Thursday, February 2, 2012

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. உரை

சென்னை: ஆளுநர் உரை மீதான விவாத்தில் கலந்து கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் பேசியதாவது:
பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும், கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைபாட்டினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுக்க, முழுக்க ஆதரிக்கிறது.

இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவம், சிங்கள மீனவர்களால் தாக்கப்படுவது, கொடுமைப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இது குறித்து ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலைகுனிய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் அவமானத்தால் கூனிக்குறுகும் நிலை ஏற்படுகிறது. மத்திய அரசை வலியுறுத்தி இதற்கு உறுதியான நடவடிக்கையை சட்டப்பூர்வமாகவும், அரசியல் பூர்வமாகவும் தமிழக அரசு எடுத்திட வேண்டும். இப்பிரச்சனைக்கு இறுதியான முடிவை எடுத்திட வேண்டும். சமீபத்தில் பாக். ஜல சந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. அதுபற்றிய விபரம் தமிழக அரசிற்கு தெரியுமா? என்பதை அவைக்கு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே கச்சத்தீவை இழந்து தமிழக மீனவர்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்க மீன்பிடிக்கும் உரிமைக்கான பேச்சுவார்த்தைக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகளும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்திட தமிழக அரசு வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமை, மொழி, தாயக உரிமை கிடைக்காத நிலையில் தமிழர்கள் அடிமைகளாக எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி உள்ளார்கள். அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்திய அரசு இதுவரை 1500 கோடி நிதி வழங்கியும் இலங்கை அரசு இதுவரை தமிழர்களுக்கு நிதியை முழுமையாக செலவிடவில்லை. எனவே இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மார்ச் 27ம் தேதி ஜ.நாவின் மனித உரிமை ஆணையம் நவநீதம் பிள்ளை தலைமையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றிய விசாரணையைத் தொடங்க உள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததை முதல்கட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்விசாரணையில் மத்திய அரசு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை போர்க்குற்றத்தை பகிரங்கப் படுத்துவதோடு, தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ளவும் வழிசெய்திட மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு எஸ்.குணசேகரன் பேசினார்.

No comments:

Post a Comment