Friday, February 3, 2012

அங்கு சிவக்குமாரன்... இங்கு முத்துக்குமார்...

வரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்...
ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்...
அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து
எழுந்து நின்ற இளைஞர்களை நானறிவேன்..
அவன் மரணம் சிலர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது..
நிச்சயம் ஒருநாள்
அவர்கள் இந்த சமூகத்தைப் புரட்டிப் போடுவார்கள்..

ஆனால்,,இன்னும் பலர் இருக்கின்றோம்...
இன்னும் எத்தனை முத்துக்குமரன்கள் வேண்டுமென்று தெரியவில்லை..
விலங்கொடித்து விடுதலையின் பாதையில் வீறு நடை போட...

உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்....
இன்னும் சில ஆண்டுகள் சேமித்து விட்டு....விட்டு...
இன்னும் கொஞ்ச நாளில் களமிறங்கி ... இறங்கி...’’
இந்த வாக்கியங்களை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போது
உயிரைவிட்ட முத்துக்குமாரை முட்டாளாக்கி விடுகின்றோம்...
ஒரு வேளை தியாகி என்பதன் பொருள் கூட முட்டாள் தானோ?

அவன் முட்டாளா? இல்லை.

அவன் புத்திசாலிகளை, எச்சரிக்கையானவர்களை...
உன்னையோ, என்னையோ நம்பவில்லை..

அவன் வரலாற்றை நம்பினான்..
கண்ணுக்கு தெரியாத ...முகநூலில் இல்லாத ....
ஊடகங்கள் காட்டாத...மேடைகளில் வாராத...
வரலாற்றைப் படைக்க போராடிக் கொண்டிருக்கும்
இளைஞர்களை அவன் நம்பினான்...

அவர்கள் அலைகளைப் போல...
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு வருவோருக்காக காத்திருப்பதில்லை...

அவர்கள் காற்றைப் போல...
நெருப்பு அணையட்டும் என்று காத்திருப்பதில்லை...

அவர்கள் பாதுகாப்பதற்காக களம் இறங்குவார்கள்...
தம்மைப் ’பாதுகாப்பு’ ஆக்கிக் கொண்டு இறங்க மாட்டார்கள்...

மூளையில் இருந்து இன்னொரு குரல்..
போதும்..நிறுத்து...
கவிதை ரசிக்க மட்டுமே....
தியாகிகளும், மாவீரர்களும் வீர வணக்கத்திற்கு மட்டுமே!

செந்தில் - தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils Movement)

No comments:

Post a Comment