Wednesday, February 8, 2012

கூடன்குளம் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

கூடன்குளம் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

எழுத்தாளர்கள் அருள் எழிலன், யுவபாரதி மணிகண்டன், சந்திரா ஆகியோரின் முயற்சியில் அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் விளக்கக்கூட்டம் நேற்று (04-பிப்ரவரி-2012) சென்னை லயோலா கல்லூரியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தமிழின் தேர்ந்த எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், மனுஷ்யபுத்திரன், குறும்பனை பெர்லின், அஜயன் பாலா சித்தார்த், பாமரன், பாஸ்கர் சக்தி, நிர்மலா கொற்றவை, ஞானி உட்பட பல எழுத்தாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் நிலைப்பாட்டை தெளிவாகவும், எளிமையாகவும் வெளிக்கொணர்ந்தது.

எந்தவொரு ஒரு அரசியல் கட்சியும் முன்னின்று நடத்தாத ஒரு போராட்டம் அறவழியில் மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராக நெல்லையில் உருவெடுத்திருக்கின்றது. பன்னாட்டு முதலாளித்துவத்தையும், மக்கள் விரோத இந்திய அரசையும் எதிர்த்து, தத்தமது வாழ்வாதாரங்களுக்காக போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், கூடன்குளத்தையும் அதைச்சுற்றியுள்ள மீனவ மக்களும் தலித்துகளும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் மீதான எங்கள் பார்வையை இவ்வரங்க கூட்டம் மாற்றியுள்ளது. இருப்பினும் இவ்வியக்கத்தின் முழு வெற்றி என்பது அணு உலை முற்றிலுமாக கைவிடப்பட்டு கூடன்குளம் அணு உலை திட்டத்திற்கே மூடுவிழா நடத்தப்படும் நாளில் தான். விழாவில் பேசிய படைப்பாளிகள் அனைவரது கருத்துகளும் கொண்ட ஒரு செய்திச் சுருக்கம்.

அணு உலைகளுக்கெதிராக போராடுவது இங்கே மிகப்பெரிய தேசத்துரோகமாக பார்க்கப்படுகின்றது. ஆகவே நாமனைவரும் தேசத்துரோகிகள். எனவே அங்கு போராடும் லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என தனது உரையை ஆரம்பித்தார்.

எழுத்தாளர். பா.செயப்பிரகாசம்.

நெய்தல் இயக்கச் செயலாளரான குறும்பனை பெர்லின் குமரியில் உள்ள ஒரு மணல் ஆலை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு (தோரியத்தை மணலில் இருந்து பிரிப்பதால் கதிர்வீச்சு ஏற்படுகின்றது) பாதிப்புகளினால் தனது குடும்பத்தில் பலரை புற்றுநோய் தாக்கியிருக்கிறது என்பதை தெரிவித்தார். 30,000 பேரிடம் நடத்திய ஆய்வில் 494 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இத்தரவுகளை வெளியிடாத நிர்வாகம், மீண்டும் மருத்துவர்களை வைத்து சோதித்ததில் வெறும் 19 பேர் மட்டுமே புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாக திரித்து வெளியிட்டிருக்கின்றது.

வெறும் மணல் ஆலையினால் கிளறிவிடப்படும் கதிரியக்கமே இத்தகைய பாதிப்புகளை தோற்றுவிக்குமாயின், அணு உலைகளால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியும். ஆனால் அரசோ கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படாது எனக்கூறுகின்றது, அப்படியென்றால் இந்த புற்றுநோயெல்லாம் எங்கள் முன்னோர் கருதியது போல கடவுள் கொடுத்ததா?

கூடங்குளம் அணு உலை போலவே நம்மை அச்சுறுத்தும் இன்னொரு பிரச்சனையும் நம்மை நெருங்குகின்றது. அது நியூட்ரினோ ஆய்வகம். அணு உலைக்கு எதிராக குறைந்தபட்ச விழிப்புணர்வாவது இருக்கின்றது. ஆனால் நியூட்ரினோ ஆய்வகம் பற்றியும், அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
கூடங்குளம் மக்களின் உண்மையான போரட்டத்திற்கு படைப்பாளிகளாகிய நாம் என்றுமே ஆதரவாக இருக்கவேண்டும். இருப்போம் என்றார் எழுத்தாளர். பாஸ்கர் சக்தி


எழுத்தாளர். அஜயன் பாலா சித்தார்த்தோ, இது மண்ணின் மைந்தர்களுக்கெதிராக நடக்கும் அடக்குமுறையாகும். நமது பொருளாதார சுழற்சி என்பது, நடுத்தர வர்க்கத்தின் வருவாய் மேல்தட்டு முதலாளித்துவத்தை நோக்கி திருப்பி விடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது தான் இத்தகைய அணு உலைகளை இந்திய அரசு ஊக்குவிப்பதன் காரணியாகும் என அவர் கூறினார்.

எழுத்தாளர். மனுஷ்யபுத்திரன் பேசியதிலிருந்து ’’எந்த சமூகப் பிரச்சினையிலும் அபிப்ராயம் சொல்வதில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டுமே ஏன் எப்போதும் இடம்பெறுகின்றன? பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு எந்தப் பிரச்சினையிலும் எந்தக் கருத்துக்களும் இல்லையா’என்று கேட்டார். ’’அணு உலை ஆதரவாளர்களின் கைகளில் அதிகாரம், ஊடகம் எல்லாம் இருக்கின்றது.... மக்களுக்கு இருப்பதோ தெருக்கள் மட்டுமே. அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தெருக்களில் திரள்வதே ஒரே வழி…… படித்தவர்கள் அயோக்கியர்களாக மாறி வரும் ஒரு சமூகத்தில் ஆதிவாசிகளும், கிராம மக்களும் தான் நீதிக்காக போராடி வருகின்றார்கள். இன்று கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ்காரகளும், இந்துத்துவவாதிகளும் கூடங்குளம் விவகாரத்தில் ஒரு அணிக்கு வந்துவிட்டது தான் பெரும் வரலாற்று அவலமாகும். வளர்ச்சி என்ற பெயரில் அரசு செய்யக்கூடிய படுகொலைக்கு எதிரான போராட்டம் தான் கூடங்குளம் போராட்டமாகும் .’’

எழுத்தாளர். பாமரன் பேசும் பொழுது “அணு உலையில் விபத்து ஏற்பட்டால் கையால் வாயைப் மூடிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் ஓட வேண்டும்” என்ற அணு உலை அதிகாரிகளின் ஆலோசனைகளே மக்களின் போராட்டத்திற்கு மிக முக்கிய காரணமாகும், மேலும் 1988ல் அவர் எழுதிய 'புத்தர் சிரித்தார்’ என்ற நூலை இரண்டாம் முறையாக அவர் “அணு அணுவாய் சாவோம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார், அந்த நூலிலிருந்து அப்துல் கலாமுக்கான பல கடிதங்களை வாசித்தார்.

“இந்த உலகத்திலேயே அணு குண்டை நேசிக்கிற அதே நேரத்தில் குழந்தைகளை நேசிக்கிற விஞ்ஞானி நீங்க மட்டும் தான் கலாம். எவ்வளவோ ஏவுகணை கண்டுபுடிச்சீங்க ஆனா நீங்க சொல்லாத ஒன்னே ஒன்னு அந்த ஏவுகணைக்கெல்லாம் இலக்கு மக்களாகிய நாங்கள் தானென்று”.

பெண்ணிய செயல்பாட்டாளர் நிர்மலா கொற்றவை கூறுகையில் – பெண்கள் தான் கூடங்குளம் போராட்டத்தின் பலம், பெண்கள் சமூக பங்களிப்பு அளிப்பதையும் ,போராடுவதையும், மதவாதிகளாலும், முதலாளித்துவத்திற்கு துணை நிற்கும் எந்த அரசு அமைப்புகளால் சகித்து கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது என்றார்.

இந்த விழாவின் குறிப்பிடத்தக்க நிறைவுரையாக எழுத்தாளர். ஞானியின் பேச்சு இருந்தது.1987 லேயே 15,000 மீனவர்கள் கூடிய ஒரு கூட்டத்தில் அணு உலைக்கெதிராக பேசிய பேச்சாளர்களில் ஞானியும் ஒருவர். இப்போராட்டத்தின் வயது 25 வருடம் என்பதற்கு தானும் ஒரு சாட்சியம் என்பதை எடுத்துரைத்தார்.அக்கால கட்டங்களிலேயே போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீது பொய் வழக்கு போடப்பட்டதால், வெளிநாடுகளில் தஞ்சமடைந்த இடிந்த கரையைச் சேர்ந்த பலரின் கடிதங்களை அவர் குறிப்பிட்டார். 80-களில் அமெரிக்காவின் ஒரு சின்ன பஞ்சாயத்தான ச‌ஃபோக் கவுண்டியின் எதிர்ப்பால் அவ்வூரில் கட்டப்பட்ட அணு உலையை அமெரிக்க‌ ஃபெடரல் அரசாங்கத்தையும் மூடியது. அந்த இழப்பீட்டை அவர்கள் எப்படி ஈடுகட்டினார்கள் என்பதையும் தெளிவாக முன்வைத்தார் ஞானி.

அணு உலையை எரிபொருள் மாற்று முறையின் மூலம் அனல்மின் உற்பத்தி நிலையமாக மாற்றி உபயோகித்தார்கள் எனக்கூறினார். தமிழ்நாட்டில் குண்டுபல்புகளை பயன்படுத்துவதை நிறுத்துவிட்டு, அனைவரும் CFL என்றழைக்கக்கூடிய குழல் விளக்குகள் பயன்படுத்துவதால் மட்டுமே 500 மெகாவாட் உபரியாக மின்சாரம் சேமிக்கலாம் என்ற கருத்தையும் கூறினார்.

இத்திட்டத்தை தமிழக அரசே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியது போல திட்டமிடலாம் என்பதோடு ரேஷன் கடையிலேயே குழல் விளக்குகளை விநியோகிக்கலாம் என்றுரைத்தார். மேலும், இன்று (04-பிப்ரவரி 2012) தமிழக முதல்வர் நியமித்துள்ள நிபுணர் குழுவில் போராட்டக்குழு நிபுணர்களும் இடம் பெறவேண்டும் ;அனைத்து எழுத்தாளர்களும் ஒன்று திரண்டு தமிழக முதல்வரைச் சந்தித்து இதை ஆவணச் செய்ய வேண்டும் என்று தன்னுரையை நிறைவு செய்தார் ஞானி.

Friday, February 3, 2012

அங்கு சிவக்குமாரன்... இங்கு முத்துக்குமார்...

வரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்...
ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்...
அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து
எழுந்து நின்ற இளைஞர்களை நானறிவேன்..
அவன் மரணம் சிலர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது..
நிச்சயம் ஒருநாள்
அவர்கள் இந்த சமூகத்தைப் புரட்டிப் போடுவார்கள்..

ஆனால்,,இன்னும் பலர் இருக்கின்றோம்...
இன்னும் எத்தனை முத்துக்குமரன்கள் வேண்டுமென்று தெரியவில்லை..
விலங்கொடித்து விடுதலையின் பாதையில் வீறு நடை போட...

உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்....
இன்னும் சில ஆண்டுகள் சேமித்து விட்டு....விட்டு...
இன்னும் கொஞ்ச நாளில் களமிறங்கி ... இறங்கி...’’
இந்த வாக்கியங்களை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போது
உயிரைவிட்ட முத்துக்குமாரை முட்டாளாக்கி விடுகின்றோம்...
ஒரு வேளை தியாகி என்பதன் பொருள் கூட முட்டாள் தானோ?

அவன் முட்டாளா? இல்லை.

அவன் புத்திசாலிகளை, எச்சரிக்கையானவர்களை...
உன்னையோ, என்னையோ நம்பவில்லை..

அவன் வரலாற்றை நம்பினான்..
கண்ணுக்கு தெரியாத ...முகநூலில் இல்லாத ....
ஊடகங்கள் காட்டாத...மேடைகளில் வாராத...
வரலாற்றைப் படைக்க போராடிக் கொண்டிருக்கும்
இளைஞர்களை அவன் நம்பினான்...

அவர்கள் அலைகளைப் போல...
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு வருவோருக்காக காத்திருப்பதில்லை...

அவர்கள் காற்றைப் போல...
நெருப்பு அணையட்டும் என்று காத்திருப்பதில்லை...

அவர்கள் பாதுகாப்பதற்காக களம் இறங்குவார்கள்...
தம்மைப் ’பாதுகாப்பு’ ஆக்கிக் கொண்டு இறங்க மாட்டார்கள்...

மூளையில் இருந்து இன்னொரு குரல்..
போதும்..நிறுத்து...
கவிதை ரசிக்க மட்டுமே....
தியாகிகளும், மாவீரர்களும் வீர வணக்கத்திற்கு மட்டுமே!

செந்தில் - தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils Movement)

Thursday, February 2, 2012

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. உரை

சென்னை: ஆளுநர் உரை மீதான விவாத்தில் கலந்து கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் பேசியதாவது:
பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும், கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைபாட்டினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுக்க, முழுக்க ஆதரிக்கிறது.

இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவம், சிங்கள மீனவர்களால் தாக்கப்படுவது, கொடுமைப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இது குறித்து ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலைகுனிய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் அவமானத்தால் கூனிக்குறுகும் நிலை ஏற்படுகிறது. மத்திய அரசை வலியுறுத்தி இதற்கு உறுதியான நடவடிக்கையை சட்டப்பூர்வமாகவும், அரசியல் பூர்வமாகவும் தமிழக அரசு எடுத்திட வேண்டும். இப்பிரச்சனைக்கு இறுதியான முடிவை எடுத்திட வேண்டும். சமீபத்தில் பாக். ஜல சந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. அதுபற்றிய விபரம் தமிழக அரசிற்கு தெரியுமா? என்பதை அவைக்கு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே கச்சத்தீவை இழந்து தமிழக மீனவர்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்க மீன்பிடிக்கும் உரிமைக்கான பேச்சுவார்த்தைக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகளும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்திட தமிழக அரசு வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமை, மொழி, தாயக உரிமை கிடைக்காத நிலையில் தமிழர்கள் அடிமைகளாக எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி உள்ளார்கள். அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்திய அரசு இதுவரை 1500 கோடி நிதி வழங்கியும் இலங்கை அரசு இதுவரை தமிழர்களுக்கு நிதியை முழுமையாக செலவிடவில்லை. எனவே இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மார்ச் 27ம் தேதி ஜ.நாவின் மனித உரிமை ஆணையம் நவநீதம் பிள்ளை தலைமையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றிய விசாரணையைத் தொடங்க உள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததை முதல்கட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்விசாரணையில் மத்திய அரசு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை போர்க்குற்றத்தை பகிரங்கப் படுத்துவதோடு, தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ளவும் வழிசெய்திட மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு எஸ்.குணசேகரன் பேசினார்.