Thursday, April 26, 2012

கூடங்குளம்; அரசின் உச்ச பட்ச வன்முறை: கள ஆய்வு அறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி

கூடங்குளம்; அரசின் உச்ச பட்ச வன்முறை: கள ஆய்வு அறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி
by Marx Anthonisamy on Thursday, April 26, 2012 at 1:26am ·
கத்தியின்றி ரத்தமின்றி வன்முறையொன்றை சர்வ வல்லமைகளையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ள அரசு இன்று கூடங்குள எதிர்ப்பாளர்கள்மீது பிரயோகித்துக் கொண்டுள்ளது. சுமார் 250 குற்ற எண்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் புஷ்பராயன். குற்ற எண்கள் பலவற்றில் ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு மற்றும் 5000 பேர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆக மொத்தமாகக் கணக்கிட்டால் 50,000க்கும் மேற்பட்டவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே ஒரு பெரிய கின்னஸ் சாதனைதான் எனச் சொல்லிப் புன்னகைக்கிறார் அரிமாவளவன். மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் ஒத்துக்கொண்ட அய்ந்து அம்சங்களில் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை எனவேதான் மீண்டும் வரும் மே 1 முதல் காலவரையரை அற்ற உண்ணாவிரதத்தை அறிவிக்க நேர்ந்துள்ளது என விளக்கமளித்தார் உதயகுமார்.
புன்னகையோடு அவர்கள் காட்சியளித்தபோதும் எல்லோர் மனத்திலும் பெருங்கவலை குடிகொண்டுள்ளதை எங்களால் உணர முடிந்தது.
தற்போதைய நிலையை நேரில் அறிந்துவரும் நோக்குடன் நாங்கள் மூவரும் நேற்று (ஏப்ரல் 24, 2012) அமலாபுரம், இடிந்தகரை முதலான பகுதிகளுக்குச் சென்று பலரையும் சந்தித்தோம். இடிந்தகரை மாதாகோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தப் புகழ்பெற்ற பந்தலின் கீழ் திப்பி திப்பியாகச் சுமார் 300க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் பெண்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் நல்ல மழை. எனவேதான் இன்று கொஞ்சம் கூட்டம் குறைவு என்றார் மில்டன். இருந்தபோதிலும் தினசரி 300க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் வந்து குழுமி நாள் முழுக்க இருப்பது என்பது குறையவில்லை. ஆனாலும் மைக்கில் தொடர்ந்து பேசுதல், முழக்கமிடுதல் முதலியன நின்று போயிருந்தன..
நாங்கள் மில்டனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருஇளைஞன் வந்தான். பெயர் லிமார்வின். அவனுக்கு வெளிநாடு செல்ல விசா வந்துள்ளது. ஆனால் வழக்கொன்றில் இணைத்து அவன் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது காவல்துறை. கூடங்குளம் இடிந்தகரைப் பகுதி மக்களுக்கு பாஸ்போர்ட் கொடுப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். உதயகுமார் தொடர்ந்து வேண்டிக்கொண்டும் மக்கள் கடலுக்குப் போக மறுக்கிறார்கள் என்றார் மில்டன். எல்லோருக்குமாகச் சேர்த்து கூட்டுச் சமையல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி அபத்தமாக ஆயிரக்கணக்கில் தேசத் துரோக வழக்குகளைப் போட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் உயரதிகாரிகளைச் சந்தித்துக் கண்டித்துச் சென்றபின் சற்றே அமைதி காத்த காவல்துறை இப்போது மீண்டும் கிரிமினல் வழக்குகளை உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மீது போடத் தொடங்கியுள்ளது, 500 கோடி ரூபாய் நலத் திட்டத்தை முன்வைத்து இடிந்தகரை உள்ளிட்ட சுற்றியுள்ள பஞ்சாயத்துத் தலைவர்களைத் தம் பக்கம் இழுப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. தமது கிராமத்திற்கு ஒதுக்கும் பணத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் மூலம் பெரிய அளவு கமிஷன் அடிக்கலாம் என்கிற ஆசை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. மறைமுகமான இந்தக் கையூட்டில் மயங்கியுள்ளனர் இந்தப் பஞ்சாயத்துத் தலைவர்கள். இடிந்தகரை கிராமம் உள்ளடங்கிய விஜயாபதி பஞ்சாயத்தின் இன்னாள் தலைவர் சகாயராஜ், முன்னாள் தலைவர் வால்டர் எட்வர்ட் ஆகிய இருவரும் இன்று போராட்டத் தலைவர்களுக்கு எதிராகத் திருப்பப் பட்டுள்ளனர். அறிவித்துள்ள 500கோடிக்கும் மேலாக இன்னும் 1000 கோடி பெற்று கிராம மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்குப் போராட்டக்குழு தடையாக இருப்பதாக இன்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவர்கள் இருவரும் கொடுத்துள்ள புகார்களின் அடிப்படையில் உதயகுமார் உள்ளிட்டோர் மீது இன்று கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் ஒன்றும் அமைதிவழிப் போராட்டம் இல்லை எனச் சொல்வதற்கும் போராட்டம் வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலையில் வெறுப்புற்று தலைவர்கள் வன்முறையில் இறங்கிவிட்டனர் எனப் பிரச்சாரம் செய்வதற்கும் காவல் துறையும் உளவுத் துறையும் இந்த வேலையில் இறங்கியுள்ளன. எப்படியோ இடிந்தகரை மீனவச் சமூகத்திற்குள்ளும் ஒரு பிளவை ஏற்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெஸ்கி, ஸ்டான்லி என்கிற இடிந்தகரையைப் பூர்வீகமாகக் கொண்ட இரு காவல் துறை உதவிக் கண்ணிiப்பாளர்கள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக மக்களில் பலர் எங்களிடம் கூறினர். இவர்களில் ஒருவரது சகோதரி வீட்டில் அடுத்த வாரத்தில் ஒரு திருமணமாம். நீ வராதே என அந்தச் சகோதரியே அவரிடம் சொல்லிவிட்டாராம்.
இன்னொரு பக்கம் கூடங்குள மக்களுக்கும் இடிந்தகரை மக்களுக்குமுள்ள ஒற்றுமையைச் சிதைப்பதிலும் அரசு தீவிரமாக உள்ளது. பாதுகாப்பு என்கிற பெயரில் முப்படைகளும் அங்கே குவிக்கப்பட்டுள்ளன. கடைகளைத் திறக்கச் சொல்வது, போராட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என மிரட்டுவது, கூடங்குள வழக்குரைஞர் சிவசுப்பிரமணியம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்பதாக இம்முயற்சிகள் அமைகின்றன. இது வெறுமனே இரு கிராம மக்களைப் பிரிக்கும் முயற்சி மட்டுமல்ல. சாதி, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் முயற்சியும் கூட.
ஆனாலும் மக்களை எங்களிடமிருந்து அவ்வளவு எளிதாகப் பிரித்துவிட முடியாது எனப் போராட்டத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர். வரும் 29 அன்று தூத்துக்குடியில் நடக்க உள்ள மிகப் பெரிய ஆதரவுக் கூட்டத்தில் பெருந்திரளாக பகுதி மக்கள் கலந்துகொள்வார்கள் என்றார் உதயகுமார். தொடர்ச்சியாக 1ந் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையரையற்ற உண்ணாவிரதம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை உள்ளது.
சென்ற இரு வாரங்களுக்கு முன் சுனாமி எச்சரிக்கை செய்யப்பட்டபோது இங்கே என்ன நிலைமை எனக் கேட்டோம். எந்த எச்சரிக்கையும் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லையாம். ஆனால் அதே நேரத்தில் அணு உலை விஞ்ஞானிகளும் ஊழியர்களும் மட்டும் அன்று பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உலையச் சுற்றி ஏதோ நீர் ஊறிக் கொண்டிருப்பதாகவும் அதை அப்புறப்படுத்துவதில் விஞ்ஞானிகளின் முயற்சிகள் வெர்றிபெறவில்லை எனவும், அமைச்சர் நாராயணசாமி பீற்றுவதுபோல இன்னும் 40 நாட்களிலெல்லாம் உலை வேலை செய்யத் தொடங்குவது சாத்தியமே இல்லை எனவும் பலரும் கூறினர். இது தொடர்பாக நாங்கள் உதயகுமாரிடம் கேட்டபோது அப்படியான ஒரு பிரச்சினை அங்கு இருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் தங்களிடம் பலமுறை கூறியுள்ளதாகச் சொன்னார்.
எங்களுக்கு இம்முறை மிகவும் கவலை அளித்த விஷயம் சர்ச்சுக்கும் போராட்டக் குழுவிற்கும் ஏற்பட்டுள்ள விரிசல்தான். எந்தப் பெரிய குற்றச்சாட்டையும் வைக்காமலேயே மறைமாவட்டத்தின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அடைக்கலாபுரத்தில் சுமார் 1200 ஏதிலியர், கைவிடப்பட்டோர், மன நோயாளிகள், திருமணமாகாத தாய்மார்கள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோருக்கு அடைக்கலம் அளிக்கப்படுகிறது. அருட் தந்தை எக்ஸ்.டி.செல்வராசு அடிகளார் அவ் இல்லத்தின் தற்போதைய பொறுப்பாளர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் கழித்த ஒரு நாள் எங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று. மீண்டும் ஒருமுறை அங்கு சென்று தங்கி அந்த அனுபவங்களை விரிவான ஒரு குறு நூலாக எழுத உள்ளோம். இங்கு பொறுப்பேற்குமுன் அந்த இல்லத்தின் முன்னாள் பொறுப்பாளராக இருந்த ஒரு பாதிரியாரைச் சென்று சந்தித்தாராம் செல்வராசு அடிகளார். அவர் சொன்ன ஒரே அறிவுரை அடைக்கலம் என வந்த யாருக்கும் அடைக்கலத்தை மறுத்து விடாதே என்பதுதான். நூறாண்டுகளுக்கும் மேல் வரலாறு உள்ள அந்த நிறுவனத்தில் ஏதோ ஒரு கலத்தில் அடைக்கலம் மறுக்கப்பட்ட ஒருவர் அடுத்த நாள் வெளியிலுள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினாராம்.
அப்பா என விளித்து அந்தக் குழந்தைகளும் ஆதரவற்றோர்களும் அடிகளாரை நோக்கி ஓடி வருவதும் மகளே அல்லது மகனே என விளித்து அவர்களைத் தழுவி அவர் விசாரிப்பதும் எங்கள் கண்களில் நீர் வரவழைத்த காட்சிகள்.
ஒருநாள் இந்த அடைக்கலாபுர வீதியில் தூசு கிளப்பி விரைந்து வந்த மத்திய உளவுத்துறை வாகனத்திலிருந்து குதித்த அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் கணக்குகளைப் பரிசீலித்துள்ளனர். அன்று அங்கே இருந்தவர்களின் எண்ணிக்கை 1168 பேர்கள் என்றார் செல்வராசு அடிகளார். 1000 பேருக்கு எப்படிச் சோறு போடுகிறீர்கள் என்று கேட்டுத் துருவித் துருவி விசாரித்துள்ளனர். அடைக்கலம் வந்திருந்த சிலரையும் தனித்தனியே விசாரித்துள்ளனர். இறுதியாக வெளியேறும்போது விசாரணைக்கு வந்திருந்த தலமை அதிகாரி, “ ஃபாதர் நீங்கள் ஒரு அற்புதமான பணியைச் செய்கிறீர்கள்எனச் சொல்லிப் போனாராம். உளவுத்துறை அதிகாரியானாலும் ஒரு ஒரத்திலேனும் இதயம் ஒட்டிக்கொண்டிருக்கும் தானே.
ஆனாலும் அவர் போகும்போது கூடங்குளப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என எச்சரித்துவிட்டுத்தான் சென்றுள்ளார். ஒரு ஓரத்தில் இதயம் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவர் உளவுத் துறை அதிகாரிதானே. ‘’ நாங்கள் தேடும் கிரிமினல்களை நீங்கள் உங்களின் மத இல்லத்தில் பாதுகாப்பு அளித்துத் தங்க வைத்துள்ளீர்கள். இனியும் நீங்கள் போராட்டத்திற்கு moral support அளிப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களுக்குத் தங்க இடமளிக்கக் கூடாது. சாப்பாடு கொடுக்கக்கூடாது. ஒரு டீ கூடக் கொடுக்கக் கூடாதுஎன மறைமாவட்ட நிர்வாகம் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஒரு மத நிறுவனத்திற்குச் சில எல்லைகள் உண்டு. அந்த எல்லை வரைக்கும் தள்ளி அரசு அவர்களை மிரட்டுகிறது. போராட்டக்காரர்களின் மீதான கடும் நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும் பட்சத்தில் போர்க்குணம் மிக்க மீனவ மக்களிடம் ஏற்படுத்தக் கூடிய எதிர்வினைகளைச் சாக்காக வைத்து கடும் ரத்தக் களறி ஒன்றை அரசு ஏற்படுத்துமோ, தம் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் சர்ச் வட்டாரத்தில் நிலவுவதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பின்னணியில் சர்ச் தற்போது முன்வைக்கும் வேண்டுகோள்களும் அழுத்தங்களும்போராட்டக்காரகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மத நிறுவனத்தின் எல்லை, அதை எந்த அளவிற்குப் பயன்படுத்த இயலும் என்பது குறித்த விவாதம் இப்போது உசிதமன்று. எனினும் சர்ச்சுக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் சர்ச் கைவிட்டு விட்டதாக. போராட்டக்காரர்கள் கருதுவதும் வெளிப்படையாக உள்ளதால் அதை மட்டும் பதிவு செய்கிறோம்.
கைது செய்யப்பட்ட 202 பேர்களில் 180 பேர்களுக்கு நிபந்தனைப் பிணை கிடைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் இருவர் ஜாமீன் அளிக்க வேண்டும். மேலும் 18 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 8 பேர்கள் ஜாமீன் அளிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்று மக்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்படும்போது ஜாமீன்தாரர்களின் என்ணிக்கை மொத்தப் பேருக்குமே ஒரு சிலர் என்கிற அளவில் கொடுக்கப்படுவதுதான் வழக்கம். இப்படி ஜாமீன்தார்களின் எண்ணிக்கைய அதிகரித்திருப்பது வழக்கமில்லாத கொடுமை. வழக்கை நடத்துபவர்கள் ஏன் இதை உயர் நீதிமன்றத்தை அணுகிகுவாஷ்செய்ய முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.
முகிலன், சதீஷ் ஆகிய இருவருக்கும் பிணை அளிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் மேலும் இரு வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளன. ஆக அவர்கள் எக்காரணம் கொண்டும் பிணையில் வந்துவிடலாகாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. தங்கள் மீது இப்படி ஒவ்வொரு வழக்காகச் சுமத்தப்படுவதைக் கண்டித்து இன்று முதல் அவர்கள் இருவரும் சிறைக்குள் காலவரையரையற்ற உன்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பதாகச் சற்றுமுன் செய்தி வந்துள்ளது.
வரும் 1ந்தேதி காலவரையரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும்போது பின்னணியில் வலுவான ஒரு அரசியல் அழுத்தம் இருந்தால் நல்லது. வழக்கமாக நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றைத் தாண்டி இன்னும் கொஞ்சம் இந்த அழுத்தத்தை விசாலிப்பது அவசியம் என எங்களுக்குத் தோன்றியது. அவ்வப்போது டி. ராஜா அல்லது நல்லக்கண்ணு வந்து ஆதரவாகப் பேசிவிட்டுச் செல்கின்றனர். போராட்டக்காரர்களின்மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டுமெனக் கொஞ்சம் தாமதமாகவாவது மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை விடுகிறது. இவற்றையெல்லாமும்கூட நாம் ஏதொ ஒருவகையில் ஒருங்கிணைத்தல் அவசியமாகிறது.
தொடங்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தைப் பொருத்த மட்டில் சென்ற மாதப் பேச்சு வார்த்தைகளில் ஒத்துக் கொண்டவற்றை நிறைவேற்றுவது என்பதே முக்கிய கோரிக்கை. கடலாய்வு. புவிஅதிர்ச்சி ஆய்வு ஆகியவற்றைச் செய்வது, பேரிடர் அபாயப் பயிற்சி அளித்தல், ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை வெளியிடல், வழக்குகளை திரும்பப் பெறுதல், மக்களின் போராடும் உரிமைகளை அங்கீகரித்தல் ஆகியனவே அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள். இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தி.மு., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற அணு சக்தியை ஆதரிப்பவைகளுக்கும் கூடப் பெரிய பிரச்சினை இருக்கவியலாது. எனவே வழக்கமாக நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றோடு இக்கட்சிகளையும் நோக்கிப் போராட்டத் தலைவர்கள் ஒரு வேண்டுகோளை விடுக்கலாம். அந்த அடிப்படையில் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பது காலவரையரையற்ற உண்ணாவிரதத்திற்கு வலு சேர்க்கும் என்கிற எங்களின் கருத்தை உதயகுமார் முதலான தலைவர்களிடம் முன் வைத்தோம். அவர்களும் இதைக் கவனத்தில் வைப்பதாகக் கூறினர்.
புறப்படுமுன் நாகர்கோவிலில் இடிக்கப்பட்ட அவரது பள்ளியின் நிலை குறித்து உதயகுமாரிடம் கேட்டோம்..புகார் கொடுத்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். தாங்களே அதைப் புனரமைப்பு செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இழப்பு மதிப்பு எவ்வளவு இருக்கும் எனக் கேட்டபோது தெரியவில்லை நான் இன்னும் போய்ப் பார்க்கவில்லை என்றார்.
உதயகுமார், புஷ்பராயன், மை.பா முதலான தலைவர்கள் இன்று இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியே வந்தால் உடனடியாகக் கைது செய்யப்படுவர். இடிந்தகரை சர்ச் வெளியில் அமைக்கப்பட்டுள்ள அந்தப் புகழ்பெற்ற பந்தலை எப்படியாவது பிரிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கின்றன அரசும் காவல்துறையும். அந்தப் பந்தலைப் பிரிப்பதென்பது குறியீட்டு ரீதியாக அந்த மக்களிடமிருந்து போராட்டத் தலைவர்களைப் பிரிப்பது என்பதாக ஆகிவிட்டது. பந்தலைப் பிரித்தால் அடுத்த நிமிடம் காவல்துறை உள்ளே புகுந்துவிடும் என்றார் மில்டன்.
அங்கே நின்றிருந்த வாடகை வண்டி ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு வள்ளியூரை நோக்கி நகர்ந்தோம். சாலையில் சில இடங்களில் ஓரமாகப் பெரிய கற்கள் கிடந்தன. சில இடங்களில் பள்ளங்களும் வெட்டி மூடப்பட்டிருந்தன. என்ன என வினவியபோது சென்ற மாதத்தில் போராட்டம் உச்சமாக இருந்தபோது உள்ளே அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்காகப் போடப்பட்ட தடைகளின் எச்ச சொச்சங்கள் என்றார் ஓட்டுநர். கத்தியும் ரத்தமுமின்றி இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரச வன்முறை இறுதிக் கட்டத்தில் கத்தியும் ரத்தமும் கூடிய வன்முறையாகி விடுமோ என்கிற அச்சம் எங்களை வாட்டியது.
சென்ற இரு முறைகளும் நாங்கள் சென்றிருந்தபோது ஒளிர்ந்து கிடந்த வானம் இம்முறை மேகமூட்டத்தால் இருண்டிருந்தது.