Wednesday, December 28, 2011

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு ! தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு !
தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?


’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை என்ற பெயரில் ஒரு கொலைக்களம் வந்துவிடக்கூடாது என்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.’ இது தான் மூன்று மாதங்களாக இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராகப் போராடிவரும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தம் போராட்டத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் மானுடக் குரல்.


அணு குண்டு - தமிழ்நாடின் தலையில் ஒன்று…காலில் ஒன்றா?

’அணு உலை பாதுகாப்பானது தான். அறியாமையால் பாமர மக்கள் தேவையற்ற அச்சம் கொள்கின்றனர்’ என்று பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைவிடுகின்றது அரசு தரப்பு. 25 வருடங்களாக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவனின் பாதுகாப்புக்காக ஒன்றுமே செய்யவில்லை. அது மட்டும் அல்ல ஒருவன் சாவுக்கு கூட ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. பாதுகாப்புப் பற்றி நாம் கேள்வி கேட்ட போதெல்லாம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி சிறையிலடைத்தது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று நமது நீர் உரிமைகளைப் பாதுகாக்க மறுத்தது. எல்லாவற்றுக்கு மேலாக ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நாம் துடித்த போது, பச்சை படுகொலைக்கு பக்கபலமாக நின்றது இதே அரசு. முதலை கண்ணீர் வடிப்பது போல் இன்று நமது பாதுகாப்புப் பற்றி இந்திய அரசு பேசுகின்றது. கேப்பையில் நெய் வடியுது என்றால் நம்பிவிடுவோமா?

ஏற்கெனவே சென்னையில் கல்பாக்கத்தில் அணு உலை இயங்கிகொண்டிருக்கின்றது. நம் தலையில் புதைக்கப்பட்ட ஒரு அணு குண்டு. ’இதோ உன் காலிலும் ஒரு அணு குண்டைக் கட்டுகின்றேன்’ என்று கூடங்குளத்திலும் அணு உலையா? கல்பாக்கத்திலும் அடுத்ததடுத்து புதிய அணு உலைகளைத் திறக்கப் போகின்றனர். காலுக்கு தான் ஆபத்தென்று அலட்சியப்படுத்தப் போகின்றோமா? 1987 இல் கல்பாக்கத்திலும் விபத்து நடந்துள்ளது. இரண்டாண்டுகள் அணு உலை மூடப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

கொக்கோலா விளம்பரத்திற்கு விஜய், அணு உலை விளம்பரத்திற்கு அப்துல் கலாம்கள் – அறிவியல் பேசும் ஜோதிடம்


இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் என்றுமே வாய் திறவாத அப்துல் கலாம் ஓடோடி வந்து விட்டார்; மண்ணின் மைந்தன் என்று மார்தட்டிக் கொண்டு அணு உலை அமைக்கும் அத்தியாயத்தில் நடிப்பதற்கு. அதுவும் ’ரிஸ்க்’ எடுக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கின்றார். யாரிடம்? சுனாமியை வயிற்றில் வைத்திருக்கும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் மீனவர்களிடம். இயற்கை தாயின் வயிற்றைக் கிழித்து வைரம் தேடும் இலாப வெறிக்கு வழிவிடுவது தான் துணிச்சலா? நாங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு பழக்கப்பட்டு நாகரிகம் வளர்த்தவர்கள்.

’கூடங்குளத்தில் அணு உலை விபத்தே நேராது’ என்கின்றார் கலாம். ஜப்பானில் சுனாமி வந்து புகுசிமாவில் அணு விபத்து ஏற்பட்டது போல் இங்கு நேராதாம். அணு உலை வெடிக்கும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படாதாம். இது அறிவியலா? இல்லை ஜோதிடமா?

அணு உலைக்குள் ஒளிந்திருக்கு 5 லட்சம் கோடி சந்தை கணக்கு

’அணு மின்சாரத்தை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதியில்லை’ என்று அடுத்தொரு வேடிக்கை பேசுகின்றது இந்திய அரசு. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3% தான் அணுமின்சாரம். அதை 2020 க்குள் ஏழு சதவிகிதமாக உயர்த்த வேண்டுமாம். 97% மின்சாரம் அனல், நீர், காற்று, தாவரக்கழிவு என்று பிற வழிகளில் வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 30 விழுக்காடு மின்சாரம் காற்றிலிருந்து பெறப்படுகின்றது. சுமார் 900 மைல் கடல் பரப்பைத் தன்னகத்தே கொண்ட தமிழகத்தில் காற்றுக்கு பஞ்சம் இல்லை. காற்றிலிருந்து மின்சாரம் எடுப்பதை விரிவாக்க இந்திய அரசு போதிய முனைப்பு காட்டாதது ஏன்?

மறுபுறம், இந்தியாவிடம் அணு மின்நிலையத்தை நிறுவவோ, செயலிழக்கச் செய்யவோ கைவசம் தொழிற்நுட்பம் இல்லை. அணு உலைக்கு தேவையான எரிபொருள் யூரேனியம். அதுவும் இங்கு இல்லை. அணு உலை வெடித்தால் இழப்பீடு தரவல்ல காப்பீடு நிறுவனங்களும் இங்கு இல்லை.மொத்தத்தில் நிர்மானம், எரிபொருள், காப்பீடு என்று எல்லாவற்றுக்கும் வெளிநாட்டுக்காரனிடம் பணம் கட்ட வேண்டும். இன்னும் 36 அணு உலைகளை இந்தியப் பரப்பெங்கும் திறக்கும் பொருட்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி என்று எல்லா மேற்கத்திய நாடுகளும் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன . இப்படி உருவாகப் போகும் அணு சந்தையின் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்று நமக்கு தெரிகின்றதோ இல்லை ஒப்பந்தம் போட்ட வெளிநாட்டுக்காரனுக்கு தெரியும். மொத்தத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அணு சந்தையை உருவாக்கி அதை பன்னாட்டு முதலாளிகளுக்கு பங்கு போட்டுக் கொடுப்பது தான் இந்திய அரசின் நோக்கம். அதன் தொடக்கப் புள்ளிதான் கூடங்குளம்.

தமிழ்நாட்டில் இன்று தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 18% மின் கடத்தும் பொழுதே வீணாகிவிடுகின்றது. இது இந்திய அளவில் 40%. இப்படிப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் எதைக் கொண்டும் நிரப்பமுடியாது.. ஆனால், அணுமின்சார தொழிற்நுட்பத்தை நமக்கு விற்று இலாபம் பார்க்க ஏங்கும் அதே நாடுகளில் இந்த மின் கடத்தல் இழப்பு மிக மிகக் குறைவு((8%க்கும் கீழ்). ஆனால் அவர்கள் அந்த தொழிற்நுட்பத்தை நமக்குத் தர மாட்டார்கள். இந்திய அரசும் கேட்காது. விலை அதிகமான பொருள் தான் சிறந்தது என்று தரகன்(இந்திய அரசு) சொல்வான்; வியாபாரி(பன்னாட்டு கம்பெனிகள்) விற்பான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் நாட்டில் காலாவதியாகிப் போன, குப்பையில் தூக்கி வீசப்படும் சரக்கைத் தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றான். இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அணுமின் உற்பத்தியை கைவிட ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் முடிவு செய்துள்ளன. ஆனால், ஜெர்மனி அணுமின் தொழிற்நுட்பத்தை விற்க இங்கே கடை விரிக்கின்றது.

’நாமெல்லாம் ஆட்டு மந்தை. மொத்தத்தில் எல்லாம் சந்தை’ – இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை


கல்வி கடை சரக்காகிவிட்டது. தரமான மருத்துவம் ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்டது. விவசாயம் வளர வேண்டியது நம்முடைய தேவை. அதை பயன்படுத்திக் கொண்டு ’பசுமைப் புரட்சி’ என்று சொல்லி உர சந்தையை உருவாக்கியது இந்திய அரசு. யூரியாவை. விற்றுத் தீர்த்து கொள்ளை லாபம் பார்த்தார்கள். ஆனால், விளைநிலம் மலடாய் போனது. உரம் வாங்கியே கடனாளி ஆனான் நம் விவசாயி. கடைசியில் மானத்துக்காக தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானான். இங்கு வளர்ச்சி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையில் மட்டும் என்று ஆனது. பதினைந்து வருடத்திற்கு முன் தொடங்கி இப்போது குடிக்கும் தண்ணீருக்கு கூட இங்கு ஒரு சந்தை உருவாகிவிட்டது.

உள்நாட்டு சில்லறை வணிக சந்தையைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாரி கொடுப்பது ஒரு புறம். இருக்கும் மின்சாரத் தேவையைப் பயன்படுத்தி அணு வியாபாரிகளுக்காக அடுத்தொரு சந்தை உருவாக்கம் இன்னொருபுறம். அதுவும் கொலைகார அணுமின் தொழிற்நுட்பம் அது! இதற்காக பால்,பேருந்து,சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விலையை உயர்த்தி 'வளர்ச்சிக்கான சுமையை' மக்களின் தலையில் ஏற்றுவது தவிர்க்க முடியாததாம்.

இந்தியாவின் காலடியில் தமிழ்நாட்டின் மானமும் ஜனநாயக உரிமையும்


ஈழத் தமிழர்களைக் காக்கத் தமிழகம் துடித்தெழுந்த போது துச்சமாக மதித்தது இந்தியா. தமிழினப்படுகொலைக்கு துணை நின்றது. போர்க்குற்ற விசாரணைக்கு போராடிக் கொண்டிருந்த போது மூன்று தமிழர் உயிரைப் பகடைக் காயாக்கி நம்மைச் சிதறதடித்தது. போராட்டம் திசை மாறித் தொடர்ந்தது. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். அன்னிய சக்தியின் சதி என்று அவமானப்படுத்தியது. அதற்குள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பகடைக் காயாக்கி, கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கு பகை மூட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் உரிமைப் போராட்டம் நடத்தும் போது அடுத்தொரு உரிமையைப் பறித்து நம்மைத் சுழற்றி அடிப்பதைத் தன் உத்தியாகக் கையாள்கின்றது. முதுகில் குத்தும் துரோகம் என்று நாம் எச்சரித்த காலம் ஒன்றுண்டு. இப்போது நடப்பது வேறு. ஒவ்வொரு முறை நாம் கண்ணை மூடித் திறக்கும் போது நம் நெஞ்சில் குத்தி இரத்த சுவை பார்க்கின்றது.

அணு உலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டம்,
தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை
மீட்க நடக்கும் போராட்டம் !

பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாட்டை
மாற்றுவதைத் தடுக்கும் போராட்டம் !

இந்திய துணைகண்டத்தில் கண்ணி வெடிகள் போல
அணு உலைகளைப் புதைக்க நினைக்கும்
இந்தியாவின் மனிதகுல விரோத கொள்கைக்கு
எதிரானப் போராட்டம்.

இந்த போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும்.
அதற்கு நாமெல்லோரும் ஒன்றாக வேண்டும்.

----தமிழர் பாதுகாப்பு இயக்கம் (Save Tamils Movement)

Wednesday, November 23, 2011

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு


மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள்.



முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்;ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம்-999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும் விலங்குகளும் மனிதக் கூட்டமும ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.



முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டி விட்டார். உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.



ஆனால், இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை-999 என்ற படம் எடுக்கப்பட்டுள்;ளது.



முல்;லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விpசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்;ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்;களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.



இந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.


வருகிற 25 நவம்பர் 2011 அன்று அணை-999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடா;ப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள்; இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்;கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை

Monday, November 7, 2011

காமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு

அக்டோபர் 28 - 30, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் 54 நாடுகள் கலந்துகொண்டன. இம்மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (Transnational Government of Tamil Eelam- TGTE) பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. டீ.ஜி.டீ.ஈ யின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இதில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பாக விசாரிக்க வேண்டுமென்றும், போர்க்குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் அமைப்பின் சார்பாக மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள், விசாரணைக்காக காமன்வெல்த் மனித உரிமை ஆணையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது தமிழீழ பொதுமக்கள் கொல்லப்படுவது தெரிந்தே இந்தியா அந்நாட்டு அரசுக்கு ஆயுதம் வழங்கியதாலும், அந்நாட்டு ராணுவத்திற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாலும், இந்தியாவும் போற்குற்றவாளியின் வரிசையில் நிற்க நேரிடும் என்பதாலேயே, காமன்வெல்த் சார்பாக மனித உரிமை ஆணையம் அமைய இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன்மூலம் இலங்கை போர்குற்றம் புரிய இந்தியா உடந்தையாக இருந்தது என்பதே உறுதிபடுத்தப்படுகிறது.

சமீபத்தில், தி ஆஸ்திரேலியன் கிரீன் கட்சி, ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி, மெல்பர்ன், டார்வின் போன்ற நகரங்களில் தமிழர்களோடு ஆஸ்திரேலியர்களும் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். டீ. ஜி. டீ. ஈ க்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கொடுக்க பட்ட வாய்ப்பு என்பது, எதிர்காலத்தில் அமைய இருக்கிற தமிழீழ அரசுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

Tuesday, October 18, 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்.

ஊடக அறிக்கை:

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்.


யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ஒட்டுண்ணிகளும் என சந்தேகிக்கப்படும் இவர்கள் திரு தவபாலனை பின் தொடர்ந்து சென்று கூர்மையான இரும்புக் கம்பிகளால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அருகே இவ் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள்.


திரு தவபாலன் அவர்கள் கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக மாணவர்களை திரட்டி ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை சமீபத்தில் நடத்தி வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வன்னி போர் முடிவுக்குப் பின்னர் கல்விச்சமூக நபர்கள் இரும்பு கம்பிகளால் தாக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இச் சம்பவங்களை பார்க்கும்போது இவையாவுமே மக்களின் குரல்வளையையும் மாணவர்களின் எழுச்சியையும் நசுக்கும் வகையில் நடாத்தப்படும் திட்டமிட்ட நாசகாரச்சதி என்பது புலப்படுகிறது.


திரு தவபாலன் மீது நடத்தப்பட தாக்குதலானது ஒட்டுமொத்த தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. மாணவர்களை தொடர்ந்து சீண்டி வருவதும் அவர்களின் குரல்வளையை திட்டமிட்டே நசுக்க நினைப்பதும் அன்று தொட்டு இன்று வரை இலங்கை அரசு கையாளும் ஒரு பிரபல யுத்தி. இலங்கை அரசின் சூழ்ச்சிகளை உலகிற்கு வெளிக்காட்டுவற்கும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை எடுத்துரைப்பதற்கும் தமிழ் மாணவர்கள் என்றுமே தயங்கியதில்லை என்பதற்கு கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக நடந்த ஆர்பாட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நியாயத்திற்காக அற வழியில் போராட்டங்களை நடத்தும் தமிழ் மாணவர்களின் குரல் இவ்வாறு திட்டமிட்டு நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.


முள்ளிவாய்க்கள் இனப்படுகொலையை பொறுக்க முடியாமலும் தமது சகோதர சகோதரிகளின் இழப்பை தாங்க முடியாமல் பல்கலைக்கழக சமூகம் மே 2009 தங்களது கல்வியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி இருந்தார்கள், அதே ஆண்டு நவம்பர் மாதம் நான்கு கலைப்பீட மாணவர்களை இலங்கை ராணுவ உளவுப் பிரிவினரால் கூட்டி செல்லப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டது, பின்பு ஜனவரி 2010 மீண்டும் தமிழ் மாணவர்கள் உட்பட தமிழ் அமைச்சர்களுமாக 13 பேருக்கு இலங்கை அரச ராணுவத்தாலும் அதன் ஒட்டுண்ணிகளாலும் உயிர் அச்சுறுத்தல், மே 2011, 32 சிங்கள மாணவர்களை புதிதாக இணைத்து முள்ளிவாய்க்கள் நினைவு நாளை குழப்புமுகமாக புத்தரின் பிறந்த தினத்தை கொண்டாடியது, கோத்தபாயவின் நேரடி உத்தரவில் மாணவர்களை கண்காணிக்கும் பிரிவு, வன்னியில் இருந்து வந்த மாணவர்களுக்கு வழங்க நினைத்த உதவிகளை ஒட்டுண்ணிகள் மூலம் தடுத்தல், ரோபர்ட் ஒ பிளேக் கல்வி சமூகத்தை சந்திக்கும் பொது இடையூறு விளைவித்தல் என பல சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகிறது எமது இளைய சமுதாயம்.


கல்விபீடமனது பெரும் கெடுபிடிகளுக்கு நடுவே வன்னிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18ம் திகதி 2010ம் ஆண்டு நினைவஞ்சலியை நடத்தியிருந்தது, மாணவர் எழுச்சி நாள் அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவை நினைவில் நிறுத்தி அஞ்சலி செய்தார்கள். தொடர்ந்து இருந்துவரும் அழுத்தங்களுக்கு நடுவிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது திட்டவட்டமான கருத்துக்களை கூட்டங்களிலும், மாநாடுகளிலும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் வலியுறுத்தி வருகின்றார்கள்.


இலங்கை அரசும் அதன் ஊதுகுழல்களும் பல்கலைக்கழக நிர்வாக விவாகரங்கள் மீது கட்டுப்பாடு செலுத்துவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும், எமது மாணவ சமுதாயம், பொதுமக்கள் மற்றும் இளையோர்கள் மீதும் நடக்கும் தாக்குதல்களை அனைத்துலகம் கண்டிப்பதோடு நில்லாமல் அவர்களுடைய பாதுக்காப்பையும் உறுதி செய்யவேண்டும். அதே நேரத்தில் புலத்தில் இருக்கும் இளையோர்கள் சார்பில் தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம் இத் தாக்குதலை வன்மையாக கண்டிக்குறோம் அத்தோடு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.


எந்த தடைகளும் எம்மை பணிய வைப்பதில்லை, புதிய விதிகள் எழுதி எமது தாயக விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்.


தமிழ் இளையோர் அமைப்பு

ஐக்கிய ராச்சியம்


--

Media Team
Tamil Youth Organisation - United Kingdom

Follow us: http://twitter.com/#!/TYOUK
Face Book: http://www.facebook.com/#!/pages/TYO-UK/137873056261812
Web: http://www.tyouk.org

Friday, June 3, 2011

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் கழகம் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னனி மனித உரிமை அமைப்புகள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று காலை நடைபெற்ற இந்த மன்றத்தின் உருவாக்க கூட்டத்தில், Save Tamils இயக்கம் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிய பின், சனல் 4 செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்ற காணொளிகள் திரையிடப்பட்டன.




இதை தொடர்ந்து ஐ.நா நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பேராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்களும், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து திரு. கண குறிஞ்சி அவர்களும் டப்ளின் தீர்ப்பாயம் குறித்து பேராசிரியர் பால் நியூமன் அவர்களும் விளக்கிப் பேசினார்கள்.

பின்னர் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் இம்மன்றத்தின் தேவை குறித்தும் பின்வரும் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழினப் படுகொலைதான் நடந்துள்ளது. கடந்த நூற்றாண்டு மனித நாகரிகத்திற்கு ஏராளமானப் பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு மனித நாகரிகத்தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையையே இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி கொன்றதன் மூலம் இலங்கை அரசின் நோக்கமானது இலங்கையில் தமிழர்களை இல்லாது ஒழிப்பதே என்று தெள்ளத் தெளிவாகின்றது.

அண்மைக் காலங்களில் மனிதகுலத்திற்கு எதிரான பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன, ’தட்டிக் கேட்பாரின்றி தாங்கள் நினைத்த எந்த நாட்டுக்குள்ளும் நுழையலாம், நினைத்ததை எல்லாம் செய்யலாம்’ என்ற நிலை உருவாகியுள்ளது. இதை மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இலங்கையில் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தியதன் மூலம் இதை ஒரு முன்மாதிரியாக உருவாக்கியுள்ளன ஒடுக்குமுறை அரசுகள். இது தமிழர் பிரச்சனை அல்ல. இது ஒரு ஜனநாயகம் மற்றும் மனித குலத்திற்கானப் பிரச்சனை. இந்த ’இலங்கை முன்மாதிரியை’ இந்தியாவிலும் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

இக்காலகட்டத்தில் மக்களின் மனித நேய உணர்வையே அழித்து வருகின்றன அரசுகள். இந்த மன்றத்தின் வாயிலாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையைப் பரவலாக இந்திய மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் இந்த சமூகத்தின் மனிதத் தன்மையை வளர்த்து எடுக்க வேண்டும்.



மேற்கத்திய நாடுகளில் தான் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் நடந்த அநீதிகளுக்கான நீதி விசாரணைகள் நடந்ததில்லை. எனவே, இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதன் மூலம் இனி இத்தகைய அநீதிகள் நிகழாதவண்னம் தடுக்க வேண்டும்.

இந்த ஐ.நா அறிக்கை இந்தியாவில் உள்ள முன்னணி மனித உரிமையாளர்களுக்கே தெரியவில்லை. இதை மிகவும் பரவலாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது.

இலங்கை முன்மாதிரியை மீண்டும் மீண்டும் பல்வேறு மக்களினங்கள் மீது நடைமுறைப்படுத்தும் அபாயமிருக்கும் இன்றைய சூழலில், போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் எதிரான மன்றம் இன்றியமையாதது என்ற கருத்து எல்லோராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இம்மன்றத்தின் உடனடி வேலையாக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை அறிமுகப்படுத்தி கூட்டங்களை நடத்துவது, வாய்ப்பு இருக்கும் இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பது. இம்மன்றத்தை மேற்கு வங்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பரவலாக்குவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் கோரிக்கைகள் இந்த மன்றத்தின் முதன்மையான கோரிக்கைகளாக முடிவுசெய்யப்பட்டுள்ளன.



ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்துள்ள இலங்கை அரசு மீது சார்பற்ற பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள சனநாயக ஆற்றல்களை நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணையை ஆதரித்து அதனை தொடர்ந்து நடத்தக் கோரியும் இந்தியா முழுவதும் உள்ள சனநாயக ஆற்றல்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 ம் ஆண்டு பதவியேற்றது முதல் இலங்கை அரசுடனான வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.




தமிழக அரசை நோக்கி,

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரித்தும், போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

Monday, March 21, 2011

உழைக்கும் பெண்களின் சம உரிமைக்கான நூற்றாண்டுப் பயணத்தில் எங்கே நாம்?




இன்று, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல தனியார் துறைகளிலும், அரசுப் பணிகளிலும் லட்சகணக்கான பெண்கள் ஆண்களுக்கு சமமான சம்பளத்தோடும் மற்றும் சில உரிமைகளுடனும் பணியாற்றுவதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நூற்பாலைகளிலும் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் 15 மணி நேர வேலை, மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பற்ற வேலை சூழல் என எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தார்கள் பெண்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான சம்பளம், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, தேர்தலில் வாக்குரிமை, பாதுகாப்பான வேலை சூழல் போன்றவற்றிற்காக கடும் போராட்டங்களை நடத்திவந்தனர். தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இந்த கோரிக்கைகளை முன் வைத்து 15,000 பெண் தொழிலாளர்கள் திரண்டு நியூயார்க் நகர வீதிகளில் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். இந்த காலக்கட்டத்தில் பெண் தொழிலாளர்களின் சம உரிமைக்கானப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1910ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடைப்பெற்ற அனைத்துலக உழைக்கும் பெண்கள் மாநாட்டில், உலகம் முழுவதுமுள்ள பெண் தொழிளாலர்களின் சம உரிமைக்கான போராட்டத்தின் ஒரு வடிவமாக, உலகம் முழுவதும் ஒரே நாளில் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாடுவதென முடிவெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 1911ஆம் ஆண்டு முதல் அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் ஒரு போராட்டத்தினமாக கொண்டாடப்பட்டது. இந்த 2011ஆம் ஆண்டு அனைத்துலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டு.

பல தொடர் போரட்டங்கள் மூலமாகவே இன்று பெண்கள் பணியிடங்களில் ஓரளவு உரிமைகளைப் பெற்றவர்களாக உள்ளார்கள். இந்த வெற்றிகளை நாம் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில் இன்று அனைத்து தளத்திலும் பெண்களின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்து சம உரிமைக்கான போராட்டத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய தருணமிது.

· இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்படுகிறாள், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் நோக்கத்தற்காக கடத்தப்படுகிறாள், 54 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள், 90 நிமிடத்திற்கு ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது, என பெண்களுக்கு எதிரான வன்முறை சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

· இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ள 43 கோடி பேர்களில் 95.9 சதவிகிதம் பெண்கள். இவர்களின் பாதுகாப்புக்காகச்வென்று ஒரு சட்டம் கூட இல்லை.

· பெரும்பாலான திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இன்னபிற ஊடகங்களும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே சித்தரிக்கின்றன

· வேலை நேரம், பணிசுமை என்பது பற்றி பேசுவதே குற்றம் என்றாகிவிட்ட இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட கார்ப்பரேட் சூழ்நிலையில், பணி சுமையால் உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களுக்கு ஆளாவதுமட்டுமல்லாமல், அனைத்து வீட்டுவேளைகளையும் தானே செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் பெரும்பாலான வேலை பார்க்கும் பெண்கள்.

· அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள், ஊடகத்துறை, விளையாட்டு, அரசியல் என்று எல்லாத் துறையில் பெண்கள் சரி நிகராக இருக்கின்றார்களா? அரசியலில் பெண்களுக்கு 33% சதவிகித இடஒதுக்கீட்டைச் சட்டமாக்க முடியவில்லை நமது ஜனநாயகத்தில்.

· 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைப்பார்த்த பெண்களின் நிலையில்தான் இன்று திருப்பூரில் ஆயத்தஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் நம் பெண்கள் உள்ளனர். ‘சுமங்கலித் திட்டம்’ போன்ற திட்டங்களின் பெயரில், ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த ஊதியம், மிக அதிக வேலை நேரம் என பெண்களின் உழைப்பை சுரண்டுகின்றன. அதே போல் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்களும் நடக்கின்றன.

பெண்களின் உரிமைப் போராட்டம் கடந்து வந்த பாதையைக் கொண்டாடுவதோடு, இனி போக வேண்டிய தூரத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.