.மகேந்திரன், மாநில துணைப் பொது செயலாளர், இந்திய பொதுவுடைமை கட்சி

தோழர். சிதரம்பரநாதன், தலைவர், பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, தமிழ்நாடு

தோழர். செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்)

தோழர். செந்தில், சேவ் தமிழ்சு இயக்கம்.



இன்றைய உலகமயச் சூழலில் அதிபர் பதவிக்கு வந்த 1999ஆம் ஆண்டே வெனிசுவேலாவின் இயற்கை வளமான எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்கினார் சாவேஸ். அந்த எண்ணெய் நிறுவனங்களின் மூலம் கிடைத்த வருவாயை மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிட்ட சாவேஸ், பல மாற்றங்களை உள்நாட்டில் கொண்டு வந்தார். அவற்றில் சில... அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை கிடைக்கும்படிச் செய்தார். வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 6 மணி நேரமாகக் குறைத்தார். 1998ல் குறைந்தபட்ச மாத ஊதியமாக இருந்த 16 அமெரிக்க டாலர், 2012ல் 247 டாலராக உயர்ந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, சரிவிகித வளர்ச்சி சாத்தியமானது. சமுதாயக் கூடங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பங்குகொள்ளும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அந்தப் பகுதிக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, அவர்களே செயல்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சனநாயகத்தில் மக்கள் பங்குகொள்ளும் நிலை அதிகரிக்கப்பட்டது. இது மட்டுமின்றி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வறுமையை ஒழிக்க இதுவரை 8,800 மில்லியன் அமெரிக்க டாலரை செலவிட்டுள்ளார். அமெரிக்காவை, உலக வங்கியை மட்டுமே மையப்படுத்திய உலக ஒழுங்கை மாற்றி " இலத்தீன் அமெரிக்க மக்களுக்கான பொலிவாரிய கூட்டமைப்பை" (Bolivarian Alliance for the Peoples of Our America - ALBA) உருவாக்கியுள்ளார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சாவேஸின் பங்கு அளப்பரியதாகும். சாவேஸிற்கு செவ்வணக்கம் கூறுவோம்.... சாவேஸ் மேற்கொண்ட பணிகளை அறிந்துகொள்வது தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு உதவும்.

சாவேஸ் தலைமையிலான வெனிசுவேலா அரசு, இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஐ.நாவில் ஆதரித்தது, இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழர்களையும், அவர்களின் உறவுகளான தமிழகத் தமிழர்களையும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்களை இணைக்கும் வலை பின்னல் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஈழத் தமிழ் மக்களின் உண்மை நிலை அவர்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை போன்ற காரணங்கள் இருந்தாலும், உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளின் சர்வதேச உறவு என்பது இன்றளவில் தவறாகத்தான் உள்ளது. ஆனால் பெருகிவரும் சர்வதேச நெருக்கடி இத்தகைய நிலைப்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவரும்; ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுடைய இயல்பான நண்பர்களை அடையாளம் காணச் செய்யும்.

மேலும், இன்றைய உலக ஒழுங்கு இனப்படுகொலைகளை அனுமதித்து வருகின்றது. இந்த ஒழுங்கு மாற்றப்பட்டு, உலகில் ஒடுக்கப்படும் மக்களும், ஒடுக்கப்படும் அரசற்ற தேசங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளும் ஒன்றிணைந்த ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பது தமிழீழத்தில் நடக்கும் இனப்படுகொலை நமக்கு எடுத்துச் சொல்லும் பாடம்.

அத்தகைய ஓர் உலக ஒழுங்கைப் படைப்பதில் வெனிசுவேலாவும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளும் முன்னோடியாகத் திகழும். வெனிசுவேலா மக்களும், தமிழக மக்களும் இயல்பான நட்பு சக்திகளாக அமைவர். ஒரு வரலாற்றுக் கட்டத்தில் தமிழக மக்களாகிய நாமும் அத்தகைய இணைவிற்காக கை நீட்டுவோம்.

ஏகாதிபத்திய நாடுகளுடன் நமது நலன்கள் இணையும் புள்ளியில் நாம் செய்ய வேண்டியதுதான் 'லாபி' எனும் அரசதந்திர நடவடிக்கைகள். அவை தற்காலிகமானவை. ஆனால், ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளுடன் நாம் அமைக்க வேண்டியது இயற்கையான கூட்டணியாகும். அது நீடித்தும் இருக்கும்.

இன்றிருக்கும் உலக ஒழுங்கை மாற்றுவதற்காகவும், சோசலிச உலகைப் படைப்பதற்கும் சாவேஸ் செய்த பணிகளை நாம் நினைவுகூர்தல் வேண்டும்.

- சேவ் தமிழ்சு இயக்கம் www.save-tamils.org +91 98416 24006

Monday, March 25, 2013

ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்

2009 ல் திமுக, அதிமுக, தேமுதிக என பெரிய கட்சிகளும், ஆதிக்க சாதி சார்ந்த ஊடங்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஈழம் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொண்டன. எல்லாரும் சேர்ந்து ஈழத்துக்கு குழி தோண்டினார்கள். ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன், இனப்படுகொலை என்ற வார்த்தைகள் பொதுவெளியிலும், ஊடங்கங்களிலும் பேச முடியாதவைகளாக இருந்தன. ஒன்னரை லட்சம் மக்களை பலிகொடுத்தும், நம் பக்கம் நியாயம் இருந்தும், உரத்துப் பேசும் திராணியற்று இருந்தோம்.

சிறு சிறு இயக்க கூட்டங்களிலும், திரும்ப திரும்ப பார்த்த அதே முகங்களுடன், அதே முழக்கங்களுடன் கழிந்தன. ஆனால் இன்று நிலைமை என்ன? எந்த திமுகவும், அதிமுகவும் ஈழம் ஒரு பொருட்டல்ல; அது ஒரு சிறு கூட்டத்தின் அரசியல் என்று ஒதுங்கி இருந்தார்களோ, அவர்களே இன்று தனி ஈழமே தீர்வு என்கிறார்கள். பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் வேண்டுமானால் இந்த இனப்படுகொலைகளும், பாலச்சந்திரன்கள் கொல்லப்பட்டதும், இசைபிரியாக்கள் வேட்டையாடப்பட்டதும் இப்போதுதான் சென்று இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய இயக்கங்கள் நடத்தும், அதிகார மட்ட தொடர்புகளுடன் இருக்கும் ஜெயாவுக்கும், கருணாவுக்கும் இப்போது அக்கறை வரக் காரணம் மாணவர்களின், பொது மக்களின் எழுச்சி.

காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பெறும் லாபங்களை விட கருணாநிதிக்கு இன்று கட்சியைக் காப்பது முக்கியம். மாணவர் போராட்டத்தின் மூர்க்கமும் அவர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் ஆதரவும் கருணாநிதியை பீதியடைய வைத்து உள்ளன. இதற்கு பின்பும் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது திமுகவுக்கு சாவு மணி அடித்துவிடும் என்ற பயம்தான் இன்றைய காங்கிரசு கூட்டணியிலிருந்து அவசர வெளியேற்றம்.

ஈழப் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் எதிர்த்து செயல்பட்ட ஜெயா, இன்று ஈழத்தின் தேவையை முழுமையாக ஏற்றுக் கொண்டா செயல்படுகிறார்? இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக போய்க் கொண்டிருக்கிறது. நாம் இதில் தேவை இல்லாமல் நடவடிக்கை எடுத்து சிக்கிக் கொள்ள கூடாது என்ற பயம்தானே ஒதுங்கி நிற்க சொல்கிறது! ஈழப் போராட்டம் தமிழகத்தின் முக்கிய பிரச்சினை அல்ல என்று முழங்கிய அரசியல் வித்தகர்கள் எங்கே போனார்கள்?. இனி தமிழகத்தில் ஈழ கோரிக்கை இல்லாமல் யாரும் கட்சி நடத்த முடியாது என்ற நிலை வந்து விட்டது.

செய்திகளை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் இன்று போட்டி போட்டு விவாதிக்கின்றன. இவர்கள் எல்லாம் இன்று திருந்தி விட்டர்களா என்ன? இப்பொழுதும் இந்த இனப்படுகொலையைப் பற்றி பேசவில்லை என்றால், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போவோம் என்ற பயம்தானே காரணம்.

இன்று தமிழருக்கு ஒரு தீர்வும் அற்ற வெற்றுத் தீர்மானமாக அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறி இருக்கிறது.

மத்திய காங்கிரசு அரசும், எதிர்க் கட்சியான பாஜகவும் ஈழத்திற்கு எதிரான நிலையிலேயே உள்ளன. நடந்தது இனப்படுகொலை என்பது அவர்களுக்குத் தெரியும். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும் இந்திய அதிகார மையங்கள் அல்லவா? அதனால் தமிழர்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள்.



எப்படி தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஈழத் தமிழர்களுக்குகு துரோகம் செய்து இருந்தாலும், இன்று மக்கள் முன் அம்பலப்பட்டு போய் ஈழத்தை ஆதரிக்கிறார்களோ, அது போல இந்தியாவின் முக்கிய கட்சிகளும் தங்களுக்கு சுயவிருப்பம் இல்லை என்றாலும் ஈழத்தை ஆதரித்தே ஆக வேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம். இல்லையெனில் குறைந்த பட்சம் ஈழப்பிரச்சினையில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்காதவாறு முடக்குவோம். மற்ற மாநில மாணவர்களிடமும், பொது மக்களிடமும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கொண்டு செல்வோம்.

உலகத்தின் மனசாட்சியை இனப்படுகொலை ஆதாரங்களின் மூலம் தட்டிக் கொண்டே இருப்போம். சர்வதேச அரசியலில், நமக்கான மாற்றம் வரும்வரை ஈழக் கொள்கையை பேசிக் கொண்டே இருப்போம். சொந்த நாட்டில் போராடும் சிறுபான்மை மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் எப்படி வேண்டுமானாலும் ஒடுக்கலாம், உலகம் கேள்வி கேட்காது என்ற சர்வதேச அரசியல், அனைத்து ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது என உலகுக்கு புரிய வைப்போம்.

இலங்கை மீது பொருளாதார தடை, சர்வதேசத்தின் இடைக்கால அரசு, சர்வதேச விசாரணை, தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

வெ.தனஞ்செயன்
சேவ் தமிழ்சு இயக்கம்

Friday, March 22, 2013

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?



இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?


இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.


கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் தற்போது தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறிவிட்டதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?


பதில்: இலங்கைத் தமிழர் விவகாரம் ராஜீவ் படுகொலைக்கு முன்பு, பின்பு என இரு வகையாகப் பார்க்கப்பட்டது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தார்கள்.ஆனால் 2009ஆம் ஆண்டில் நான்காம் கட்டப் போர் என சொல்லப்படும் கடைசிகட்டப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.பெண்கள், கற்பழிப்புக்கு உள்ளானார்கள். குழந்தைகள் கூட குதறப் பட்டனர். எண்ணற்ற இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பதற, பதற கொலை செய்யப் பட்டனர்.


இதுதான் தமிழகத்தில் நிலைமை மாற காரணமாகியது. அதுவும் சேனல்&4 என்ற லண்டன் தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படங்களில் வெளியான காட்சிகள் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. குறிப்பாக, தமிழக மக்களைப் பதறச் செய்துவிட்டது.இலங்கைத் தமிழர் விவகாரம் இப்போது முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என தமிழக மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அதுவும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கரங்களிலிருந்து முன்னேறி மக்கள் கைகளுக்குப் போய்விட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் மாணவர்களின் போராட்டங்கள்.


கேள்வி: இவ்விஷயத்தில் இந்திய (நடுவண்) அரசின் நிலைப்பாடு புதிராக உள்ளதே... இது அண்டை நாட்டு விவகாரம் என்கிறார்களே...?


பதில்: முதலில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை ராஜீவ் படுகொலையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். மத்தியில் அவர்கள்தான் ஆள்கிறார்கள். நான் குறிப்பிட்டதுபோல், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்பு உருவாகியுள்ள புதிய சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.


அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்ட காட்சிகள் தமிழகத்தை உலுக் கியுள்ளது. இது அண்டை நாட்டு பிரச்சனை எனக்கூறி ஒதுங்க முடியாது. முன்பு கிழக்கு பாகிஸ்தானில் (இன்று பங்களாதேஷ்) உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டபோது, அகதி களாக வங்காளிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்விவகாரத்தை இனி இந்தியா மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அந்நாட்டு விவகாரத்தில் துணிந்து தலை யிட்டார்.


‘முக்தி வாகினி’ என்ற புரட்சிப் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்து, ‘பங்களாதேஷ்’ என்ற நாடு உருவாக இந்தியா உதவியது.‘திபெத்’ மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தபோது, ‘தலாய்லாமா’வுக்கு நேரு அடைக் கலம் கொடுத்தார்.


ஏன்? விடுதலைப்புலிகள்,டெலோ, பிளாட் போன்ற தமிழ் ஆயுத அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? ராஜீவ் காந்தி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதி களில் உணவுப் பொட்டலங்களை வீச சொல்ல வில்லையா? இப்போது மாலத்தீவின் அரசியல் குழப்பத்தில் தடையிடவில்லையா?


இந்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு, இந்தியா இப்போது இரட்டை வேடம் போடுகிறது. வரலாற்று உண்மைகளை மறந்து விட்டுப் பேசக்கூடாது.


இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அம் மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.


கேள்வி: இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவாக செயல்படாவிட்டால், இலங்கை சீனாவின் உதவியை நாடும் என்றும், இதனால் தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இந்தியா கூறுகிறதே...


பதில்: இந்தியாவைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் உதவிகளைப் பெறுகிறது இலங்கை. மறுபுறம் இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானிடமும் உதவி பெறுகிறது. அதாவது எதிரும், புதிருமான அரசியல் எதிரிகளை எல்லாம் இலங்கை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதிலும், ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.


தனது துறைமுகங்களை சீனாவின் கடற்படை பயன்பாட்டிற்கு இலங்கை அனுமதிக்கிறது. இது ராஜீவ் & ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு எதிரானது.


சீனா பெரும் முதலீடுகளை இலங்கை யில் கொட்டியிருக்கிறது. இந்தியா பங்களா தேஷையும், மாலத்தீவையும் கட்டுப்படுத்துவது போல சீனா, இலங்கையைக் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வந்துவிட்டது.


தற்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை, தடுமாற்றத்தில் உள்ளது. இந்தியா உதவினாலும், உதவாவிட்டாலும் இலங்கை சீனாவுக்குத்தான் விசுவாசமாக இருக்கும். இதை இந்திய - சீனப் போரிலும் பார்த்தோம். எனவே இந்தியா இதைக் கூறியே தமிழர்களை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றிக் கொண் டிருக்கிறது.


கேள்வி: அமெரிக்க எதிர்ப்பு மனநிலை உடைய நீங்கள், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எப்படி ஏற்கிறீர்கள்?


பதில்: நாங்கள் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கும், அதன் பன்னாட்டு பயங்கர வாதத்திற்கும் எதிரானவர்கள். அதேநேரம், நீதியின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பவர்கள்.


இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேச அமெரிக்காவுக்கு அருகதை கிடையாது. ஜப்பானில் அணுகுண்டு வீசியதில் தொடங்கி, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்க பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட நாடுகளும், மக்களும் அதிகம்.இதே இலங்கை ராணுவத்துக்கு தமிழர் களைப் படுகொலை செய்ய, 1984ல் இலங் கையின் வனப்பகுதிகளில் ‘கிரின் பரேட்’ என்ற தனது ராணுவ அதிரடிப்படை மூலம் இலங்கை ராணுவத்துக்கு இதே அமெரிக்காதான் பயிற்சி கொடுத்தது.


இப்போது அமெரிக்கா, நாடகம் ஆடுகிறது. அதன் நோக்கம் இலங்கையைப் பயன்படுத்தி, சீனா அப்பகுதியில் மேலாதிக்ககம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இலங்கையை மிரட்டவே அமெரிக்கா நாடகமாடுகிறது.


அவர்கள் கொண்டுவரும் தீர்மானம், ‘இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசே ஒரு விசாரணையை நடத்தவேண்டும்’ என்கிறது. ராஜபக்சே தன்னைத்தானே குற்றவாளி என முடிவெடுக்க அனுமதிப்பாரா? இது வேடிக்கையாக இல்லையா? நாங்கள் சொல்வது என்னவெனில், இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை அறிவித்து, ஒரு சுதந்திரமான - சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.


இலங்கை எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.


கேள்வி: இந்த விவகாரத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?


பதில்: நாங்கள் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்கள். உலகில் எங்கு மனித உரிமை மீறல்களும், இனப்படுகொலைகளும் நடந்தாலும் அதைக் கண்டிப்பவர்கள். பாலஸ் தீனம், ஈராக், சோமாலியா, குஜராத், காஷ்மீர், மணிப்பூர், இலங்கை என எங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.


இலங்கை நமக்கு அருகில் உள்ள நாடு என்பதாலும், அங்குள்ள தமிழர்கள் நமக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் என்ப தாலும் இவ்விஷயத்தில் மனிதாபிமானத்தோடு அக்கறைக் காட்டுவது அவசியமாகிறது.


கேள்வி: இலங்கையில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கொன்றவர்கள். அதை மறந்துவிட்டீர்களா?


பதில்: நாங்கள் மறக்கவில்லை. புலிகளின் பல தவறுகளில் அதுவும் ஒன்று. அதேசமயம், அச்சம்பவம் குறித்து 2002ல் நடைபெற்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபாகரன், பகிரங்க மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பிரபாகரனுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் குழு கிளிநொச்சியில் புரிந்துணர்வு சந்திப்பை நடத்தினார்கள்.அதேசமயம், நாங்கள் தெளிவாக இருக் கிறோம். நாங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் இப்போது களத்தில் இல்லை.


நாங்கள் இலங்கையில் போரினாலும், சிங்கள பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமானத்தோடு வாதாடுகிறோம். நாங்கள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிந்தைய புதிய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுகிறோம்.


கேள்வி: விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும், ராஜபக்சே தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் சமப்படுத்தி இலங்கையிலும், தமிழகத்திலும் சிலர் பேசுகிறார்களே...


பதில்: அவர்களுக்காக நாம் பரிதாப் படுகிறோம். இப்போது இலங்கை அரசும் இதேபோல் கருத்துக்களைப் பேசி தங்களின் தவறுகளை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். கொத்துக் கொத்தாய் சொந்த பந்தங்களை இழந்தவர்கள், மயானத்தில் நின்றுகொண்டு ஓலமிடும்போது, ‘பார்த்தாயா... எங்களை அவர்கள் கொன்றது நினைவில்லையா? இப்போது தெரிகிறதா? எங்களைக் கொன்றது என்ன நியாயம்?’ என்றெல்லாம் பேசுவது மனிதாபிமானமற்றது. புலிகள் செய்த தவறுகளுக்கு அப்பாவித் தமிழ் மக்களைப் பொறுப்பாக்கக் கூடாது.


“...எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம்; (எவ்வளவு விரோமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள்...” என்ற திருமறை வசனம் (திருக்குர்ஆன் 5:8) நம்மைக் கடுமையாக எச்சரிக்கிறது.


அதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிலர் இதுபோன்ற மனநிலையில் பொறுப்பற்ற முறையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
அரசியல் தெளிவு, சமூகப் பொறுப்பு, நல்லிணக்கம் குறித்து புரிதல் இல்லாதவர்கள் இப்படி செய்கிறார்கள். புலிகளின் விவகாரத் தையும், அப்பாவி தமிழ் மக்களின் வாழ் வுரிமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.


பெரும்பான்மையான தமிழக முஸ்லிம்கள் எங்களது கருத்தோட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். முஸ்லிம்களை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்தும், எமது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வருகிறது. சிறுவன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முதலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது மனித நேய மக்கள் கட்சி தான். அதன்பிறகுதான் மற்ற கட்சிகள் களத்துக்கு வந்தன. இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடு வதற்கு உத்வேகத்தைத் தந்தது மமக நடத்திய முதல் போராட்டம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.


கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் நிலைப் பாடு என்ன?


பதில்: இங்கு தமிழகத்தில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், இம்மண்ணில் பூர்வகுடிகளாக வாழும் அனைவரும் நம்மைத் தமிழர்கள் என்கிறோம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழி இணைக்கிறது.


இலங்கையில் சூழல் வேறு. அங்கு இந்துக் கள், சைவ மதத்தினர் உள்ளிட்டவர்கள் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினர் தங்களை ‘மலையகத் தமிழர் கள்’ என்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்கி றார்கள். அதாவது, தங்களை மற்றொரு தனித்த தேசிய இனமாகக் கருதுகிறார்கள்.


இப்போது இலங்கையில் கோயில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என சிறுபான்மை யினருக்குச் சொந்தமான 65 வழிபாட்டுத் தலங்களை சிங்கள வெறியர்கள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். பௌத்த குருமார்கள் மத வெறிப் பிடித்து அலைகிறார்கள். அங்கு ‘பொது பல சேனா’ என்ற புத்த மதவெறி அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை களைத் தூண்டி வருகிறது. இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அவர்கள் குறிவைக்கிறார்கள்.


முஸ்லிம்கள் முறைப்படி உண்ணும் ‘ஹலால்’ முத்திரையிடப்பட்ட உணவு கலாச் சாரத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு (முகத்திரை) தடைவிதிக்க முனைகிறார்கள்.


முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படுகிறது.


கேள்வி: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?


பதில்: இது ஐ.நா. சபை முடிவெடுக்க வேண்டிய ஒரு சர்வதேச விவகாரமாகும். அங்கு ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலை யகத் தமிழர்கள் என்று மூன்று பெரும் இனங் களின் உரிமைகள் அடங்கியிருக்கிறது. இதை கவனமுடனும், மனிதாபிமானத்தோடும் அனைவரும் அணுக வேண்டும்.
இவ்விவகாரம் என்பது ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து, தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டித்த பிறகு பேசவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வாகும்.


கேள்வி: இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?


பதில்: முன்பு வடக்கிலிருந்து விரட்டியடிக் கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் கண்டு வருகிறார்கள். அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்கள் மீண்டும் கிடைக்க துணை நிற்க வேண்டும். தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இரத்த பந்தங்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். இதில் இரண்டு சமூகங்களின் தலைமையும் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக இணைவது குறித்து வரும் காலங்களில் இருதரப்பும் விவாதத்தை தொடங்க வேண்டும்.


கேள்வி: இதுகுறித்து நீங்கள் முயற்சிகள் ஏதும் எடுப்பீர்களா?


பதில்: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து யாரும் பேசுவ தில்லை. அவர்களில் பலர் இன்னமும் அகதிகளாக உள்ளனர். நாங்கள் பல மேடைகளில் அதைப் பேசி வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் தலைமையும், தமிழர் தலைமையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தலைமையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோளாகும். இதை நாங்கள் முன்னெ டுக்கத் தயாராக இருக்கிறோம். சகோதரர்கள் நமக்குள் உறவு வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம். விரைவில் அதற்கான காலம் கனியும் என நம்புகிறோம்.

=========

இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்



இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்

த‌மிழ‌கமெங்குள்ள‌ மாண‌வ‌ர்க‌ளும், இளைஞ‌ர்க‌ளும் இலங்கை மீது தற்சார்புள்ள ப‌ன்னாட்டு போர்க்குற்ற விசார‌ணை கோரியும், ஈழ‌ ம‌க்க‌ளிட‌ம் பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌க்கோரியும் வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ போராட்ட‌ங்க‌ளை க‌ட‌ந்த‌ வார‌த்தில் இருந்து ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.மாண‌வ‌ர்க‌ளின் இப்போராட்ட‌ம் காட்டுத் தீ போல‌ த‌மிழ‌க‌மெங்கும் ப‌ர‌வி ச‌மூக‌த்தில் உள்ள‌ ப‌ல‌ பிரிவின‌ரையும் ஈழ‌த்த‌மிழ‌ருக்கான‌ நீதிப் போராட்ட‌த்தில் பங்கெடுக்க‌ வைத்த‌து.















இன்று நூற்றுக்கணக்கான தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈழத்தமிழருக்கான நீதி கோரும் போராட்டத்தில் தங்களை
இணைத்துக்கொண்டு சென்னையில் உள்ள டைடல் பார்க் முன்பு ஒரு மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகின்றனர். பழைய
மகாபலிபுரம் சாலையின் இருபகுதியிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான CTS, TCS, HCL, Polaris, Ramco, HP,
Infosys, Accenture, Verizon உள்ளிட்ட நிறுவனங்களில் பணி புரிந்து வரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த மனித சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும், இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள ஐநாவை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகளையும், இனப்படுகொலை இலங்கையுடன் சேர்ந்து நிற்கும் இந்தியாவை கண்டிக்கும் முழக்கங்களையும் தாங்கிய பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்தி போராடுகின்றனர். இன்று பெருங்குளத்தூர் பகுதியில் உள்ள சிறீராம் மென்பொருள் பூங்காவின் முன்னும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தையும்,டைடல் பார்க் முன்பு நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தையும் பெரும்பான்மையாக தகவல்தொழில் நுட்ப பணியாளர்களையும், இளைஞர்களையும் கொண்ட சேவ் தமிழ்சு இயக்கம் முன்னெடுத்து வருகின்றது.


இதே போன்ற‌தொரு போராட்ட‌ம் நேற்று(மார்ச் 19,2013) சில‌ மென்பொருள் ப‌ணியாள‌ர்க‌ளால் DLF மென்பொருள் பூங்கா முன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து, அதில் 300க்கும் அதிக‌மான‌ மென்பொருள் ப‌ணியாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு இல‌ங்கை மீது த‌ற்சார்புள்ள‌ ப‌ன்னாட்டு போர்க்குற்ற‌, இன‌ப‌டுகொலை விசார‌ணை வேண்டும் என்று முழ‌க்க‌ங்க‌ள் எழுப்பியுள்ள‌ன‌ர். த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ளுக்கு செவிம‌டுக்காம‌ல், இந்திய‌ அரசு இல‌ங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையில், த‌ர‌க‌ராக‌ செய‌ல்ப‌ட்டு ஐநா தீர்மான‌த்தை மேலும் நீர்த்து போக‌ செய்துள்ள‌து. இதையெல்லாம் இந்தியா இல‌ங்கை ந‌ட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு செய்துவ‌ருகின்ற‌து. த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ கோடிக்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ளை க‌ருத்தில் கொள்ளாம‌ல், இன‌ப்ப‌டுகொலை இல‌ங்கை அர‌சுட‌ன் சேர்த்து நிற்கும் இந்திய அர‌சை மென்பொருள் பணியாளர்களாகிய நாங்க‌ள்
க‌ண்டிக்கின்றோம்.

இந்திய‌ அர‌சுக்கும், ப‌ன்னாட்டு ச‌மூக‌த்திற்கும் மென்பொருள் பணியாள‌ர்க‌ளாகிய‌ எங்க‌ள‌து கோரிக்கைக‌ள் :

1. இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நடத்து.

2. ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதி.

3. ஈழத்தமிழர்களிடம் தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து.

மென்பொருள் ப‌ணியாள‌ர்க‌ளாகிய‌ எங்க‌ள‌து இந்த‌ போராட்ட‌ம் ந‌டைபெற்று வ‌ரும் ஐநா ம‌னித‌ உரிமை கூட்ட‌த்தொட‌ருட‌ன் முடியாது, இலங்கையை புறக்கணிக்கும் போராட்டத்தை நாங்கள் வெகு தீவிரமாக எடுக்கப் போகின்றோம், இந்த போராட்டமான
தமிழகத்தில் வர்த்தகமாக வரும் இல‌ங்கை பொருட்களை புறக்கணிப்பது, இல‌ங்கையில் சுற்றுலாவை புற‌க்க‌ணிப்ப‌து, இல‌ங்கை அணி வீர‌ர்க‌ள் ப‌ங்கு கொள்ளும் IPL கிரிக்கெட் போட்டிக‌ளை புற‌க்க‌ணிப்ப‌து என‌ எல்லா த‌ள‌ங்க‌ளில் நிக‌ழும்.

போராட்டக் காட்சிகளின் தொகுப்பு:



Monday, March 18, 2013

மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஐ.டி துறையினர்



இப்போது இல்லாவிட்டால்…பின் எப்போது?

ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது. இந்த சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்?

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 18 மைல் தொலைவில் இருந்தும் நம்மால் அந்த இன அழிப்பு போரை நிறுத்த முடியவில்லை. ஒரு இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டோ அல்லது தடுக்க முடியாதவர்களாகவோ இருந்தோம்.இந்தப் போரில் 90000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறை குழந்தைகளே ஊனமாக்கப்பட்டுள்ளார்கள்.

போருக்குப் பின்னால் நெஞ்சை பிளக்கும் ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.அந்தப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்திர்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்றும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.ஐநா. செயலர் பான் கீ மூன் மூவர் நிபுணர் குழுவும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது,தமிழக சட்ட மன்றத்தில் இதை வலியுறுத்தி தமிழக சட்ட சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேற் சொன்ன எந்த பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு வெற்றுத் தீர்மானத்தையே அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொலைகாரன் தன்னைத் தானே விசாரித்து அளித்த‌ "ந‌ல்லிண‌க்க‌ அறிக்கையை" ஏற்றுகொண்டு, அதில் உள்ள‌ ப‌ரிந்துரைக‌ளை நிறைவேற்ற‌ச் சொல்லும் கோரிக்கையை முன்வைத்து இல‌ங்கைக்கு சாமர‌ம் வீசும் தீர்மான‌த்தை முன்மொழிந்துள்ள‌ வ‌ட‌ அமெரிக்காவையும், அத‌ன் கூட்ட‌ணி நாடுக‌ளை நாம் வன்மையாக க‌ண்டிக்க வேண்டும்.

.

இலங்கை மீதான ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையே, இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்குமான ஒரு குறைந்த பட்ச நீதியாகவும்,தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறைகளை தடுத்த நிறுத்தவும் ஏதுவாக அமையும்.

அதே வேளையில் இந்தியாவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியும்,அமெரிக்கா கொண்டு வரும் பல்லில்லா தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தமிழர்களுக்கான‌ நீதி வேண்டியும் த‌மிழ‌கம் முழுக்க‌ போராடி வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையும் நாம் ஆதரிக்கின்றோம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூகமும் ஈழத் தமிழர்களுக்கான நீதி வேண்டியும் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறது.

பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் குழந்தைகளையும்,ரத்த வெள்ளத்தில் தம் குழந்தைகளை மடியில் கிடத்திக் கதறிய‌ பெற்றோரையும், கணவனை இழந்த பெண்களையும்,பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையும் தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பார்த்து பார்த்து மனம் வெதும்பி, செய்வதறியாது நின்ற ஒரு சமூகம் இன்று வீறு கொண்டெழுந்து வீதிக்கு வந்து போராடும் போது,அச்சமூகத்தின் ஒரு அங்கமான ஐ.டி ஊழியர்களான நாமும் களமிறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.கை நிறைய சம்பளத்தோடு குளு குளு அறையில் கோக் உறிஞ்சி பாப்கார்ன் கொரிக்கும் ஆடம்பரக் கூட்டமில்லை நாம்.நமக்குள்ளே பேசி பேசி ஆகப்போவதென்னவென்று சலித்துக் கலைந்தது போதும். பெருந்திரளான இளைஞர்களை உள்ளடக்கிய ஐ.டி துறையின் வலிமையை இந்திய அரசின் முதுகில் அறைந்து சொல்ல வேண்டாமா ? நம் குரல் எதிரிகளின் குரல் வளையை நெறிக்கும் புரட்சிகர மாற்றங்களைச் செய்ய வல்லது என்று பறை சாற்ற வேண்டாமா ?

ஒன்று கூடுவோம் ! உரத்துச் சொல்வோம் ! மக்கள் சக்தியை உருத்திரட்டுவோம் !

இல‌ங்கை மீது ச‌ர்வ‌தேச‌ ப‌ன்னாட்டு விசார‌ணையைக் கோரியும் இலங்கை அரசின் மீ்து பொருளாதார தடை விதிக்கக் கோரியும் வ‌ரும் புத‌ன‌ன்று(மார்ச் 20) மாலை 4 மணிக்கு டைட‌ல் பார்க் முன்பு வ‌ந்து திர‌ள‌மாறு உங்களை அழைக்கிறோம்.

"ஒரு இன‌ப்ப‌டுகொலை ந‌ட‌க்கும் பொழுது நீங்க‌ள் அமைதியாக‌‌ இருக்கின்றீர்க‌ள் என்றால், நீங்க‌ள் அந்த‌ ப‌டுகொலையை ஆத‌ரிக்கின்றீர்க‌ள் என‌ப்பொருள்" - டெசுமாண்ட் டூட்டூ


Thursday, March 14, 2013

தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும் - பிரித்தானிய தமிழர் பேரவை‏



அன்பான மாணவர்களே!

அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது.

நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆயினும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களைப் போலவே 70களில் மாணவர்கள், இளைஞர்கள் தமிழீழத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த வெகுசனப் போராட்டங்களில் இறங்கியபோது போராட்டத்தின் நியாயப்பாடு சாதாரண மக்களிடையே வேகமாகப் பரவியது. அதன் தார்மிக பலம் வலுப்படுத்தப்பட்டது.

உங்களைப் போலவே 2000 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் ஸ்ரீலங்காவின் கொடிய இராணுவ அடக்குமுறையின் மத்தியில் துணிந்து நின்று "பொங்கு தமிழ்" முழக்கத்தின் மூலம் எழுச்சியை ஏற்படுத்தியது உலகின் மனச் சாட்சிக்கு விடுத்த சவாலாக அமைந்தது. ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களின் உள்மன வெளிப்பாடாக அது அமைந்தது.

உங்களைப் போலவே 2009ஆம் ஆண்டு லண்டனில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் திரண்ட இளையோர்கள், மாணவர்கள் பிரித்தானியாவை மட்டுமல்ல உலகின் கவனத்தையே தம் பக்கம் திருப்பியது எம் வெகுசன எழுசிப் போராட்டத்தில் ஒருமுக்கியமான அத்தியாயமாகும்.

அன்று பாலச்சந்திரனைப் போன்ற எத்தனையோ அப்பாவிக் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றழித்துக் கொண்டிருக்கும் போது உலகின் மனச் சாட்சியில் நம்பிக்கை வைத்து எங்கள் இளையவர்களும் நாங்களும் கதறிய போது உலகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

போர்க் குற்றம் மற்றும் இனவழிப்பு நடைபெற்றுள்ளது, இப்போதும் தொடருகின்றது என்பதற்கான ஆதாரங்கள் தமிழர் தரப்பால் மட்டுமன்றி நடுநிலையானவர்களாலும் பெருமளவில் வெளிப்படுத்திய பின்னரும் உலகம் மிக நிதானமாகவே அசைகின்றது இவ்வாறு சிங்கள அரசுக்கு காலத்தையும் வெளியையும் கொடுப்பது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பை முழுமையாகுவற்குக் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும்.

அநீதிக்கெதிரான எம் போராட்டம் உலகின் பூகோள நலன்களில் சிக்கிச் சிதையாது வெற்றியடைய வேண்டுமானால் இந்திய மக்களின் பேராதரவு நீதிக்கான எம் கோரிக்கைக்குச் சாதகமாக திருப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும்.

புனிதமான உங்கள் குரல்கள் எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.


பிரித்தானிய தமிழர் பேரவை‏

Monday, March 11, 2013

பற்றி பரவும் மாணவர் போராட்டமும், அர‌சிய‌ல் அட‌க்குமுறையும்




லயோலா கல்லூரி மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தமிழக காவல்துறையினரால் அடாவடியாக நேற்று நள்ளிரவில் கலைக்கப் பட்டிருக்கிறது.போராட்ட அரங்கிற்குள் அத்து மீறி நுழைய முற்பட்ட போலிசை அங்கிருந்த மாணவர்கள், தோழர்கள் இரண்டு அடுக்காக நின்று தடுக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் மீது தடியடி பிரயோகமும் நடந்துள்ளது. மீறிச் சென்ற போலிசு அரங்கைச் சுற்றி வளைத்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களையும், பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களையும் குண்டுக்கட்டாக கைது செய்து, அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து போட்டிருக்கின்ற‌து. தமிழக அரசின் திட்டமிட்ட ஒரு முயற்சியாகத் தான் இந்த அடாவடித் தனம் நடந்தேறியிருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே உண்ணாவிரதம் நடைபெறும் கோயம்பேடிலிருந்து வடபழனி வரையிலான இரு வழிப் பாதை ஒரு வழிப் பாதையாக்கப்பட்டது. போக்குவரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை பார்த்த தோழர்கள், இந்த வெறிச்செயலை முன் கணித்திருக்கிறார்கள். இருப்பினும், மாணவர்களும், தோழர்களும் அறவழியிலேயே கைது நடவடிக்கைக்கு எதிராக‌ போராடியிருக்கின்றார்க‌ள்.



ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட மக்கள், அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். மூன்றே நாட்களில் இப்போராட்டத்திற்கு கிடைத்த வரவேற்பும், ஆதரவும் ஆளும் அரசையும், ஈழப்போராட்டத்தில் அரசியல் செய்துவரும் அரசியல்வாதிகளையும் திகிலடையச் செய்துள்ளது. குறிப்பாக ராஜப‌க்சே அரசுக்கு இச்செய்தி பலமாக எட்டியிருக்க வேண்டும். இந்தியாவின் நட்பு நாடான இனப்படுகொலை ராஜபக்சே அரசு, இந்திய‌ அர‌சுக்கு கொடுத்திருக்கும் அழுத்த‌ம், அப்ப‌டியே இந்திய‌ அர‌சின் வாயிலாக‌ த‌மிழ‌க‌ அர‌சையும் எட்டியுள்ள‌து. மேலும் இன்று கல்லூரிகள் தொடங்குவதால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மற்ற கல்லூரி மாணவர்களின் ஆதரவு கிடைத்து, இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்தேறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாட‌கவே இரவோடு, இரவாக இந்த உண்ணாவிர‌த‌ போராட்ட‌த்தை காவ‌ல்துறை க‌லைத்துள்ள‌து.



இதை வெறுமனே சனநாயக மறுப்பு என்ற அளவில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. ஆளும் இந்திய அரசு மட்டும் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டது அல்ல. தமிழக அரசு என்பது தன்னளவில் பெரிய அதிகாரங்களை கொண்டதாக காட்டிக்கொண்டாலும், உண்மையில் அதன் வேலை இந்திய அரசிற்கு கங்காணி வேலை பார்ப்பதே. இதை தான் இன்று ஜெயாவும் செய்துள்ளார். இலயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளின் ஒன்று ஜெயா நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானங்களை செயல்படுத்தக் கோரியிருந்தது, இருந்தும் அவர் உண்ணாவிரதத்தில் அடக்குமுறை ஏவிவிட்டது, அவர் இதுவரை பிரதமருக்கு எழுதிய கடிதங்கள், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் எல்லாம் முந்தைய ஆட்சியில் கருணாநிதி நடத்திய‌ உன்ணாவிரதம் போலவே, கண் துடைப்பு நாடகங்கள் என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. த‌மிழ‌க‌த்தில் எந்த‌ க‌ட்சி ஆட்சிக்கு வ‌ந்தாலும் இந்த‌ நிலை தான் தொட‌ரும், இத‌ற்கு அதிமுக‌, திமுக‌, காங்கிர‌சு என்ற‌ க‌ட்சி பேத‌மில்லை. ஆளுகின்ற‌‌ த‌ங்க‌ளை தாண்டி போராட்ட‌ங்க‌ள் செல்லும் பொழுது அது க‌டுமையாக‌ ஒடுக்க‌ப்ப‌டும் முல்லைபெரியாறு, கூட‌ங்குள‌ம் போராட்ட‌ங்க‌ளில் இதுவே ந‌ட‌ந்த‌து, இன்று இல‌யோலா உண்ணாவிர‌த‌ போராட்ட‌த்திலும் இதுவே ந‌ட‌ந்துள்ள‌து.



ஈழப்போராட்டத்தில் லயோலா கல்லூரி மாணவர்களின் அரசியல் புரிதல் தெளிவாக இருக்கிறது. இப்போராட்டத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் சாகத் தயார். எங்கள் உடல்களை வைத்து இப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். லயோலா கல்லூரியில் பற்றிய இந்த நெருப்பு இன்று அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி எனபல இடங்களுக்கு பரவி, எல்லா மாணவர்களும் உண்ணாவிரதம், சாலைமறியல் போன்ற அறவழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதே போல கைது செய்து இராயப்பேட்டை மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டுள்ள இலயோலா கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையிலிருந்தே தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.



மாணவர்கள் மட்டுமல்லாது அரசியல் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், பொதுமக்கள் வரை இப்போராட்டத்திற்கு வலுவான ஆதரவை தெரிவிக்கின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் மொழிப் போர் காலத்தில் பரவலான மாணவர் பங்களிப்பு அரசியலில் இருந்தது. இதன் மூலம் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் மாணவர்களை அரசியல் சார்ந்த செயல்பாடுகளிலிருந்து நீக்கினர். இன்று நடந்துகொண்டிருக்கும் இலயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம், மாணவர்களை சரியான திசையில் அரசியல்மயப்படுத்தி, எங்கே தாங்கள் அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றிவிடுமோ என்ற பயம் அதிமுக, திமுக, காங்கிரசு என்ற எல்லா கட்சிகளிலும் பரவியுள்ளது, இதன் வெளிப்பாடாகவே திமுக, காங்கிரசு இலயோலா மாணவர்களின் போராட்ட அரங்கிற்கு வந்து போராட்டத்தை கைவிட சொல்லி முயற்சித்ததும், மாண‌வர்களின் போராட்டத்தை தங்கள் போராட்டமாக காட்ட‌முயற்சித்ததும் , ஆளும் அதிமுக கட்சி தங்களிடம் உள்ள அதிகாரத்தின் மூலம் போராட்டத்தை அடக்க முயன்ற நிகழ்வும். பொழிப்போருக்கு பிறகான காலத்தில் சரியான அரசியல் கோரிக்கையை நோக்கி தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்திவரும் மாணவர்களின் இப்போராட்டத்தையும், அத‌ற்கு ஆத‌ர‌வாக‌ இன்று ப‌ல‌ இட‌ங்க‌ளில் ந‌ட‌ந்து வ‌ரும் போராட்ட‌ங்க‌ளையும் நாம் ஆதரித்து இந்த போராட்டத்தை பரவலாக மாணவர்களிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் .


மாண‌வர்க‌ள் போராட்ட‌ம் வெல்ல‌ட்டும்

Monday, March 4, 2013

சென்னையில் இலங்கை தூதரக முற்றுகை - நேரடி ரிப்போர்ட்



சிங்கள இனவெறி அரசால் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பெரும் கொந்தளிப்புடன் இன்று (மார்ச் 4, 2013) நடந்தது. தோழர்கள் பழ.நெடுமாறன்,வைகோ,கொளத்தூர் மணி,தமிமுன் அன்சாரி,பெ.மணியரசன்,தோழர் தியாகு,கவிஞர் தாமரை, வேல்முருகன்,மல்லை சத்யா, மே 17 திருமுருகன், த.வெள்ளையன், ஓவியர் டிராஸ்கி மருது, இயக்குனர் புகழேந்தி
உள்ளிட்ட பல கட்சிகள் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள்,உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது கோரிக்கையையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.இப்போராட்டத்தில் சேவ் தமிழ்சு தோழர்களும் களத்தில் இருந்தனர்.

கடைசியாக நடந்த தூதரக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள்,அத்துமீறல்கள் தமிழக காவல்துறையை கொஞ்சம் விழிப்படையச் செய்திருக்க வேண்டும்.நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, குளக்கரை சாலை முழுதும் காவல்துறை வாகனங்களும் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் குவிந்திருந்தனர். நிகழ்வை பதிவு செய்ய ஊடகங்களும் பெருமளவு வந்திருந்தனர்.ஒன்பது மணிக்கு சேரத் தொடங்கிய கூட்டம் நேரம் கூடக்கூட‌ தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.சென்னையின் பல்முனைகளிலிருந்து தோழர்கள் லயோலா கல்லூரி அருகில் குவிந்த வண்ணம் இருந்தனர்.சிங்கள அரசை எதிர்க்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளோடு, இனப்படுகொலை கூட்டாளி இந்திய அரசையும் ஐ.நாவையும் கேள்விக்குள்ளாக்கும் பதாகைகளும் களம் முழுவதும் நிறைந்திருந்தன.

வழக்கமான ஆர்ப்பாட்டம்,முற்றுகை,கைது என்பதோடு அமையாமல் போராட்ட உணர்வெழுச்சி சற்று அதிகமாகவே இருந்தது. தோழர் வைகோ தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராட்ட முழக்கங்களை எழுப்பியபடி இருந்தார்.கருப்புக் கொடிகளோடு முழக்கமிட்டபடி, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையை தோழர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்க தொடங்கினர்.முழக்கமிட்டுக் கொண்டிருந்த போராட்டக்குழுவில் ஒரு பகுதியினர் ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தும் போது சற்றே பரபரப்பு தொற்றிக் கொண்டது. முழக்கத்தின் வீரியம் அதிகரித்தது. வழக்கமாக தயாரிப்புகளாக வைத்திருந்த தண்ணீர் குடங்களை காவல்துறை எடுத்துவந்து தீயை அணைக்க முயன்ற போது, தோழர்கள் அக்குடங்களை பிடுங்கி உடைத்தனர். இன்னும் ஒரு பகுதியினர் சாலையின் இருவழிகளிலும் அமர்ந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.ஒரு கட்டத்தில் முழு நுங்கம்பாக்கமே போக்குவரத்துக்கு வழியின்றி முடங்கிப் போனது.

"தோழர்கள் வன்முறையின்றி முந்திச் செல்லுங்கள்.ஆனால் அடக்குமுறைக்கு அஞ்சாமல் முன்னேறுங்கள்" என தோழர் வைகோ ஒலிபெருக்கியில் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.தோழர்கள் முன்னேறி தடுப்பரணை உடைத்தெறிய முயன்ற போது, காவல்துறையில் ஒரு இள ரத்தம், தோழர் ஒருவரின் கழுத்தில் அறைந்தது. திமிறிய கூட்டம், அந்த புதுப்போலிசை நோக்கி கொடிகளோடு அடிக்கப் பாய்ந்தது. ஒன்றிரண்டு வீசுகள் பதாகைகளோடு விழுந்தன.ஓடிவந்த காவல்துறை உயரதிகாரி, அந்த போலிசு இளைஞரை உடனடியாக ஒளித்துப் பதுக்கினார்.இதை எதிர்த்த தோழர்கள் அனைவரும் மல்லை சத்யா தலைமையில் அங்கேயே சாலையில் அமர்ந்து கைதாக மாட்டோம் என பிடிவாதத்தோடு போராட்டத்தை தொடர்ந்தனர்.பின் தோழர் பழ.நெடுமாறன் தோழர்களோடு பேசி,அமைதியாக கலைந்து சென்று காவல்துறை வாகனங்களில் ஏறி, போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பழ.நெடுமாறன்,வைகோ உள்ளிட்ட தலைவர்களோடு 700க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி, எழும்பூர் அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

போராட்டங்கள் உடனடி வெற்றிக்காக எழுதப்படுபவை அல்ல. போராட்டங்கள் வெற்றிக்கான பாதையின் முன்னகர்வுகள்.இக்கட்டத்தை கடக்காமல், வெற்றியை எட்ட முடியாது.உலகின் மிகப்பெரும் தேசிய இனங்களுள் ஒன்றான நம் தமிழினத்தின் உரிமைகள் மறுக்கப்படும் வரை இத்தகைய போராட்டங்கள் தொடரும். இத்தகைய உணர்வெழுச்சியும் உழைப்பும் தான் அப்போராட்டங்களுக்கு உரமேற்றும்.


==========================

இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று கடலூரில் தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட தோழர் மணிக்கு வீர வணக்கங்கள்.




























முழு புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்.


===================================
=
========
==========================