Friday, February 22, 2013

ஊடக அறிக்கை - தோழர் சரவணக்குமார் கைது குறித்து




மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சேவ் தமிழ்சு இயக்கத்தைச் சார்ந்த ஐந்து தோழர்கள் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் நேற்று காலை (21 பிப்ரவரி 2013) சந்திக்கச் சென்றனர். அவர்களுக்கு கொண்டு செல்வதற்காக முன் தினம் இரவே தோழர் சரவணக்குமார் சென்னையில் இனிப்புகளை வாங்கி வைத்திருந்தார். அந்தப் பையில் தவறுதலாக அவருடைய மொபைல் போன் பேட்டரியையும், சார்ஜரையும் வைத்திருந்திருக்கிறார். அடுத்த நாள் சிறைக்கு செல்லும்போது அந்த பையை அப்படியே எடுத்து சென்றுவிட்டார். முதல் நுழைவாயிலில், ’உள்ளே சோதனை நடத்தப்படும்’ என்று கூறி அனுமதித்தனர். சோதனையின் போது சிறைக்காவலர்கள் பேட்டரியையும் சார்ஜரையும் பார்த்து, சிறை கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறி எடுத்து வைத்துவிட்டு, தோழர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். பேரறிவாளன் , முருகன் இருவரிடம் சுமார் 30 நிமிடங்கள் ஐந்து தோழர்களும் கலந்துரையாடினர். கலந்துரையாடலுக்கு இடையில் உள்ளே வந்த காவலர்கள் பேட்டரி,சார்ஜர் யாருடையது என்று கேட்டு சரவணக்குமாரைத் தனியாக சிறை கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பின் வெளியே வந்த சரவணகுமார் உடன் சென்ற மற்ற தோழர்களிடம் ’எழுதி வாங்கி விட்டு அனுப்பி விடுவார்கள்’ என்று கூறிச் சென்றுள்ளார். அதற்குப்பின் விசாரணை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. பின்னர், அவரை உள்ளூர் பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறை விதி 42ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். நேற்று இரவு , நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பிணையில் எடுப்பதற்கான சட்டரீதியான முயற்சியில் இயக்கத் தோழர்களும், மற்ற தோழமை இயக்கங்களும், வழக்குரைஞர்களும் இன்று ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சேவ் தமிழ்சு இயக்கமானது, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஒரு அரசியல் இயக்கமாகும். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் , பரமக்குடி, தருமபுரி இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராகவும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் இவ்வியக்கம், மரண தண்டனை எதிர்ப்பு போராட்டத்திற்கும் ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாகவே, சேவ் தமிழ்சு இயக்கத்தின் முன்முயற்சியினால் சிறையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இன்றைய சில நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இது மொபைல் போன் பேட்டரி, சார்ஜர்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி அல்ல. சம்பந்தப்பட்ட சார்ஜர், பேட்டரி இரண்டும் தோழர் சரவணக்குமாருக்கு சொந்தமானது. இது தவறுதலாக நடந்த சம்பவமே அன்றி எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


இவண்,

இளங்கோவன் , செய்தி தொடர்பாளர் , 9884468039   
22/02/2013

2 comments:

  1. தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் அந்தச் சகோதரர்களுக்கு இன்றைய தேவை சட்ட உதவி. அப்படியிருக்க. அவருக்குக் கைப்பேசி கொடுப்பதன் மூலம் என்ன பயன் இருக்க முடியும்? என்ன சாதித்து விட முடியும்? கைப்பேசியில் யாரையாவது தொடர்பு கொள்வதன் மூலமே அங்கிருந்து தப்பி விட முடியுமா அவரால்? இது சரவணகுமார் மீதான முகாந்திரமில்லாத, சிறுபிள்ளைத்தனமான குற்றச்சசாட்டு! சேவ் தமிழ்சு இயக்கமும் இன்ன பிற தீவிரமான தமிழ் இயக்கங்களும் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே நாளுக்கு நாள் செல்வாக்கு பெற்று வருவதைப் பொறுக்க முடியாத ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் எதுடா சமயமெனக் காத்திருந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி!

    ReplyDelete
  2. ஒருத்தரை பிடிக்கவில்லையென்றால் அவர்கள் வீட்டில் கஞசா 1 கிலோ வைக்கபடும். நீத்பதியே .. யாரகா இருந்தாலும்..

    ReplyDelete